புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.
ஔவை 81 – முத்து விழா
பகுதி-2
தியாகராசர் கல்லூரியில் நான் பணியாற்றியபோது, என்னோடு பேராசிரியர் தமிழண்ணல், அண்மையில் மறைந்த தமிழ்ப்பல்கலைக் கழக துணை வேந்தராக இருந்த, மகாதேவன், இவர்களெல்லாம் என்னோடு உடன் பணியாற்றினார்கள். பேராசிரியர் சு.பாலச்சந்திரன் போன்ற இவர்களோடு உடன் இருந்ததால், எந்நேரமும் தமிழ்ப்பாடல்களையும், தமிழ்க் கவிதைகளையும் படித்து, சொல்லி, பேசுகிற ஆர்வம் வந்தது.
தொடக்க ஆசிரியராக என்னுடைய பணியை தியாகராசர் கல்லூரியில் தொடங்கியபோது, ஒத்த வயதினரான பேராசிரியரான மீரா, பேராசிரியர் அப்துல் ரகுமான், மாணவர்கள் அபிபுல்லா, மேத்தா, நா.காமராசன், காலம் சென்ற காளிமுத்து முதலியோர் மாணவர்களாகவும், என்னோடு நெஞ்சார பழகும் நண்பர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் அப்படி இருந்ததால், வாய்விட்டு பேசுவதெல்லாம் கவிதைகளாகவும், எண்ணுகிற எண்ணங்களையெல்லாம் எப்படி எதுகை மோனையோடு கலந்து பேசலாம் என்பதையும் தொடர்ந்த ஆர்வம் என்னெஞ்சத்தை கவர்ந்து கொண்டது.

Add a Comment