மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-113
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
நாடோடி மன்னன் வசனம் தொடர்ச்சி…..
வீராங்கன் : என் இதயம் வெடித்து விடாமலிருக்க, சாவு உன்னைக் காவு கொள்ளாமலிருக்கட்டும். கற்புக்கு சிறிதும் மாசு வராமல் இருக்க… நடக்கும் நாடகம், மனோகரி! நாட்டின் நலத்திற்காக உன் கணவரைக் காப்பாற்றுவதற்காக ‘யாரிவன், எங்கிருந்து வந்தான், என்ன இவன் பழைய கதை, ஏனிந்த நாடகம்?’ என்றெல்லாம் உன் மனம் குழம்பும். தெள்ளிய நீருக்கும் இல்லறத்துப் பெண்ணுக்கும் கள்ளம் புரியாது; கபடம் தெரியாது. கண்ணாடி உன் மனம். அதிலே காணப்படுவது உன் கணவனின் முகம். அரண்மனை அதிகாரம், ஆள், அம்பு, சேனை அது தான் நீ காணும் உலகம்.
இன்னும் ஓர் உலகம் உண்டு. நீ காணாதது, நான் கண்டது. கேள். காடு சுற்றுவார்கள், கலப்பை பிடிப்பார்கள், உழுவார்கள், விதைப்பார்கள், அறுப்பார்கள், சுமப்பார்கள், உண்ண மட்டும் உணவில்லாமல் தவிப்பார்கள்….
அந்த மாபெரும் கூட்டத்திலே நானும் ஒருவன்.
படையிலே சேர்ந்தேன். மக்களுக்குப் பணிபுரிய, நாட்டைக் காக்க… சேர்ந்த பின் அறிந்தேன், ஆற்ற வேண்டிய படை மக்களை அழ வைத்தது. வாழ வைக்க வேண்டிய படை மக்களை மாய்க்க வைத்தது என்று. உங்கள் ஆட்சியின் கொடுமைகள் அனைத்தையும் கண்டேன். ஆதரவற்ற குடும்பங்கள் தவிப்பதையும் பார்த்தேன். மக்கள் அழுத கண்ணீர் ஆறெனப் பெருகும். ‘தந்தை வேண்டாம், உணவு வேண்டும், வாழ்வு வேண்டும்’ என்று அலறுவார்கள். அவர்களை அடிக்கச் சொல்லுவார் தளபதி. அணைக்கத் தாவும் என் மனசாட்சி- துடித்தது. உள்ளம் கொதித்தது. ‘ஏனிப்படி, எதற்காக, நடக்கலாமா?, சரிதானா?’ என்று எனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டேன்.

Add a Comment