சாரதி சாய்ந்தாரே!.
==================
நான் சென்னை வந்த நாள் முதல், பாரதி கலைக்கழகத்திற்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்ட அருமை வாய்ந்த தொண்டர்கள் சிலரை நான் என்றும் மறப்பதில்லை.
பள்ளித் தலைமையாசிரியராக இருந்து விழுமிய பண்புகள் விளங்க அனைவரையும் அரவணைத்து மகிழும் தமிழ், ஆங்கிலப் புலமையில் தன்னிகரில்லாதவர் இரா.பா.சாரதி.
பள்ளியில் பணியாற்றியபோது பள்ளி மாணவர்களை பாரதி சிந்தனையில் திளைக்க வைத்துப் பலரை வாழ்வில் உயர்த்திய பண்பாளர்.
முதுபெரும் செம்மல் இரா.சுராஜ் அவர்களின் ஒப்பற்ற இளவலாக வாழ்ந்தார்.
ஓய்வு பெற்ற பிறகு இந்திய வரலாற்று நூலை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் மொழிபெயர்த்து வழங்கிய மூதறிவு அவரின் பெருமைக்குச் சான்றாகும்.
கனி குலுங்கும் தோட்டத்தில் நான் கண்ணெதிரே கண்டு மகிழ்ந்த தீமாங்கனி ஒன்று காம்பறுந்து கீழே விழுந்துவிட்டதே!
எடுத்துண்ண முடியாமல் மண்ணில் கலந்துவிட்டதே!
என்று ஏங்குகிறேன்.
பாரதி சுராஜ் அவர்களின் ஓங்கி உயர்ந்த குடும்பத்தில் ஒரு பெருங்கிளை முறிந்தது போலத்தான் என்னால் உணர முடிகிறது.
….. ஔவை நடராசன்

Add a Comment