POST: 2018-02-11T14:02:44+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-164
—————-

புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’

காட்சி துவக்கம்:
==================

உலகம் சுழன்று கொண்டுள்ளது. அதன் முன்னே தமிழ்த்தாய் நிற்கின்றாள்
தமிழ்த்தாய் வாழ்த்து: – பாடல் ஒலிக்கிறது

”நீராருங் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக்
கண்டமிதில்………….”
உலகம் சுழன்று, இந்தியாவின்
முன்பு வந்து நிற்கின்றது
தமிழ்த்தாய் நிற்கிறாள்
பாடல் தொடர்கின்றது.
“தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறுந்
திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திரவிட நல்
திருநாடும்
அத்திலக வாசனை போல் அனைத்துலகம்
இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந்
தமிழணங்கே – உன்
சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து
வாழ்த்ததுமே!

காட்சி மாற்றம்:
=================

முதலமைச்சர் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் ராஜீவ் காந்தி அவர்களைக் கொண்டு புரட்சித்தலைவர் சிலையைத் திறந்து வைக்கும் காட்சி…..

ஏழை, எளியோருக்கு உதவி செய்தல், தொழிற்சாலைகள், திட்டங்களைத் தொடங்கி வைத்தல்…..

நேரு விளையாட்டு அரங்கம் புதுப்பிக்கப்பட்டு, பிரதமர் நரசிம்மராவ்வுடன் அமர்ந்திருக்கும் காட்சிகள்….

‘சமூக நீதி காத்த வீராங்கனை’ பாராட்டு விழா… காட்சி… வீடியோ மூலம் திரையில் காண்பித்தல்! ஒலி இல்லாமல்!
பாடல் கடைசி வரிகள் மீண்டும் ஒலிக்கின்றன

‘எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே! உன்
சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து
வாழ்த்ததுமே! வாழ்த்ததுமே!

காட்சி:
========

முதலமைச்சர், டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் உருவம் வீடியோ மூலம் காண்பித்தல்….

2. டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் குரல் ஒலித்தல் – ‘தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த, உத்தமர்களால்…. தனக்கென வாழாமல், உலகம் உயர்வடையத் தங்களையே அர்ப்பணித்துக்கொண்ட பெரியோர்களால்… பேரறிஞர்களால்… பெரும்புலவர்களால்… புரட்சித்தலைவர்களால்…. இந்த உலகம் வாழ்கின்றது!

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு’ என்ற பாட்டுக்கொரு புலவன் பாரதி….

‘கம்பனைப் போல், வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை… ’ என்றான் உறுதியாக….
அதைப் போல-
தந்தை பெரியார்போல்
’பேரறிஞர் அண்ணாவைப்போல்
புரட்சித்தலைவரைப் போல்
பூமிதனில் யாங்கணுமே
பிறந்ததில்லை’ என்று பூரிப்புடன் கூறுகின்றோம். !

மலர் என்றால் தாமரை!
மன்னன் என்றால் கரிகாலன்!
அண்ணல் மகாத்மா என்றால் காந்தியடிகள்!
ஆசியாவின் ஜோதி என்றால் நேரு!
தந்தை பெரியார் என்றால்….
தன்மான இயக்கம் கண்டு தமிழர் மானம் காத்த
ஈரோட்டு வேங்கை, வெண்தாடி வேந்தர்…
ஈ.வே.ராமசாமிப் பெரியார்!

பேரறிஞர் (அண்ணா) என்றால்….
தந்தை பெரியாரின் வீரத்தளபதியாய்….
‘சாமான்யன்’ என்றுகூறி சரித்திரம் படைத்து, திராவிட இயக்கத்தின் முதன் முதலமைச்சராய்ச் சட்டப் பேரவைக்கு எழிலூட்டியவர்!

‘தமிழ்நாடு’ தன்னைத் தமிழ் நாடென்று அழைத்துக் கொள்ளக் காரணமானவர்! சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடியா கியச் சுடரொளி!

இருமொழித் திட்டம் கொண்டு வந்து, தமிழுக்கு அரியாசனம் தந்தப் பெருமகன் அண்ணா!

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் வேதவாக்கின்படி-

அண்ணாவின் பெயரை அனைத்திலும் கண்டு, நம் அன்னையாக, அனைத்துமாக இதயத் தெய்வமாகத் திகழ்ந்தவர்….
நமது புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்கள்!

தந்தை பெரியாரும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும், மூதறிஞர் இராஜாஜியும், அன்னை இந்திராவும் போற்றிப் புகழ்ந்த அரும்பெரும் தலைவர்….
மக்கள் திலகம்,
பொன்மனச் செம்மல்,
நமது இதயதெய்வம்
புரட்சித்தலைவர்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *