நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
——————————————————————-
(வாழ்த்து-46)
புதுக்கல்லூரியில் நான் பணியாற்றிய நாளிலேயே ஒளவை அவர்களுக்கும் எனக்கும் நெருங்கிய நேயமுண்டு.
இருவரும் சேர்ந்து உவமைக்கவிஞர் சுரதாவோடு பலமணிநேரங்கள் பேசி மகிழ்ந்தது என் நினைவில் இப்போதும் தேன் சுரக்க வைக்கும் தித்திப்பு நிகழ்ச்சியாகும்.
ஒளவை அவர்களின் திருமகன் அருள் மாநிலக் கல்லூரியில் படிக்கும் போதே பேராசிரியர்கள் மனம் கவர்ந்தவர் .
இப்போது மொழிப்பெயர்ப்புத் துறை இயக்குநராக தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவது எனக்குப் பெருமை தருகிறது.
ஒளவையின் அசைவும் ஆய்வும் புதுமையும் அப்படியே அருளிடம் ஒளி வீசுகின்றன .
இந்து தமிழ் நாளிதழில் என் நெஞ்சைக் கவர்ந்த கட்டுரையை நம் உகரம் இதழில் நடுப்பக்கத்தில் வெளியிட்டு மகிழ்கிறேன்.
அட்டைப்படத்தோடு அவர் கட்டுரை தொடர்வதை உகரம் உவகையோடு வரவேற்கிறது.
புலவர் உசேன் .
ஆசிரியர்
உகரம் இலக்கிய மாத இதழ்
============================================
வோர்ட்ஸ்வொர்த்
இயற்கையில் திளைத்த கவியரசர்!
============================================
——————————————————————————
– ஔவை ந.அருள்,
தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர்.
——————————————————————————
இயற்கையின் மீது தான் கொண்ட காதலை, இயற்கையோடு இசைந்த வாழ்வைத் தனது மாந்திரீகச் சொற்களால் கவிதைகளாக்கியவர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். தன் வாழ்நாள் முழுவதும் இயற்கையின் வழிபாட்டில்தான் முடிய வேண்டும் என்று ஏங்கியவர். “வருமானம், செலவு என்ற வளையத்தைவிட்டு வெளியே வந்து, உன் விரிந்த பார்வையால் இயற்கை அழகை விழுங்கு” என்றார். வானவில்லைக் கண்டு மகிழ்ந்து, நெகிழ்ந்து அதன் வழி தன் ஏக்கங்களையெல்லாம் கவிதையில் எதிரொலித்தார். “மலைகள், பாறைகள், கற்கள் மீது உருண்டோடும் நீர் எழுப்பும் ஒலி, மானுடத்தின் இசை” என்றார்.
அவரது உலகப் புகழ்பெற்ற கவிதை ‘டாஃபடில்ஸ்’ நினைவிருக்கிறதா? ஆலய மணியின் சிறிய வடிவில் அழகு கொழிக்கப் பூக்கும் தங்க நிறப் பூ. “மலையின் மேலே மடுவின் உள்ளே திரண்ட மேகம் தனியே மிதந்து தாவிச் செல்வது போல நான் உலவித் திரிந்தேன். இப்போது திடீரென்று மனம் கவரும் மலர்க்குழு என்னை வரவேற்றது. தங்கநிறத் தகடுகள் அவை.” 99 மலர்களைப் பாடிய குறிஞ்சிக் கபிலரைப் போல், ஒரே ஒரு மஞ்சள் பூவின் மலர்ச்சியைக் கண்டே உருகிப் பாடினார் வோர்ட்ஸ்வொர்த்..
இயற்கையைக் கண்டு அதை மனத்தில் தேக்கி வைத்து, பிறகு தனிமையில் மீண்டும் அக்காட்சியை அசைபோட்டுக் கவிதை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வோர்ட்வொர்த். வோர்ட்வொர்த்தின் குழந்தைப் பருவம் கற்பனையிலேயே மிதந்தது. “இளம்பருவத்தில் படகில் பயணித்தபோதெல்லாம் நிலவு ஒளி முலாம் பெற்ற நீர்ப்படுகைகள், என்னைத் துரத்தியதுபோல அச்சமுற்றேன். பென்ரித் பீக்கன் கிழக்குத் தொடர் மலைப்பிளவில் ஒரு சிலுவை மரக்காட்சி, என் இளமைப் பருவத்தில் உலுக்கி வெருட்டியது” என்கிறார். உள்முக நோக்குடன் அத்தருணங்களைத் தனது அடையாளமாக மாற்றிக் கொண்டார் வோர்ட்ஸ்வொர்த். பேருண்மையின் தரிசனமாக இயற்கையும் கற்பனையும் இரு சிறகுகளாக அவருக்கு வாய்த்தன.
“வாழ்க்கையில் சிறைபட்டுக் கிடக்கும் சிலந்தி வலையிலிருநது விடுபட்டு, இயற்கையிலிருந்து பாடம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்ற வரி என்றென்றும் நினைவில் நிறுத்த வேண்டியது. நம் நவீன வாழ்க்கையைக் கொஞ்சமேனும் அர்த்தமுள்ளதாக்குவதற்கு இயற்கைக்குத் திரும்ப வேண்டும். வோர்ட்ஸ்வொர்த்தை வாசிப்பவர்கள் இயற்கையை நேசிக்கத் தொடங்குவார்கள்!
நன்றி : இந்து தமிழ்

Add a Comment