புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.
————————————–
ஔவை 81 – முத்து விழா
————————————–
பகுதி-9
எவ்வாறு கலைஞர் அவர்கள் எனக்கு மதிப்பில் பெரியவராக தெரிந்தாரோ, அதே நிலையில், ஒத்த நிலையில் நான் பச்சையப்பன் கல்லூரியில் மாணவனாக இருந்தபோதே, புரட்சித்தலைவர் அவர்களோடு எனக்கு ஒரு நெருங்கிய நட்பு இருந்தது. அந்த நட்பினால், இல்லாமையால் வருந்துகின்ற மாணவர்களை அழைத்துக் கொண்டுபோய், அவர்களுக்கு நிதி உதவி பெற்று தருவதும், அவர்களுக்கு திங்கள்தோறும், அந்த கல்லூரிச் செலவைக் கட்டுகிற வாய்ப்பை பெற்றுத் தருவதுமாக என்னுடைய நட்பு இருந்தது.
அவர் அந்த வகையில் என்பால் பேரன்பு கொண்டவராக இருந்தார். அது எனக்கு வாய்த்த ஒரு பெரிய நற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும். கலைஞருக்கு அடுத்து அவர்தான் முதலமைச்சராக வந்தார். என்னைப் பார்த்தவுடனேயே எனக்கு முன்னாலேயே நீங்கள் அரசுக்கு வந்துள்ளீர்கள் என்று சிரித்து சொல்லி, என் தோளைத் தழுவினார். அவருடன் எந்த நிகழ்ச்சியிலும் நான் பங்கு பெறுவேன். நான் முதலமைச்சருக்கு வேண்டியவன் என்று அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த்து. இந்த நிலையில், நான் மொழிபெயர்ப்புத்துறையில் ஒரு பத்தாண்டுகாலம் நிறைவடைகிறது என்று போய் நான் கேட்டேன், “எனக்கு இந்த துறை போதும், இந்த துறையை விட்டு வேறு இடத்திற்கு நான் செல்வதற்கு நீங்கள் வழி செய்ய வேண்டும்” என்று கேட்டேன். அதற்கு அவர் கேட்டார், “நான் என்ன வழி செய்வது, நீங்கள் எந்த துறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள், நான் அனுப்புகிறேன்” என்று சொன்னார்.

Add a Comment