அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவு !
=====================================
ஆட்சிப் பணி அறிஞராகவும், அலுவலராகவும் , சிந்து வெளித் தமிழையே சிந்தை முழுவதும் கொண்டவராகவும், தினமணி ஆசிரியராகவும் பல்வகைத் துறைகளில் பளிங்குச் சுடராக இருந்த ஐராவதம் மறைவு அவலத்தைப் பெருக்குகிறது.நடுக்கம் தொடங்கும் குளிர் காலத்தைத் தமிழகம் பலவகையில் வாட்டும் போலத் தெரிகிறது. ஐராவதம் வழியில் ஆட்சிப் பணியாளர்கள் சிலரேனும் ஆய்வுத் துறைக்குத் தம்மை ஆட்படுத்திக்கொள்வாராக !
.நானும் அவரும் செம்மொழி மாநாட்டில் பலமணிநேரம் உரையாடி மகிழ்ந்தோம் .அருட்செல்வர் அவர் மீது பேரன்பு காட்டியதோடு அண்ணா பல்கலைக்கழகத்தில் தனி அறையும் தனிக்கணினியும் வழங்கி உதவிய போது நான் அவரோடு உடன் சென்றிருக்கிறேன்.செம்மொழி நிறுவனத்தில் நான் இருந்தபோது திடுமென என்னைக் காண வந்து மைய அரசின் பிடியில் இருந்து நிறுவனத்தைக் கழற்றி நிதி உதவி தந்தால் மட்டும் போதும் என்று தட்டிச் சொல்லுங்கள் என்று சொன்னார் .நான் சிரித்துக்கொண்டே
தட்டினால் அவர்கள் தள்ளுவார்கள் என்றேன் ,அதைப் பலமுறை எனக்கு நினைவூட்டி நகைத்தார் .கடைசியில் அறிஞர் கலைக்கோவன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருந்ததை நினைக்கிறன் .
—– ஔவை நடராசன்

Add a Comment