POST: 2016-06-12T09:17:15+05:30

அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)

பகுதி – 1

மாற்பித்தியார் என்னும் சான்றோர் காட்டில் ஒரு பெரியவர் கடும் தவம் புரிவதைக் கண்டார். அவரை,

“கழைக்கண் நெடுவரை அருவி யாடிக்
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே”

என்று பாடினார். இது புறநானூற்றில் உளது. இதனைப் படிக்கும்போது, மலையருவியில் நீராடுவது பொருந்தும்; காட்டில் வாழும் யானை அவர்க்கு விறகு கொணர்ந்து உதவும் என்றும், அதைக் கொண்டு அவர் செந்தீ வேட்பர் என்றும் கூறுவது எங்ஙனம் என்று வியப்புண்டாகும். மேலும் விறகு தரும் யானையை அத்தொழிற்குப் பழக்கப்பட்ட யானை என்றற்கும் இடமில்லை; பழகியதாயின் அது வினைநவில் யானை என்று குறிக்கப்பட்டிருக்கும். இது பழகாத யானை காட்டு யானை என்பது நன்கு தோன்றக் கான யானை என்று திட்டவட்டமாகச் செப்புகின்றார். இப்போது இவ்வாறு தவம் செய்வோரையும் கான யானைகள் விறகு தந்து அவர்கட்கு உதவுவதையும் நாம் காண்பதில்லை. அதனால், இச்செய்தி நமது அறிவை அசைக்கின்றது. இது வெறுங் கற்பனையோ என்று நினைப்போமாயின், கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் வேறொரு சான்றோரும்,

“செந்தீப் பேணியமுனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறிலங்கு அருவிய மலைகிழ வோனே”

என இக் கருத்தையே எடுத்தோதுகின்றார். தொண்டை மான் இளந்திரையனைச் சென்று காணுமாறு பாணன் ஒருவனுக்கு, இளந்திரையனுடைய ஊரும் மலையும், ஊர்க்குச் சென்று சேரும் வழியும் உரைக்குமிடத்தே அவர் இதனைக் குறிக்கின்றார். ஆகவே, இதனை வெறுங் கற்பனை யென்று கொள்ளுவது அறமாக இல்லை; உண்மையை யாராயாது கற்பனை யெனப் புறக்கணிப்பது அறிவுடைமையாகவும் தோன்றவில்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *