அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)
சித்தாந்தம் இதழ் – 1945
பகுதி – 5
பொருள்களிடத்தே காணப்படும் பரிப்புக்கு முதல் நிலவுலகு என்பதும், நிலவுலகும் ஏனை நாள் கோள்களைப் போல வானத்தில் சூழன்று திரியும் பொருளாதலால் இதற்கு ஞாயிற்றின் பரிப்புக் காரணம் என்பதும் முன்பே கூறப்பட்டன. ஞாயிற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதுவும் சுழலுகிறதென்று சொல்லுகின்றார்கள். நமது நிலவுலகுபோல ஞாயிறும் சுழலுவதோர் பொருளாயின் அதனை ஈர்த்துப் பற்றிச் சுழல்விக்கும் பொருள் ஒன்று வேறே இருத்தல் வேண்டும். இவ்வண்ணமே நுணுகி நோக்கின் ஞாயிறு முதலிய எல்லாப் பெரும் பொருட்கும் வேறாய் மேலாய் ஏனை எல்லாவற்றையும் ஈர்த்துக்கொண்டு நிற்கும் முழுமுதற் பொருள் ஒன்று உண்டு என்பதும், அதன் சூழ்நிலையில், பரிப்பில், எல்லா வுலகுகளும் எல்லாப் பொருள்களும் ஈர்ப்புண்டு நிற்கின்றன என்பதும் நன்கு தோன்றுகின்றன. அந்த முழுமுதற் பொருளை நம் முன்னோர் சிவம் என்றும், அதன் பரிப்பை அருள் என்றும் குறிக்கலாம். அதன் இயக்கமே அருள் இயக்கமெனப்படும். அதனால் இயக்கப்படாத பொருளோ, அதன் இயக்கத்துக்கு அகப்படாத பொருளோ யாதும் இல்லை. அதனை மெய்யுணர்வால் கண்ட காரைக்கால் அம்மையார், “அருளே உலகெல்லாம் ஆள்விப்பது” என்பர்; உமாபதி சிவனார், “அருளிற் பெரியது அகிலத்து வேண்டும் பொருளில் தலையிலது போல்” என்று உரைப்பர்.

Add a Comment