பொன்னேட்டில் பொதிந்த புகழாரம் !
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
(முன்னாள் துணைவேந்தர்)
மஸ்கட் மண்டலத்தை ஆளும் மன்னர் பெருமான் ஓமன் நாட்டுக் கோமான் அவர்களின் உன்னதத்தையும் புகழையும் ஓயாமல் பாடி மகிழ்வது மஸ்கட் மக்களுக்கு என்றும் மகிழ்ச்சியும் நிறைவும் தருவதாகும்.
நாட்டின் வளமும், மக்களின் மன நலமும், வணிகத்தின் வளர்ச்சியும், தொழிலில் பெருமிதமும், கல்வி கலைகளில் செழிப்பும், மக்களிடையே அயராத உழைப்பும் அமையவேண்டும் என்பது எங்கள் அரசர் பெருமானின் நோக்கமாகும்.
நாளும் அவர் கனவு மலர்ந்து வருகிறது. வைர எழுத்தால் எழுதும் அவருடைய வரலாற்று வரிகள் அரியணையில் அரசர் அமர்ந்த 45 ஆம் ஆண்டைய பெருமிதத்துக்குப் பேரொளி சேர்க்கிறது.
கனிவுடைய நம் மன்னர் தொட்டால் கல்லும் கனியாகும், முள்ளும் மலராகும்.
உலக அமைதிக்காகவும் நல்லிணக்க ஒருமைப்பாட்டுக்கும் புகழ்வாய்ந்த மன்னரின் திருப்பெயர் நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருந்ததையும் நாம் அறிவோம்.
மஸ்கட் நாட்டுச் சாதனைகளின் பொன்னேடுகளை ஆங்கிலத்திலிருந்து தொகுத்து வனப்போடு வரைந்திருக்கும் இந்தப் பொன்னேட்டில் பக்கமெல்லாம் பளிச்சிடுகின்றன.
என் அருமைத் திருமகள் சித்ரா நாராயணன், எம்.ஏ., தன் வாழ்வை ஓமன் நாட்டு இளம் பயிர்களுக்குக் கல்வி நீரோடையின் அமுதமூட்டி வருகிறார்கள்.
வாய்திறக்கும் போதெல்லாம் ஓமன் நாட்டு மன்னர் வாழ்க என்று அவர் உச்சரிக்காத நாளில்லை.
மேன்மையும் பெருமையும் வாய்ந்த மேதகமைக்கு ஒளியூட்டும் சுல்தான் காபூஸ் பின் சையது அவர்களுக்குப் போற்றி மலர்மாரி பொழிவதில் இந்த அலங்கார ஏடு மேலும் புகழ் சேர்க்கிறது.
வாழ்க மாமன்னர் புகழ் ! ஓங்குக ஓமன் நாட்டு உன்னதம் !

Add a Comment