POST: 2018-10-11T11:01:19+05:30

=========================================
துக்ளக் இதழில் – வி.வி.ஐ.பி. மீட் பகுதியில் – 17.10.2018 அன்று பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்களுடன் இடம்பெற்ற நேர்காணல் (பகுதி – 1)
=========================================

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஔவை து.நடராசன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஒளவை து.நடராசன் நாடறிந்த தமிழறிஞர். தனது தூய தமிழ் பேச்சால் எல்லோரையும் கவர்பவர். பல்வேறு மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை வகித்தவர். தமிழறிஞர் என்ற வகையில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். அவரை ‘துக்ளக்’ வாசகர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். அந்தக் கலந்துரையாடலின் முக்கிய பகுதிகள் இங்கே :

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
“இன்றைக்குப் பல்கலைக் கழகத்
துணைவேந்தர்கள் பழி வேந்தர்கள் ஆவது ஏன்?”
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

1, பத்மனாபன்:

ஒளவை என்ற பெயர் எப்படி உங்களோடு ஒட்டிக் கொண்டது ?

ஔவை நடராசன்:

இது நிறைய பேர் நிறைய தடவை கேட்ட கேள்விதான். ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே என்பார்கள். ஆனால், இங்கே சிலருக்கு ஊரே பேராகி விட்டது. பசும்பொன் என்றாலேயே அது தேவர் பெருமகன்தான். பெருமழைப் புலவர் என்பதும் அப்படித்தான். கோவூர் தெரிந்தது; ஆனால் பெயர் தெரியவில்லை. அவர் கோவூர் கிழார் என்றே அழைக்கப்பட்டார். அது போல இந்த ஒளவை என்பதும் ஒளவையாரைக் குறிப்பதல்ல; எங்கள் ஊரைக் குறிப்பதுதான். தென்னாற்காடு மாவட்டத்தில் திண்டிவனம் இருக்கிறது. திண்டிவனத்துக்கு அருகே, மைலத்திற்கு மேற்கே ஆலக் கிராமம் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஆலக்கிராமத்தை அடுத்து ஒளவையார் குப்பம் என்றொரு சிற்றூர் இருக்கிறது. அங்குத்தான் என் அப்பா பிறந்தார். அவர் பெயர் துரைசாமி. அவர் மேல் நிலைப் பள்ளியில் படித்தபோது, அங்கு மற்றொரு துரைசாமியும் பயின்றுள்ளார். இதனால் சில நேரங்களில் பெயர்க் குழப்பம் வருவதுண்டாம். அப்போது அங்கிருந்த தமிழாசிரியர் என் அப்பாவை ஒளவை துரைசாமி என்றும், மற்றொரு துரைசாமியை செஞ்சி துரைசாமி என்றும் ஊர் பெயரைச் சேர்த்து அழைத்திருக்கிறார். பின்னாட்களில் என் அப்பா ஒளவை துரைசாமி என்றே கையெழுத்திட்டு வந்தார்.

ஆரம்பத்தில் நான் டி.நடராசன் என்று கையெழுத்திட்டேன். பிறகு என்னை அழைத்தவர்களில் பலர் திரு.டி.நடராசன் என்று அழைத்தார்கள். அதாவது ‘திருடி’ நடராசன் என்பது போல் உச்சரித்தார்கள். அதன்பின் து.நடராசன் என்று கையெழுத்திட்டேன். இறுதியில் நானும் ஒளவை நடராசன் ஆக மாறிவிட்டேன் இதுதான் ஒளவைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு. மற்றபடி அந்த அம்மை யாருக்கும் எனக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை. ஒன்று வேண்டுமானால் சொல்லலாம். நான் முனைவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு – ‘சங்ககாலப் புலமை செல்வியர்’. சுமார் 32 பெண்பாற் புலவர்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டேன். அதில் ஒளவையாரும் உண்டு. ஒளவையார் வேடத்தில் நடித்ததால் கலைஞர் தி.க.சண்முகம் அவர்களுக்கு ஒளவை சண்முகம் என்று பெயர் கிடைத்தது. நான் ஒளவையாரைப் படித்ததாலோ என்னவோ எனக்கு ஔவை நடராசன் என்ற பெயர் கிடைத்து விட்டது. இன்றும் கூட இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் பக்கத்தில் அமரும் போதெல்லாம், ‘குமரிக்குப் பக்கத்தில் கிழவிதான் சரி’ என்று சொல்வார்.

2. பாலமுருகன்:

நீங்கள் பேராசிரியராகப் பணியாற்றினீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மைதானே?

ஔவை நடராசன்:

நான் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலம் 6 ஆண்டுகள் கூட இருந்திருக்காது. தஞ்சை சரபோசி மன்னர் கல்லூரி மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றினேன். பொதுவாக மாணவர்கள் இளநிலை, முதுகலை என்று 5 ஆண்டுகள்தான் கல்லூரியில் படிப்பார்கள். அதே ஐந்து ஆண்டுக் காலப் பேராசிரியர் பயிற்சிதான் எனக்கும் அங்குக் கிடைத்தது. கவிக்கோ அப்துல் ரகுமான், கவியரசர் மீரா, நா.காமராசன், கவிஞர் ஹபிபுல்லா , கா.காளிமுத்து, கவிஞர் மு.மேத்தா இவர்களெல்லாம் அப்போது அங்கு மாணவர்களாக இருந்தனர். அந்தக் காலம் இலக்கியக் கனவுகள் மலர்ந்த நிலாக்காலம். மணக்கும் நினைவுகள் கணக்கில்லாதவை. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நான் வேறு பணிக்குச் செல்ல நேரிட்டது. என் வாழ்க்கையை ஒரு அமெரிக்க நெடுஞ்சாலை என்று தான் சொல்ல வேண்டும். மழமழச் சாலை தான். எந்தக் காயமோ, தழும்போ, விபத்தோ – எங்கும் விளைந்ததில்லை. சுமார் 5 ஆண்டு காலப் பேராசிரியர் பயிற்சிக்குப் பின்னர் அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களிடத்தில் செயலாளராக, இராமலிங்கர் பணி மன்றத்தில் பணி புரிந்தேன். சுமார் பத்து வருடங்கள் அங்குப் பணியாற்றினேன். அதன் பிறகு, அரசு வேலைக்கு என்னை அழைத்தார்கள். செய்தித் துறையில் துணை இயக்குநராகப் பணியில் சேர்ந்தேன். ஆறு மாதத்தில் மொழி பெயர்ப்புத் துறை இயக்குநராக அமர்ந்தேன்.

3. உஷா மதனகோபால்:

கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மூன்று பேரிடமுமே நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். பாராட்டப்பட்டிருக்கிறீர்கள். அது எப்படிச் சாத்தியமானது?

ஒளவை நடராசன்:

காலம் எனக்குக் கொடுத்த கொடை அது என்றுதான் சொல்ல வேண்டும். மூவருமே கலைத் திலகங்கள்; கனிவால் வென்றவர்கள். கலை, கனிவு, கண்டிப்பு, ஆகிய இயல்புகளுக்கு இலக்கணம் வரைந்தவர்கள். கலைஞர்தான் என்னைப் பாசத்துடன் அழைத்துச் செய்தித்துறை துணை இயக்குநராக நியமித்தார். அதன் பிறகு மொழி பெயர்ப்புத் துறை இயக்குநராக 10 ஆண்டுகள் பணி புரிந்தேன். அந்தப் பணியை எனக்கு அன்போடு வழங்கியதும் கலைஞர் அவர்கள்தான்.

4. உஷா மதனகோபால்: கலைஞரிடம் நெருக்கமாக இருந்திருந்தால், எம்.ஜி.ஆரிடம் நெருங்குவது சிரமம் ஆயிற்றே ?

ஔவை நடராசன்:

அப்படி எந்த இடரும் எனக்கு நேரவில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு, எப்போதுமே என் மீது ஒரு அலாதியான அன்பு உண்டு. என்னைத் தொட்டுத்தான் பேசுவார்; அருகில் அழைத்து அணைத்துக் கொள்வார். அந்த அளவுக்கு என் மீது தனிப் பாசம் வைத்திருந்தார். இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும். அரசுக் குறிப்பு ஒன்றில் ‘கவனக்குறைவாகக் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் அந்த ஓட்டுநரைப் பணி மாற்றம் செய்யலாம்’ என்று குறிப்பிட்டு இருந்தது. நான் ‘கார் ஓட்டி’ என்று இருந்ததை ‘காரோட்டி’ என்று திருத்தம் செய்தேன். அந்தக் கோப்பு எம்.ஜி.ஆரிடம் போனது. அவர் என்னை அழைத்து ‘கார் ஓட்டி ‘ என்பது சரி தானே ? அதென்ன ‘காரோட்டி?’ என்று கேட்டார். அப்போது நான் உடனடியாக, ‘நான் படகோட்டி பார்த்தே பழக்கப்பட்டவன்’ என்று பதிலளித்தேன். உடனே அவருக்குப் பெரிய மகிழ்ச்சி; முகத்தில் ரோஜாச் சிரிப்பு. சரி இப்போது விஷயத்துக்கு – வருகிறேன். நான் அரசுப் பணியில் பத்து ஆண்டுகள் முடித்து விட்டேன். ‘இனிமேல் அரசுப் பணியும், ஊதியமும் இல்லை. எனவே பொது வாழ்க்கையில் ஈடுபடலாம்’ என்று முடிவெடுத்தபோது, எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை அழைத்து, ‘அவசரப்படாதீர்கள்; தமிழுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். தலைமைச் செயலகத்தில் உங்களுக்காக ஒரு பணியிடத்தை உருவாக்க முடியுமா என்று ஆராய்வோம்’ என்று தெரிவித்தார்.
நான் உடனே, ‘அறிவியல் ஆய்வுத் துறை என்று ஒரு துறை மத்திய அரசில் இருக்கிறது. அதனுடைய செயலாளர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி இல்லை; ஓர் அறிவியல் அறிஞர்தான் செயலாளர். அதேபோல் சட்டத்துறைச் செயலாளர் சட்டத்துறையில் இருந்தே வருவார்.

இந்திய ஆட்சிப்பணி அதிகாரி நியமிக்கப்படுவதில்லை. இது போன்று இங்குத் தொல்பொருள் ஆய்வுத் துறை, அருங்காட்சியகத்துறை, கலைப்பண்பாட்டுத்துறை, நூலகத்துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறை, மொழி பெயர்ப்புத் துறை இவை தமிழோடு தழுவியதாக இருப்பதால், இத்தகைய பத்துத் துறைகளை ஒன்றிணைத்து, தலைமைச் செயலகத்தில் ஒரு அரசுச் செயலரை நியமித்து அவரது ஆளுகையின் கீழ், அந்தத் துறைகளைக் கொண்டு வரலாம்’ என்று எம்.ஜி.ஆர்., அவர்களிடம் தெரிவித்தேன். இந்தக் கருத்தை என்னிடம் தெரிவித்தது கல்வித்துறை இயக்குநராகவும், புதுவைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்த வேங்கடச் சுப்பிரமணியம் அவர்கள்தான் என்பதையும் இங்கு நான் “நன்றியோடு நினைவு கூர வேண்டும்.

இந்தத் தகவலை நான் எம்.ஜி.ஆரிடம் சொன்னதும் அவர், ‘நான் தலைமைச் செயலாளரிடம் இது குறித்துப் பேசுகிறேன். இரண்டு நாட்களில் புதுடெல்லி செல்கிறேன். அங்கும் இது குறித்து விசாரித்து விட்டு வருகிறேன்’ என்று பதிலளித்தார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், சரியாக மூன்று நாட்கள் கழித்து எம்.ஜி.ஆரே எனக்கு ஃபோன் செய்து, “இன்று முதல் தமிழகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது; அதற்குப் பத்தாண்டுகள் இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமுள்ள நீங்கள் அரசு செயலாளராக நியமிக்கப்படுகிறீர்கள்’ என்றார். இப்படித்தான் தலைமைச் செயலகத்தில் ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டது; அதற்கு நான் செயலராக நியமனம் செய்யப்பட்டேன். அதன் பிறகு அந்தச் செயலர் பதவிக்கு, அடுத்தடுத்து வருபவர்கள் எப்படி நியமனம் செய்யப்பட வேண்டும் என்கிற விதிமுறைகளையும் நாங்கள் வகுத்தோம். 20 ஆண்டுகள் தமிழ்ப் பணி; பத்தாண்டுகள் இயக்குநர் பணி ஆகிய, அனுபவம் இருக்க வேண்டும் என்றும், அப்படி அமையாது போனால் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளில் தமிழார்வம் கொண்டவர்கள் அங்கு நியமிக்கப்படலாம் என்றும் விதிமுறை வகுத்தோம்.

5. பாலமுருகன்:

செல்வி ஜெயலலிதாவோடு உங்கள் பழக்கம் எப்படி அமைந்தது?

ஔவை நடராசன்:

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டாண்டுகள் கழித்து ஒருநாள் காலை என்னை அழைத்தார். நானும் போனேன். என்னை அன்போடு வரவேற்ற அவர், ‘தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகச் செல்லுங்கள்’ என்று ஆணையிட்டார். நான் சற்றுத் தயங்கி, ‘எனக்கு இப்போது 55 அகவை தான் ஆகிறது. 58 அகவையாகி இங்கு ஓய்வு பெற்றதும், அந்தப் பணியை ஏற்றுக் கொள்கிறேன். அதுதான் எனக்கு நன்மை ‘ என்று தெரிவித்தேன். அவர் உடனே வெடுக்கென்று “உங்கள் நன்மை முக்கியமா? தமிழின் மேன்மை முக்கியமா?’ என்று கேட்டார். நான் வாயடைத்துப் போனேன், உடனே என் சம்மதத்தைத் தெரிவித்தேன். அடுத்த மூன்றாவது நாளே தேடுதல் குழு, கவர்னர் ஆகிய அனைவரின் ஒப்புதலோடும் நான் துணைவேந்தராக நியமிக்கப்பட்டேன். நான் தஞ்சைக்குப் போனதும் தலைமைச் செயலகத்தில் இருந்த தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறையின் செயலர் பதவி, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் மடியில் விழுந்து விட்டது. அன்று முதல் இன்று வரை அந்தப் பதவியை முதுநிலைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளில் ஒருவர்தான் வகித்து வருகிறார். இப்படி மூவேந்தர்களாகத் திகழ்ந்த மூன்று முதலமைச்சர்களிடமும் நான் அன்பைப் பெற்றிருந்தேன் என்பது பெருமைக்குரிய செய்தி. அரசுப் பணி யில் நான் இருந்த காலம் என்னைப் பொறுத்தளவில் ஒரு பொற்காலமாகவே அமைந்து விட்டது.

6. மகேசன்:

நான் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது, அப்போது துணை வேந்தராக டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் இருந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் ஒரு துணைவேந்தரோ, பேராசிரியரோ, ஒரு கல்லூரி முதல்வரோ தவறு செய்வது என்பது மிக மிக அரிதான ஒன்று. ஆனால், இன்றைக்குக் கோவை பல்கலைக் கழகத் துணைவேந்தர் கம்பி எண்ணுகிறார்; மதுரை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்; ஓய்வு பெற்ற’ சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையைச் சந்தித்து வருகிறார்; சட்டப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முன்ஜாமீன் தேடி அலைகிறார். ஏன் இந்த அவலம்? இப்போதைய துணை வேந்தர்களின் தேர்வு சரியானபடி இருப்பதில்லையா அல்லது சரியான நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், அவர்கள் அரசியலுக்கு இரையாகி ‘தவறான நபர்களாக மாறிவிடுகிறார்களா?

ஔவை நடராசன்:

நாம் சுருக்கமாகச் சொல்லி விடலாம் ‘காலம் கெட்டு விட்டது’ என்று. ஆனால், உண்மையில் காலம் என்றுமே கெடுவதில்லை, உயரிய காலத்தில் வாழும் மக்கள் தங்களை, உன்னத உணர்வுகளால் காலத்துக்குரிய மக்களாக மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். பொருளாசை பெரிய இருளுக்குத் தள்ளுகிறது என்பதே உண்மை. நீங்கள் சொன்ன மு.வரதராசனார்தான் எனக்குப் பேராசிரியராக இருந்தார். அவர் எங்களிடம் சொன்ன விஷயம், ‘என் ஆசிரியர்கள் தண்ணீர் அருந்திக் கூட நான் பார்த்ததில்லை’ என்பது. அது நூறு சதவிகித உண்மை. அந்தக் காலத்துப் பேராசிரியர்கள் மாணவர்கள் முன்பாகத் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள்; உணவருந்தவும் மாட்டார்கள். ஏனென்றால், ஆசிரியர் எந்த விதமான உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்; அதை எப்படிச், சாப்பிடுகிறார்; தண்ணீரை எப்படி அருந்துகிறார் என்பதையெல்லாம் மாணவர்கள் பார்த்து ஒரு வேளை ஆசிரியரிடம் தவறான பழக்கம் இருந்தால், அந்தப் பழக்கத்தை மாணவர்கள் கற்றுக் கொண்டு விடக்கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையில், ஆசிரியர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள், ஆசிரியர்கள் சிலருக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் ஒருநாள் கூட அவர்கள் புகைத்துப் பார்த்ததில்லை.

அன்றைக்கு ஆசிரியர்களைப் பார்த்தே, மாணவர்கள் தங்களுடைய நடை, உடை, பாவனை, கையெழுத்து ஆகியவற்றை அமைத்துக் கொள்வார்கள். ஆசிரியர்கள்தான் அவர்களுக்கு முன்னுதாரணம். ஆசிரியர்களும் இதை நன்கு உணர்ந்திருந்ததால் மாணவர்களுக்கு மத்தியில் அவர்கள் ஒரு நேர்த்தியான, வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். துணை வேந்தர் என்பவர்கள் நாடறிந்தவராக, உலகறிந்த வராக, புகழ் பூத்தவராக விளங்கினார்கள். எனவே ‘அந்த உயரத்தில் இருந்தவரின் உடையில் ஒரு தூசு படிந்தாலும் உலகம் ஏசும்’ என்று, ஒருமுறை மூன்று பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே நேரத்தில் துணை வேந்தராயிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார், ”சென்னைக்குச் சென்றால் அலைபுரளும் கடற்கரை, அருங்காட்சியகம், அறிஞர் மு.வ. ஆகிய மூன்றையும் காணத் தவறாதீர்கள்’ என்று மதுரையில் இருந்து மாணவர் குழு வந்ததை நானறிவேன்..’

இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. அதற்காகக் காலத்தின் மீது பழி போட முடியாது. பாவம்! காலத்திற்கு இவர்களால் கறை ஏற்படுகிறது. கல்வி உலகத்துக்கு நீங்காத பழி ஏற்படுகிறது. இன்றைய உலகம் நாளுக்கு நாள் பதட்டம் நிறைந்ததாக உருமாறி வருகிறது. வாழ்க்கைமுறை இறுக்கம் நிறைந்ததாகவும், உளைச்சல் நிறைந்ததாகவும் மாறி வருகிறது. என் பேத்திக்கு ஏழு வயது கூட ஆகவில்லை . ‘ஏன் அம்மா அமைதியாக இருக்கிறாய்’ என்று கேட்டால், ‘எனக்கு மூட் அவுட். மனசு சரி இல்லை ‘ என்கிறாள். உலகம் அப்படி மாறிவிட்டது. அந்தக் காலத்தில் ஒரு புலவரைப் பார்த்து ‘உங்களுக்கு ஒரு நரைகூட இல்லையே? எப்படி முடிந்தது?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார், “நான் வாழும் ஊரில் சான்றோர்கள் பலர் வாழ்கிறார்கள்’ என்று. அதாவது ‘சான்றோர் பலர் நான் வாழும் ஊரே’ என்பது அவர் அளித்த பதில்.
எனவே இங்கு சான்றோர்கள் உருவாகி வர வேண்டும். அவர்கள் அஞ்சாமல் தமது கருத்துகளை எடுத்துச் சொல்லுதல் வேண்டும். ‘செல்வம் வரும் போகும். மன நிம்மதியே முக்கியம்’ என்ற மனப் பாங்கை நம்மிடையே வளர்க்க வேண்டும். ‘தவறான வழியில் பொருள் சேர்த்தால், சமூகம் தன்னை ஏளனமாகப் பார்க்கும்’ என்ற நிலையை இந்தச் சமுதாயம் உருவாக்க வேண்டும். கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள். ‘வாய்மையே வெல்லும்’ என்ற அவரது கருத்து இந்த நாட்டில் வலுப்பெற வேண்டும். ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட குற்றங்களும், குழப்பங்களும்” அதிகமாகி, கடுமையாகி அதன் பிறகு தான் புயலுக்குப் பின் அமைதி, இருளுக்குப் பின் ஒளி, கலகத்துக்குப் பின் தெளிவு பிறக்க வேண்டும் போலத் தெரிகிறது. நீங்கள் கேட்கும் கேள்விக்கு அப்போது நல்ல பதில் கிடைக்கலாம்!

தொகுப்பு : எஸ்.ஜே. இதயா

படங்கள்: ராஜேஷ்

துக்ளக் – 17.10.2018

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *