முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் ஆங்காங் தமிழோசை வானொலியில் 25.07.2015 அன்று தொலைபேசி வாயிலாக “தமிழ் நாடு மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் வரலாறு” என்ற நிகழ்ச்சியில் பேசியது.(4)
நிருபர் : அடுத்த கேள்வி என்னன்னா
வெளிநாட்டில் வாழ்கிற எங்களைப் போன்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த தலைமுறையினரிடம் எப்படி இந்த செம்மொழியை கொண்டு சேர்க்கலாம்.
இப்ப ஆங்காங்கில் இப்போ எங்களால் முடிந்த லெவலுக்கு சில தமிழ் வகுப்புகளெல்லாம் நடத்தி தமிழை பரப்பிட்டிருக்கிறோம். பட் இதைத்தவிர உங்ககிட்ட வேற ஏதாவது சஜஷன் ஏதாவது இருக்கா? இதை எப்படி கொண்டுபோய் சேர்க்கலாம் என்று ?
திரு.அவ்வை நடராசன்
இது ரொம்பவும், மிகவும் இடர்பாடான ஒரு கேள்வி.
ஏனென்று கேட்டால், என்னுடைய பிள்ளைகளே கூட வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைமுறையில் தாய் மொழியில் தம் பண்பாடும், தம்முடைய பழக்க வழக்கமும் தம்முடைய எண்ணங்களும் பரவ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நான் படித்தவரையில் அண்மையில் ஒரு கருத்தைப் படித்தேன்.
எந்த மொழி ஒரு குழந்தையின் காதில் தொடர்ந்து 6 மணி நேரம் விழுகிறதோ, அவர்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் பழகுகிற நண்பர்களிடத்தில், சென்று வருகின்ற அங்காடிகளில் அவர்கள் கூடுகின்ற இடங்களில் எந்த மொழி பேசப்படுகிறதோ அந்த மொழி அந்தக் குழந்தைகளின் மனதில் ஊடுருவி விடும். அது ஊடுருவி விடும்.
அவர்கள் எவ்வளவுதான் உயர்ந்தாலும் கூட தாய் தந்தையர் காலத்து பழக்க வழக்கங்களை அவர்கள் வளர்ந்து வருகின்போது பயன்படுத்துவார்கள் என்பதுதான் இயல்பு. அவர்கள் இழக்கக்கூடாது என்பதால்தான் நாம் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறோம், பரதநாட்டியம் கற்றுக்கொடுக்கிறோம். திருமுறைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறோம். கோயில்களை கட்டி வைக்கிறோம். வழிபாடு செய்ய வாருங்கள் என்று அழைக்கிறோம்.
ஆனாலும் பாருங்கள் இந்தப் பிள்ளைகளுக்கு ஒரு 6 ஆண்டுகள் 7 ஆண்டுகள் கழித்த பிறகு இந்தப் பழக்க வழக்கங்கள் அப்படியே வற்றி விடும் என்பதுதான் என்னுடைய கருத்து.
நீங்கள் நினைக்கிறதுபோல கலை என்பதும் பண்பாடு என்பதும் தேக்கு மரத்து உறுதியோடு இவர்கள் உள்ளத்தில் போய் நிற்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை.

Add a Comment