புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.
————————————–
ஔவை 81 – முத்து விழா
————————————–
பகுதி-10
அப்போதுதான் நான் சொன்னேன், “அரசு செயலாளர்கள் என்று, ஒரு இருபத்தைந்து பேருக்கு மேல் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் தங்கள் துறையில் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது மட்டுமில்லை, அவர்கள் மைய அரசில் இந்திய ஆட்சிப் பணி தேர்வு பெற்றவர்கள், அதனால், அவர்கள் துறைச் செயலாளர்களாக வர முடிகிறது. தமிழுக்கு அதுபோல, தமிழ் சார்ந்த துறைகள் என்று பார்த்தால், ஒரு எட்டு பத்து பிரிவுகள் இருக்கின்றன. தமிழ் வளர்ச்சித்துறை என்பது, மொழிபெயர்ப்புத்துறை என்பது, அருங்காட்சித்துறை என்பது, நூலகத்துறை என்பது, அகராதித்துறை என்பது, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் என்பது, தமிழ்ப்பல்கலைக்கழகம் என்பது என்கிற வகையில் இருக்கிற பிரிவுகளையெல்லாம் ஒன்றாக்கி, அரசு செயலாளர் என்கிற அமைப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்குமா என்பதை தாங்கள் தான் ஆராய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன். “உடனே அதை அப்படியே எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டு, “நான் நாளை மறுநாள் புதுடில்லி செல்கிறேன், டில்லி சென்று திரும்பியதும் உங்களுக்கு விடை சொல்கிறேன்” என்று டில்லி சென்றார். சொன்னதுபோலவே செய்தார். அவர் திரும்பி வந்தவுடனேயே, எனக்கு தொலைபேசியில் அழைத்து, “உங்களை நான் அரசு செயலாளராக இன்று முதல் நியமிக்கிறேன்” என்று சொன்னார்கள்.
அது எனக்கு ஒரு பெரிய மணி மகுடம் இட்டதுபோல் இருந்தது. அரசு செயலாளர் என்பது ஒரு பத்துப் பிரிவுகளை ஒன்றாக்கி நிர்வகிக்கும் பெரும் பொறுப்பாகும். அந்த பொறுப்பில் நான் ஒரு எட்டாண்டு காலம் தொடர்ந்து இருந்தது என் வாழ்க்கையில் பெரிய சிறப்பு என்றுதான் நான் நினைக்கிறேன்.

Add a Comment