POST: 2019-09-11T11:59:17+05:30

===============================================
கலைமகள் ஆகஸ்டு 2019 மாத இதழில் வெளிவந்த கட்டுரை
===============================================
உலகம் போற்றும் பிரெஞ்சு அகாதெமி
*****************************************************
(பகுதி-2)

1886ஆம் ஆண்டில், ஆமேல் அரசர் (Duke of Aumale), சாண்டில்லி தோட்டம் (Chantilly estate) முழுவதையும் பிரான்சு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக அளித்தார். பின்னர், அந்நிறுவனம் இந்நிறுவனம் மற்றும் கல்வி நிலையங்களிடம், இத்தகைய ஆச்சரியமிக்க மரபுரிமைச் சொத்துகள் ஒப்படைக்கப்பட்டன. மரபுரிமைச் சொத்துகளைப் பாதுகாக்கும் புதிய பணியைக் கையிலெடுத்துக் கொண்டது. மேலும், பலராலும், இத்தகைய அன்பளிப்புகள் தொடரப்பட்டன. நிறுவனத்தின் மதிப்புமிக்க காப்பாளர்கள், நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துகளைச் சீர்செய்து, வளமூட்டிப் பொது மக்களுக்குத் திறந்து விட்டனர்.

சாண்டில்லி தோட்டம் (ஆமேல் நிறுவனம்)

மாண்ட்மோரென்சி குடும்பத்தால், 16ஆம் நூற்றாண்டு முதல், இந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டு முதல் கொண்டே (Conde) குடும்பம் அதன் உரிமையாளரானது. இன்று, இது, பிரெஞ்சு பாரம்பரியத்தின் அணிகலன்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின்னர்த் தாயகம் திரும்பியபோது, விலைமதிப்பில்லாப் பல புத்தகங்களையும், சித்திரங்களையும் (பழங்கால ஓவியங்களின் சிறப்பு தொகுப்பு, லாவோருக்கு மட்டுமானது) கலைப் பொருட்களையும் ஒன்றாகக் கொண்டுவந்து, அரண்மனையை மீண்டும் பெரிதாக உருவாக்கிய சிறப்புமிக்க, ஆமேல் அரசர் (Duke of Aumale), ஹென்றி டீ ஓர்லியன்ஸ்-க்கு (Henri d’ Orleans) நன்றி.1830ஆம் ஆண்டு, தனது எட்டாவது அகவையில், காண்டேவின் (Conde) கடைசி இளவரசரும், தனது ஞானத் தந்தையுமானவரிடமிருந்து இந்த அரண்மனையை அவர் பெற்றார். 1886ஆம் ஆண்டில், நேரடி வாரிசு யாருமில்லாததால், அந்நேரத்தில், பிரான்சில் நிலவிய அரசியல் நிலையற்ற தன்மையை அறிந்து, ஏறத்தாழ 8,000 எக்டேர் பரப்பளவிலுள்ள இந்த மிகப்பெரிய தோட்டத்தைப் பிரான்சு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க அவர் முடிவு செய்தார். (25.10.1886 ஆம் நாள் நன்கொடை காடிசில்ஸ் நிறைவு செய்யப்பட்டது)

ஆமேல் நிறுவனத்தில், காண்டே அருங்காட்சியகத்தின் நூலகமும், ஆவணக் காப்பகமும் உள்ளன. அங்கு ஆமேல் அரசால் சேகரிக்கப்பட்ட விலைமதிப்பில்லா எழுத்துப்படிகளும் ஆவணங்களும் உள்ளன. புத்தகங்களும் வரலாற்றுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்நூலகத்தில் இன்று ஏறத்தாழ 60,000 தொகுதிகளும், 8,000 வரைபடங்கள் மற்றும் திட்டங்களும், 81,000 கடிதங்களும் உள்ளன.

அப்பேதியா அரண்மனை – ஆய்வுக்கூடம் (ஆண்டோனி டீ அப்பேதி நிறுவனம்)

பாஸ்கியூ (Basque) நாட்டில், ஹெந்தாயே (Hendaye) பகுதிக்கு மேலே, டியூக்ஸ்-ஜூமாக்ஸ் (Deux-Jumeaux) பாறைக்கு எதிர்ப்புறமுள்ள வனப் பகுதியில், பெருங்கடலைப் பார்த்த வண்ணம் நிற்கும், அப்பேதியா அரண்மனை – ஆய்வுக்கூடமானது, அதனை உருவாக்கிய அனைத்திலும் முன்னோடியான கல்வியாளர், புவியியல் ஆய்வாளர், வானியல் ஆய்வாளர், மொழிவாணர் மற்றும் இனவியலாளர் ஆண்டோனி டீ அப்பேதி (1810-1897)-யைப் போன்றே பன்முகங்களைக் கொண்டுள்ளது. 1864 மற்றும் 1884ஆம் ஆண்டுகளுக்கிடையில், யூகீன் வையிலட் லீ டக் (Eugene Viollet le Duc) என்பவர் இந்தக் கோட்டையைக் கட்டினார். அவரின் அனைத்துப் படைப்புகளுள், அப்பேதியா, உண்மையில் தனிச் சிறப்பான மற்றும் முழுமையான படைப்பாகும். நியோ-கோதிக் (neo-gothic) கட்டடக்கலை வடிவில் கட்டப்பட்ட இக்கோட்டை, இடைக்கால அரண்மனைகளின் தாக்கத்தைப் பெற்றுள்ளது. இதன் உள் அலங்காரத்தில், கட்டடக்கலை வல்லுநரின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. 1895ஆம் ஆண்டில், அறிவியல் நிறுவனத்திற்கு மொத்த இடத்தையும் நன்கொடையாக அளித்தவரின் வாழ்க்கை மற்றும் பண்பாட்டு குறிப்பையும் இது கொண்டுள்ளது. இக்கோட்டையின் வடபுறத்தில் அரிதான வானியல் ஆய்வுக்கூடம் அமைந்துள்ளது. பதின்ம அளவீடு வட்டத்துடன் கூடிய தீர்க்கரேகைக் கருவி மிகவும் இவ்விடத்திற்கு ஒரு தனித்துவமிக்க பரிமாணத்தை அளிக்கிறது.

ரே-செஸ்ரெட் கோட்டை (காடின் டீ லேபினே நிறுவனம்)
(Ry-Chazerat Chateau (Godin de Lepinay Foundation)

ஜோர்னெட் மற்றும் மாண்ட்மாரில்லன் (Journer and Montmorillon) நகராட்சிகளில் பொய்டோ (Poi Tou) கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள 1,100 ஹெக்டேர் பரப்பளவிலான ரே-செஸ்ரெட் பண்ணையச் சுற்றி ஒரு சிறிய கோட்டை அமைந்துள்ளது. பாதுகாப்பு அரண்களுடன் கூடிய இக்கோட்டை மெல்லக் மெல்ல குடியிருப்புப் பகுதியாக மாறிவருவதற்கான சான்றுகள் புலப்படுகின்றன. இக்கட்டடத்தின் தரம், வெவ்வேறு காலத்தைச் சார்ந்த கட்டுமானப் பணிகளை வெளிப்படுத்துகிறது. மேலும், 19ஆம் நூற்றாண்டின் முடிவு வரையில் இக்கட்டடத்தில் யாதொரு மாற்றமும் புலப்படவில்லை. அடோல்ஃபி காடின் டீ லிபினே (Adolphe Godin de Lepinay) 1897ஆம் ஆண்டில், அறிவியல் நிறுவனத்திற்கு இதனை வழங்கினார். சூயஸ் கால்வாய்க்கொரு பெர்டிணாண்ட் டீ லெசெப்ஸ் போன்று பனாமா கால்வாய்க்கான அறிவார்ந்த பொறியாளர் அடோல்ஃபி காடின் டீ லிபினே ஆவார். வேளாண்மை மற்றும் பயிர் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு, அறிவியல் நிறுவனத்தின் உறுப்பினர்கள் சில காலத்திற்கு இக்கோட்டையிலேயே வசிக்க வேண்டுமென்பது இவரின் பேரவா ஆகும்.

லாஞ்சியேஸ் கோட்டை ( ஜாக்வேஸ் சிக்பிரைட் நிறுவனம்)
Langeais Castle (Jacques Siegfried Foundation)

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஆஞ்ஜோவில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க நபர்களுள் ஒருவரான பால் நேரா (Foulque Nerra) என்பவரால் லாஞ்சியாசின் பாறைகளின் மீது கட்டப்பட்ட கோட்டை, பின்னாளில் வலிமையான சுவர்களைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது. நூறாண்டு காலப் போரின்போது, இக்கோட்டை அழிக்கப்பட்டது. இக்கோட்டையில் எஞ்சிய பாகங்களைக் கொண்டு, 15ஆம் நூற்றாண்டில் இக்கோட்டையைப் புதுப்பித்த லூயிஸ் XI-க்கு நன்றி. அவரின் மகன் சார்லஸ் VIII, 1491ஆம் ஆண்டு, அங்கு ஆனி டீ பிரிடாக்னே-வை திருமணம் செய்து கொண்டார். கோட்டையின் வெளிப்புறத்தில் மீண்டும் அமைக்கப்பட்ட வரைபாலம், அக்கோட்டைக்குக் குறிப்பிடத்தக்கதொரு தோற்றத்தை அளிக்கிறது. கோட்டையின் உட்புறப்பகுதி, அதன் பங்கிற்கு, காண்போர்க்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரான்சு நகரில் (10ஆம் நூற்றாண்டு) மீதமுள்ள பழங்காலச் சதுரக் கல் கோட்டையின் இடிபாடுகளினால் உருவாக்கப்பட்ட தோட்டம் ஒன்று அங்குள்ளது. லூயிஸ் XIII ஆம் அரசரின் காலம் வரையில், அரசர்களின் உடைமையாக இருந்த இக்கோட்டை, பின்பு, விற்கப்பட்டு அதன்பின்னர்ப் பலரின் கைகளுக்கு மாறியது. 1886ஆம் ஆண்டு, தொழிலதிபர் ஜாக்வேஸ் சிக்பிரைடு இக்கோட்டையை விலைக்கு வாங்கினார். 15ஆம் நூற்றாண்டின் இறுதியில், தேவ இல்லம் வடிவில் இவர் இதனை மாற்றியமைத்தார். 1904ஆம் ஆண்டு, பிரான்சு நிறுவனத்திற்கு இவர் இதனை நன்கொடையாக அளித்தார்.

டோஸ்னே-தியர்ஸ் நிறுவனம் –தியர்ஸ் நூலகம்
Dosne-Thiers Foundation-Theirs Library

பாரீஸ் நகரின் 9-ஆவது மாவட்டமான புனித ஜார்ஜ் இடத்தில் அமைந்துள்ள டோஸ்னே-தியர்ஸ் மாளிகை, அடோல்ஃப் தியர்ஸ் மற்றும் அவரின் மனைவி எலிஸ் டோஸ்னே குடியிருந்த மாளிகையாகும். ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியதற்காக அப்போதைய அவை தலைவரான அடோல்பி தியர்ஸ்-ஐ தண்டிப்பதற்காகப் பாரீஸ் பொது மீட்புக் குழுவின் ஆணைகளின் பேரில், 1871ஆம் ஆண்டு முதலாவது மாளிகை அழிக்கப்பட்டது. விக்டோரியா வீதியில் அமைந்துள்ள கிராண்ட் சைனோக்-ஐ (Grand Synagogue) வடிவமைத்த புகழ் பெற்ற கட்டடக் கலைஞரான ஆல்பிரட்-பிலிபர்ட் என்பவரால் மீண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மாளிகையை அடோல்ஃப் தியர்ஸ் வைத்திருந்தார். அவ்வுடைமைகளுக்கு ஒரே வாரிசான தனது மைத்துனர் அடோல்ப் தியர்ஸ் மறைவிற்குப் பின்னர், ” ஒரு நவீன நூலகத்தை உருவாக்கப் பயன்படுத்திக் கொள்வதற்காக, குறிப்பாக, பிரான்சு வரலாறு குறித்த நூலகம் உருவாகுவதற்காக” இம்மாளிகையை 1905ஆம் ஆண்டு, பெல்சி டோஸ்னே, பிரான்சு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக அளித்தார்.

ஜாக்மார்ட்-ஆண்ட்ரே அருங்காட்சியகம் (ஜாக்மார்ட்-ஆண்ட்ரே நிறுவனம்)
Jacquemart-Andre Museum-Paris ( Jacquemart-Andre Foundation)

கட்டடக்கலை வல்லுநர் ஹென்றி பேரண்ட்-இன் திட்ட வரைபடங்களைக் கொண்டு 1869 மற்றும் 1875ஆம் ஆண்டுகளுக்கிடையேயான காலங்களில் கட்டப்பட்ட பாரீசில் உள்ள ஜாக்மார்ட்-ஆண்ட்ரே அருங்காட்சியகமானது, உண்மையில், எட்வார்ட் ஆண்ட்ரே-வின் தனி மாளிகையாகும். இவர், இரண்டாம் பேரரசின் மிகப்பெரிய செல்வந்தர்களுள் ஒருவரும் அவரது மனைவியான ஓவியர் நீலி ஜாக்மார்ட் (1841-1912) ஆகியோரின் வாரிசு ஆவார். இவர்கள் இருவரும் எண்ணற்ற பொருட்களைச் சேகரித்துள்ளனர். தம்பதியர் இருவருமாய்ச் சேர்ந்தும், பின்னர், நீலி ஜாக்மார்ட் தனித்தும், குறிப்பிடத்தக்க பல பொருட்களைச் சேகரித்துள்ளனர். குறிப்பாக, பண்டைய ஆட்சிமுறைகளின் இறுதி காலங்களிலிருந்து 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இத்தாலியக் கலை மற்றும் பிரான்சு கலைப் பொருட்களை இவர்கள் சேகரித்துள்ளனர். 1912ஆம் ஆண்டு, நீலி ஜாக்மார்ட் மறைவின்போது, அந்த அரண்மனையையும் கலைப்பொருட்களையும் பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் அவற்றைப் பிரான்சு நிறுவனத்திடம் வழங்கினார். இன்று, இந்த அருங்காட்சியகம் பாரீசில் உள்ள மிக முக்கியமான தனியார் அருங்காட்சியகங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது, மேலும், நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவருகின்ற தற்காலிகக் கண்காட்சிகளும் இங்கு நடத்தப்படுகிறது.

சாலிஸ் திருக்கோயில் (ஜாக்மார்ட்-ஆண்ட்ரே நிறுவனம்)
Chaalis Abbey (Jacquemart-Andre Foundation)

சாலிசின் பழைய சிஸ்டெர்சியான் திருக்கோயில் (Old Cistercian abbey of Chaalis), பாரீஸ் நகரத்திலிருந்து சுமார் நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, வாலாயிஸ் பகுதியில், ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தில் அமைந்துள்ளது, இது, 1137ஆம் ஆண்டு, அரசர் லூயிஸ் VI லீ கிராசால் தோற்றுவிக்கப்பட்டது. இது தோற்றுவிக்கப்பட்ட ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பிரெஞ்சு புரட்சியின்போது, தேசியச் சொத்தாக இத்திருக்கோயில் விற்பனை செய்யப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின்போது, முந்தைய தேவாலயம் மற்றும் சிற்றாலயங்களின் இடிபாடுகளின் நிழலில், அங்குள்ள பிரிமாடைஸ் (Primatice) சித்திரங்களுடன் பொழுதுபோக்கு அரண்மனையாக இது மாற்றப்பட்டது. 1902ஆம் ஆண்டில், நீலி ஜாக்மார்ட்-ஆண்ட்ரே-வின் தேசிய இல்லமாக இத்திருக்கோயில் மாறியது. அவரது பெருமளவிலான சேகரிப்புகள், இங்கு வைக்கப்பட்டிருந்தன. காதல் உணர்வு நிரம்பிய பூங்காக்களும், ஏரிகளும் அருங்காட்சியகத்தை மேலும் அழகாக மாற்றின. பண்டைய கால மார்பளவு உருவச் சிலைகள், கோதி மறுமலர்ச்சி பேழைகள்,12 முதல் 16ஆம் நூற்றாண்டு (Giotto, Bellegambe) ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் மற்றும் 17ஆம் நூற்றாண்டு முதல் பேரரசு காலம் (Philippe de Champaigne, Boucher, Houdon…) வரையிலான ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் சேர்ந்து வியத்தகு தொகுப்பாகக் காட்சியளித்தன. அபூர்வமான “இந்திய மற்றும் பர்மிய அறை” மற்றும் மேடம் ஆண்ட்ரே-வின் தனி அறைகள் ஆகியவை நம் பயணத்தை முழுமையடையச் செய்கின்றன. ”Jean-Jacques Roussseau Space” –இல் தத்துவ அறிஞருடன் தொடர்புடைய பல்வேறு பொருட்கள் உள்ளன. இவர், திருக்கோயிலிலிருந்து மிகத் தொலைவில் அல்லாமல், அப்பே (abbey) அருகிலுள்ள எர்மெனான்வில்லி கோட்டையில் (Ermenonville Chateau) தனது வாழ்வை முடித்துக் கொண்டார்.

இலண்டனில் உள்ள மெய்சான் டீ பிரான்சு நிறுவனம் (எட்மாண்ட் டீ ரோத்ஸ்சைல்ட் நிறுவனம்)
Maison de I’Institut de France in London (Edmond de Rothschild Foundation)

1919ஆம் ஆண்டு, எட்மாண்ட் டீ ரோத்ஸ்சைல்ட், பிரெஞ்சு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்காக, அரசியர் நுழைவாயிலிலுள்ள (Queen’s Gate) பிரமாண்டத் தனியார் மாளிகை ஒன்றைப் பிரெஞ்சு நிறுவனத்திற்குப் பரிசளித்தார். எனினும், இரண்டாம் உலகப் போர் குண்டுவெடிப்புகளில், இம்மாளிகை முற்றிலுமாக அழிந்துபோனதால், இத்திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில், அரசியர் நுழைவாயிலின் மேல்தளத்தில் (Queen’s Gate Terrace) இருந்த ஒரு குடியிருப்பு கட்டடத்தை நிறுவனம் பெற்றுக் கொண்டது. அக்கட்டடம் தான் தற்போது, இலண்டனில் உள்ள பிரான்சு நிறுவனத்தின் மெய்சன் டீ நிறுவனமாகும். இந்நிறுவனம் இலண்டனில் பணியாற்றுகிற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு, அவர்களின் துறை எதுவாக இருப்பினும், தரமான தங்குமிடத்திற்கு வகை செய்கிறது.

கெராசான் தோட்டம் (ஏஸ்டர் நிறுவனம்)
The Kerazan Manor (Aster Foundation)

கெராசான் தோட்டம் என்பது, பிரிட்டானியின் லாக்டுடியில் அமைந்துள்ள ஒரு மிகப் பெரிய தோட்டமாகும். இத்தோட்டம், 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டு, 18ஆம் நூற்றாண்டு வரையில் பல ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது. 1793ஆம் ஆண்டு, புரட்சிகரமான கெம்பர் (Quimper) தீர்ப்பாயத்தால் கைப்பற்றப்பட்டது. இத்தோட்டம் 46,000 பவுண்டுகளுக்கு, ஏலத்தில் விற்கப்பட்டு 1850 ஆம் ஆண்டில் குடும்பத்தை அடையும் வரை, பல்வேறு கரங்களுக்கு இடம் மாறியது. ஜோசப்-ஜார்ஜஸ் ஏஸ்டாருக்கு, வாரிசு யாரும் இல்லாத காரணத்தால்,1928ஆம் ஆண்டு மரணமடைந்தபோது, பிரான்சு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. இத்தோட்டம் இன்றியமையாப் பெருமளவிலான பல பொருட்களின், குறிப்பாகப் பிரித்தானியர்களைக் கவர்ந்த ஓவியங்களின் (Maurice Denis, Auguste Goy, Desire Lucas, Lucien Simon, Charles Cottet…) இருப்பிடமாகத் திகழ்கிறது. இவற்றுடன், பண்டைய பார்க்குவர் தொழிற்சாலையிலிருந்து (old Porquier factory) கொண்டு வரப்பட்ட கெம்பர் சீனா துண்டுகளும் இங்குள்ளன. கோடை காலங்களின்போது, பொது மக்கள் பார்வைக்காக, இத்தோட்டம் திறந்து விடப்படுகிறது.

கெரிலாஸ் இல்லம் (தியோடோர் ரெய்னாச் நிறுவனம்)
Kerylos Villa (Theodore Reinach Foundation)

Beaulieu-sur-Mer(06)-இல் அமைந்துள்ள கெரிலாஸ் இல்லம், பண்டைய கிரேக்க வரலாற்றின் மீது, மனிதன் கொண்டிருந்த பற்றின் அடையாளமாகத் திகழ்கிறது.1902ஆம் ஆண்டு, தியாடோர் ரெய்னச் என்பவரால் இது உருவாக்கப்பட்டது. இவர் ஒரு தொல்பொருள் ஆய்வாளரும், பண்டைய கிரேக்க ஆதரவாளரும் ஆவார். கல்வெட்டு எழுத்துகள் மற்றும் பெல்லீஸ் எழுத்துகள் கல்வி நிறுவன உறுப்பினர் ஆவார். கி.மு.2 ஆம் மற்றும் 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வீடுகளின் வடிவ அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு, கவின்கலை உறுப்பினராகக் கட்டடக்கலை வல்லுநர் இமானுவேல் பாண்டிரிமோலியால் (Emmanuel Pontremoli) வடிவமைக்கப்பட்ட இந்தக் கெரிலாஸ், மீண்டும் புதிதாக்கப்படவில்லை, மாறாக இது மீண்டும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். 1928ஆம் ஆண்டு, தியாடோர் ரெய்னாச் மறைந்த பின்னர், பிரான்சு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஓராண்டிற்குப் பின்னர், தியோடோர் ரெய்னாச் நிறுவனம் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அவர் பிள்ளைகளின் சார்பாக அவர்களிடமிருந்து உரிமை பெற்ற நபர்கள், 1967ஆம் ஆண்டு வரையில் அங்கு வசித்தனர். அதன் பின்னர், பிரெஞ்சு நிறுவனம் இந்த விளக்கங்களின் உடமை உரிமையைப் பெற்றது. அன்று முதல், பொது மக்கள் பார்வைக்காக இவ்வில்லம் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், தொன்மை ஆய்வுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகளின் இருப்பிடமாக இது திகழ்கிறது

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *