புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.
————————————–
ஔவை 81 – முத்து விழா
————————————–
பகுதி-7
அந்த நேரத்திலேதான் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள், இராமலிங்கர் பணி மன்றம் என்று ஒரு நிறுவனத்தை தொடங்குவதாகவும், அதற்கு ஒரு நல்ல ஆற்றல் வாய்ந்த, தமிழ் உணர்வு ததும்புகிற ஓர் இளைஞர் செயலாளராக இருந்தால், எங்கள் கருத்துக்களை நாங்கள் பரப்புவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார்கள். நான் இங்கே மகிழ்ச்சியாக குறிப்பிடுவது, எனக்கு அங்கே பெருந்துணையாக இருந்தவர், அருட்பா கிரிதாரி பிரசாத் என்று நான் சொல்ல வேண்டும்.
வெள்ளம்போல் பேசி, மக்கள் உள்ளங்களைக் கவர்ந்தது என்றால் மிகையில்லை. அவர் தமிழில் பெரும் புலமை உள்ளவர், ஆங்கிலத்தில் புலமை உள்ளவர். கீதையில் கரை கண்டவர், அவர் மரபாக இந்தி பேசும் குடும்பத்தில் இருந்து வந்தவர். அந்த நிலையிலேதான் நான் ஆயிரக்கணக்கான ஆங்கில நூல்களை அவரோடு இருந்து படிக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அருட்ச்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம், கிரிதாரி பிரசாத், நான் ஆகிய நாங்கள் மூவரும் டில்லி மாநகருக்கு ஒரு திங்கள் சென்று, அங்கு பல்வேறு இடங்களில் பேசினேன். அங்கு அருட்செல்வருக்கு எனக்கு ஏற்பட்ட பழக்கத்தினால், சான்றோர்கள், செல்வந்தர்கள், பொதுமக்கள், வணிகர்கள் அனைவரிடத்திலும் பழகுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது, என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெருமிதத்தை தந்தது.

Add a Comment