அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)
சித்தாந்தம் இதழ் – 1945
பகுதி – 6
ஒவ்வொரு பொருளிடத்தும் அமைந்து கிடக்கும் பரிப்பாகிய இந்த அருளை மனவுணர்வால் அறிந்து கொள்ளும் மாண்புடையது மக்களுயிர். ஏனைப் பொருள்போல அருள் வேறாகப் பெறப்படுவதின்றி ஒவ்வொருவரிடத்தும் அமைந்து கிடப்பதால், அதனை நன்னெறிக்கண் ஆண்டு பயன் கொள்வது அறமென்ற கருத்துத் தோன்றவே திருவள்ளுவரும் “அருளாள்க” என்றும், “அருளாட்சி” என்றும் குறித்தருளினார். முழுமுதற் பொருளைச் சிவம் என்றும் அன்பு என்றும் சான்றோர் கூறுவர்; அதனால், சிவமாகிய அன்பின் பரிப்பை அன்பு ஈனும் அருள் என்று தமிழறிஞர் மேற்கொண்டனர். “அருள் என்னும் அன்பீன் குழவி ” என்று திருவள்ளுவனாரும் குறித்தருளினார். இவையெல்லாம் அடங்கக் கண்ட திருமூலர்,
“அருளே சகலமும் ஆய பவுதிகம்
அருளே சராசர மாய அமலம்
இருளே வெளியேஎனும் எங்கும் ஈசன்
அருளே” என்றும் இனிமையாக இசைக்கின்றார்.

Add a Comment