சிறுமலர் நிறுவனத்தின்
——————————————-
சீரிய தனித்தலைவர் மறைந்தார்
———————————————————–
பாடநூல்களுக்கு உரை நூல்களை வெளியிட்டும் பண்பாட்டு நெறி வழுவாமல் கையளவு நூல்கள் என்ற வகையில் கணக்கில்லாமல், அரிய நீதி நூல்களையும் சமய நூல்களையும் வெளியிட்டு நேரிய குறிக்கோளோடு வாழ்ந்த திரு.வரதன் அவர்கள், சமயக் களஞ்சியமாகத் திகழ்ந்தார்கள்.
தமிழுலகத்தில், லிப்கோ பெயரை அறியாதவர்களே இல்லை. ஆதாயத்தைவிடத் தான் கொண்ட அறநெறி பரவ வேண்டும் என்று லிப்கோ பதிப்பகத்தை நிறுவியதோடு, தானும் வாழ்ந்து மறைந்த திரு.வரதன் அவர்களை நினைக்கும்போது மனம் உருகுகிறது.
கனிந்த பழங்கள், தென்றல் காற்று வீசினாலும்கூட உதிர்ந்துபோவது இயற்கையாக இருக்கிறது. ஆனால், லிப்கோ வரதன் என்ற பண்பாட்டு பழக்கொத்தை நாம் இழக்கும்போது, நம்முடைய மனம் தவிக்கச் செய்கிறது.
லிப்கோ வரதனுக்கு வைகுண்டத்தில் ஒரு சிறந்த இடம் எப்போதும் நிலையாக இருக்கும் என்று அன்பர்கள் நினைப்பதில் வியப்பில்லை.
லிப்கோ வரதன் புகழ் வளர்க்கும் அரிய புகழ்ச்செல்வங்களாக நல்ல பணிகளை ஆற்றிவருகின்ற திருமதி.வசுதா முரளிக்கும், நண்பர் வெங்கட்ரங்கனுக்கும் என் மனமார்ந்த ஆறுதல்.
லிப்கோ வரதன் வளர்த்த பணிகளை வாடாமல் காப்பது அவர்களின் தலைமுறையின் தலையாய பணிகளாகும்.

Add a Comment