அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)
சித்தாந்தம் இதழ் – 1945
பகுதி – 2
கல்வி கற்ற மக்களிடையே நம் நாட்டில் இப்போது விஞ்ஞான அறிவு ஓரளவு பரவியிருக்கிறது. நாம் வாழும் நிலவுலகுக்குப் பொருளை ஈர்த்துப் பிடிக்கும் ஆற்றல் ஒன்று உண்டு என்பது மேனாட்டு விஞ்ஞானியான ஐசக் நியூட்டன் கால முதல் நாடெங்கும் தெரிந்திருக்கிறது. மேலும், வானத்தில் காணப்படும் நாண்மீண் கோண்மீன் அனைத்திற்குமே இந்த ஆற்றல் உண்டென்றும் விஞ்ஞானம் கண்டிருக்கிறது. மேனாட்டுக் கல்வியறிவின் பயனாய் இந்த அறிவு நமது நாட்டில் இப்போது நன்கு பரந்துள்ளது என்றாலும், இது தமிழ் மக்களில் பழந்தமிழ் நூல்களைப் பயின்றவர்களுக்குப் புதுமையாகத் தோன்றாது. பழைய நூல்களான தமிழ்ச்சங்க இலக்கியங்களில் ஞாயிற்று மண்டிலத்துக்கே இந்த ஈர்ப்பாற்றல் உண்டென்று சான்றோர்கள் குறித்துள்ளனர்.
“செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிதுநிலைஇய காயமும் என்றிவை
சென்று அளந்தறிந் தோர்”
என்று அக்குறிப்பு. இதன்கண்ணும் காயமென்றது ஆகாயம்; அது காற்று இயங்காத வெற்றிடம் என்றற்கு வறிது நிலைஇய காயம் என்று கூறுகின்றார். இவ்வாறே வேறு சான்றோரும், “வளியிடை வழங்கா வழக்கருநீத்தம்” (புறம்-365) என்றும், “விசும்பு நீத்தம்” என்றும் குறித்துள்ளனர். இன்றைய வானநூல் அறிஞர் அனைவரும் இஃது உண்மையென உரைக்கின்றனர். அமெரிக்க நாட்டு ஆராய்ச்சியாளர் வானவூர்திகளிற் பறந்து சென்று அந்த உண்மையைத் தெளிந்துள்ளனர். இவ்வாற்றல் ஞாயிற்றுக்குப் பரிப்பு என்ற ஈர்ப்பாற்றல் உண்டெனப் பண்டையோர் குறித்தது உண்மையை அடிப்படையாகக் கொண்டதென்பது தேற்றம்.

Add a Comment