POST: 2020-02-13T11:04:19+05:30

===============================================
பாரதியார் 138ஆம் பிறந்தநாள் பெருவிழாவில் பாரதி இலக்கியக் கழகத்தில் வந்த அனைவருக்கும் விருந்து நூலாக வழங்கிய “பாரதி 366”
===============================================

கவிப்பேரரசின் கரும்பு வரிகள்
=============================

அறிவுப் பரம்பரையின் அருள்
*****************************************

மனித இனத் தொடர்ச்சியில் மரபணுக்களின் வினைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் ந.அருள் .தமிழின் நெடும்பரம்பரையின் நீட்சி அவர்.

உரைவேந்தர் என்று தமிழுலகம் உச்சிமேற்கொண்டு உவந்து கொண்டாடும் அறிஞர் பெருமகன் ஒளவை துரைசாமி அவர்களாவார் , முனைவர் ஒளவை அருள் அவர்களின் பாட்டுத் திறனறிந்த பாட்டனார் ஆவார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தராகத் திகழ்ந்த தமிழாய்ந்த மேடைகளில் இணையில்லா வேந்தராகத் திகழ்கிற அறிஞர் திருமகன் முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் அருள் அவர்களின் தந்தையார் ஆவார்.

பாட்டனாரின் மரபறிவும், தந்தையாரின் புத்தறிவும் கூடிப் பெற்ற திறமும் உரமும் வாய்க்கப்பெற்ற முனைவர் ந.அருள் அவர்கள் வினாவிடை வடிவில் எழுதியிருக்கும் இந்த பாரதியார் பனுவல் ஆய்வுலகத்தின் அணிகலனாகவும், அறிவுலகத்தின் படைக்கலனாகவும் திகழத்தக்கது.

விரிந்த எண்ணம் – பரந்த பார்வை – செறிந்த மொழி – சிறந்த வடிவம் என்பனவற்றால் உங்கள் வினா விடைத்தொகுப்பு உயர்ந்து விளங்குகிறது.

ஆட்சித்துறையில் தமிழ் வளர்க்கும் அருமைக்குரிய அருள் இன்று, தமிழ் உலகத்தின் அறிவடையாளங்களுள் ஒருவராக அறியப்படுகிறவர்.

இந்த நூல் அவரது மாட்சிக்குச் சாட்சி.

விளம்பரமே தேவையில்லை. இது ஏற்கெனவே தேன்கூடு;நான்வேறு ! சர்க்கரை தெளிக்கவேண்டுமா என்ன ?

வளர்பிறை மகனாகிய உங்கள் அறிவாற்றலைப் பாராட்டுகிறேன் .

தமிழ் நீளும்; நாளை உலகை ஆளும்
என்ற நம்பிக்கை பெறுகிறேன்.

வளர்பிறை வாழ்த்துக்கள்.

—– வைரமுத்து
சென்னை
26.1.2020

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *