POST: 2019-03-23T11:32:00+05:30

பூமாலை புனைந்த பொற்கரங்கள் !
………………………………………………………….

ஆட்சியாளர்களில் சிலர் அறிஞர்களாகவும் , கலைஞர்களாகவும் , ஆய்வாளர்களாகவும் திகழ்வது நமக்குத் பெருமை.

நடைமுறை விதிகளுக்கு நாளும் தலைவணங்கிப் பழக்கப்பட்ட மனம் தமது பணியைத் திரும்பச் செய்யும் தீராப் பிணியாக ஏற்று ஓய்வு பெறுதல் உண்டு.
தனியாகவே கல்லெழுத்துக்களைப் பயிலும் ஆர்வம் கொண்டு தலைநிமிர்ந்தவர் ஐராவதம் மகாதேவன் .

அன்னையார் இசைவாணராக அமைந்ததால் பெருந்தகை ந .இராஜகோபாலன் இசையின்பத்தில் திளைத்து இசைவாணர்களின் வரலாற்றைத் தேடிக் கண்டறிந்து தொகுதிகளாக நூற்றுக்கு மேற்பட்டவர்களின் குறிப்புக்களை ஆய்ந்து எழுதியதால் பொன்மாலை, பூமாலை ,மணமாலை ,புதுமாலை என்று தொகுதிகளுக்கு பெயர் சூட்டியதால் சூட்டிய கரங்களிலும் மனம் கமழ்வதைப் போல ஆட்சியாளர் இராஜகோபாலன் பெயரே பூமாலை இராஜகோபாலன் என்று கலையுலகம் முழுமையாகக் கருதியது என்று சொல்வதற்கில்லை .
எனினும் ஓய்வின்றி பிறர் புகழ் பேசும் பெருமிதம் கொண்டு வாழ்ந்தவர் கரங்கள் ஓய்ந்துவிட்டன.

இசை உலகமே அவருக்குப் பூமாலை சூட்டும்.

ஆட்சியாளர் இராஜகோபாலன் அவர்களை மறைந்த இசைவாணர்கள் மாலை அணிவித்து தம்மோடு சேர்த்துக் கொள்வார்கள் என்றே ஆறுதல் அடையலாம்.

கலைப்புரவலர் நல்லி அவர்களோடு எட்டாண்டுகளுக்கு முன்னர் நூல்வெளியீட்டில் பங்கு கொண்டது நினைவில் நிற்கிறது.

…… ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *