POST: 2018-11-10T10:05:23+05:30

தினத்தந்தி – பதிப்புகள்
————————————-
1. சென்னை, 2. மதுரை, 3. திண்டுக்கல், 4. திருச்சி, 5.
தஞ்சாவூர், 6. கோயம்புத்தூர், 7. திருப்பூர், 8. ஈரோடு, 9. சேலம், 10.திருநெல்வேலி, 11. நாகர்கோவில், 12. வேலூர், 13. கடலூர், 14. புதுச்சேரி, 15. பெங்களூரு, 16. மும்பை, 17. துபாய் என்று 2,50,00,000 வாசகர்களைக் கொண்டு பதினேழு பதிப்புகளில் தினத்தந்தி வெளியாகிறது.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இந்த 17 பதிப்புகளிலும் இன்று (10.11.2018) வெளிவந்த என் தந்தை எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்கு……
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

முதுமையிலும் நிம்மதி
========================
ஔவை நடராசன்,
முன்னாள் துணை வேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்.

நீண்ட முதுமையிலும் நிம்மதி ஏற்பட வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் நோக்கமாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் ஐம்பது வயதை ஓய்வு பெறும் வயது என்று சொன்னார்கள். பிறகு அரசு அலுவலர் ஓய்வு வயது ஐம்பத்தைந்து ஆயிற்று. பிறகு ஐம்பத்தெட்டு என்றும் நிற்கிறது. இப்போது மைய அரசில் ஓய்வு பெறும் வயது அறுபதாக உள்ளது. துணைவேந்தர்கள், நீதியரசர்கள், விசாரணைக்குழுத் தலைவர்கள், தேர்வாணைய உறுப்பினர்கள் என்ற பதவிகளில் வயது அறுபதிலிருந்து எண்பது வரை கூடச் செல்கிறது.

அறுபது என்பதை முதுமையின் இளமை என்றும், எண்பதை முதுமையின் இடைநிலை என்றும் எண்பதைத் தாண்டினால் முதுமையின் வளர்நிலை என்றும் மருத்துவர்கள் எழுதுகின்றனர். ஒரு நாட்டின் செழிப்புக்கும் சிறப்புக்கும் குழந்தைகள் நலம், மகளிர் நிலை, இளையோர் வளம் இவைகளைக் கணக்கிடுவதைப்போல முதுமைச் செல்வத்தையும் ஓர் அளவுகோலாகக் கொண்டு வரையறுத்து வளர்ந்த நாடுகள் பெருமிதமாகத் திட்டங்களைத் தீட்டுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர் மனித வாழ்வுக்கு எல்லை வரையறுத்துப் பார்த்தனர். யாரோ வகுத்த கணக்கு அறுபது ஆண்டுகளுக்குப் பெயரிட்ட நிலையில் நின்றுள்ளது.

உலக நாடுகளிலேயே எண்ணினால் பத்து, பதினைந்து நாடுகளைத்தான் செல்வ நாடுகள் என்று அழைக்கின்றனர்.

வறுமைக்கோடும் தாண்ட முடியாத கேடும் பல நாடுகளை இருளிலேயே தள்ளி வைத்திருக்கின்றன. காலம் மாற மாறக் கதிரொளி பரவி வருகின்றவாறே நலவாழ்வு, தூய்மை, துப்புரவு, வசதியான இல்லம், தடையில்லாத மின்சாரம், தூய்மையான நீர், மாசில்லாமல் வீசும் காற்று, இனப்பெருமிதம், நல்லிணக்கம், தடுக்கி விழுந்த இடத்திலெல்லாம் எடுத்துக் காக்கத் தெருவுக்கு ஒரு மருத்துவமனை என்று செல்வ நாடுகள் மக்கள் வாழ்க்கை நடைமுறைக்கும், சீர்மைக்கும் ஆவன செய்துள்ளன.

உலக நாட்டவர்களே தங்கள் நோய்களைக் குணப்படுத்திக்கொள்வதற்குச் சிறந்த மாநகரம் சென்னை என்று மருத்துவமனைகளில் சேர்கின்றனர். அமெரிக்க மருத்துவரைத் தேடிச் சென்ற இந்தியத் தலைவரைப் பார்த்து எங்கள் மருத்துவர் கல்லீரல் மாற்று அறுவைக்காகச் சென்னை சென்றிருக்கிறார் என்று கூறினார்களாம்.

நம் நாட்டு இதய மருத்துவர் தன்னுடைய சொற்பொழிவை முடித்தபோது நொறுங்கத்தின்றால் நூறு வயது வாழலாம் என்று எங்கள் தமிழில் ஒரு முதுமொழி உண்டு என்று கூறி அனைவரும் நூறாண்டு வாழவேண்டும் என்று முடித்தாராம். அதற்கு யாரும் ஜப்பானில் கைதட்டவில்லை. ஏனென்றால் 120 வயதைத் தாண்டியவர் தான் அருகில் இருந்த மருத்துவர் என்று பின்னர்த் தெரிய வந்தது. குழந்தைகளுக்கு உரிமைச் சட்டம் இருப்பதைப்போல இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வலியுறுத்தப்படுவதைப்போல மகளிர்க்கு எந்தத்துறையிலும் மறுப்பு சொல்லக்கூடாது என்ற முன்னேற்றப் படிகளில் முதியோருக்குச் சலுகைகளும் வாய்ப்புகளும் வழங்க வேண்டுமென்று வாதிட்டுப் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தினர்.

விமானப்பயணம், தொடர்வண்டிகள், வாடகை உந்துகள், உயரங்காடிகள், பல்கலைக்கழகப் படிப்பு ஆய்வுகள், மாபெரும் உணவகங்கள். உல்லாசமான தாங்கும் விடுதிகள், விளையாட்டு போட்டிக்காட்சிகள் அங்கிங்கெனாதபடி எங்கும் அறுபது கடந்த முதியவர்களுக்குப் பாதிக்கட்டணம் தான், எனக்கு எப்போது வயதாகும், பாதிக் கட்டணத்தில் உலகமெங்கும் பறந்து வரலாம் என்று ஓர் இளைஞன் மகிழ்ச்சியோடு கேட்டானாம். இந்த நிலையை எட்டுவதற்கு நமது அரசு மகத்தான முன்னேற்றங்களைச் செய்ய வேண்டும்.தமிழகம் இதற்குத் தலைமை தாங்க வேண்டும்.

தமிழில் பேரிளம்பெண் என்ற அழகிய சொல் முதுமையான மகளிரைக் குறிப்பதாகும். பெண்களுக்கு முதுமையே இல்லை என்ற சிந்தனை ஓட்டம் வியக்கத்தக்கதாகும். முதியோர் நலன் காப்பதற்காகவே இளமை ததும்பும் செவிலியர் முழு நேரப் பணியில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

தமிழகத்தில் முதுமை காரணமாக உழைத்துச் சம்பாதித்து வாழ முடியாமலும் உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது துயரப்படும் முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு உதவிடும் நோக்கில் 1962 ஆம் ஆண்டு முதல் “தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம் தொடங்கப்பெற்றது” திட்டம் தொடங்கிய நாளில் திங்களுக்கு 20 ரூபாய் உதவித்தொகை வழங்கினர். இப்போது ரூ.200/-உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் 60 முதல் 64 வயதுள்ளவர்களுக்கு மாதம் ரூ.200 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 65 முதல் 69 வயது நிரம்பியவர்களுக்கு மாதம் ரூ.500ம், 80 வயது மீறியவர்களுக்கு ரூ.750 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இச்சலுகை பெற 60 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். கணவர்-மனைவி இருவரின் ஆண்டு வருமானம் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் இருக்ககூடாது, கணவர்-மனைவி பெயரில் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் வைப்புத்தொகை இருக்கக்கூடாது. பிள்ளைகளின் வருமானம் பெற்றோரின் கணக்கில் எடுத்துக் கொள்ளலாகாது. அரசாங்கத்தின் மூலம் வேறு ஏதாவது வழியில் உதவித் தொகை பெறுவோருக்கும் உதவித்தொகை வழங்கப்படாது.

மேலும் மூத்த குடிமக்கள் பேருந்து, தொடர்வண்டி, விமானங்களில் பயணம் செய்தால் 25 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் என்பதை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் (அடையாள அட்டை, தேர்தல் அடையாள அட்டை, தனி நபர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் வங்கிக் கணக்கு, பணியில் இருந்து ஓய்வு பெற்றதற்கான சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் உட்பட வயது அல்லது பிறந்த தேதியை உறுதி செய்துள்ள ஏதாவது ஒரு ஆவணத்தைக் காட்டிச் சலுகை பெறலாம்.

இத்தகைய கட்டுகள் இல்லாமல் ஏறத்தாழ நூறு மடங்குக்கு மேல் வாய்ப்புக்களை முதியோர் பெறவேண்டும். அந்தச் செலவினம் பெரிய செலவாகும் அரசு நினைத்தால் செய்து முடிக்கலாம்.

நீடித்த முதுமைக்கு நிம்மதி பெற்றுத் தரவேண்டும் என்கிற ஆர்வத்தை அரசு தனது உயரிய நோக்கமாகக் கொண்டு மற்றைய நாடுகளுக்குத் தலையளவு இல்லையென்றாலும் மார்பளவுக்காவது சீர்பெற்றுத் திகழ வேண்டும் என்று விழைகிறோம். முதியோரின் ஏக்கமூச்சு பெருமூச்சல்ல எரிமூச்சு. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீராக அமையலாகாது .நாட்டுக்கு நலிவுதரும் நோயைத் துடைக்க வேண்டும்.முதியோரின் முகமலர்ச்சியும் நாட்டின் நல்வளர்ச்சியாகும்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *