தின செய்தி நாளிதழில் இன்று (18.05.2020) வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 35)
‘‘மன்னாதி மன்னனுக்கும் மனம் மாறும்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
===============================
நாகரிகம் வளர்ந்த நிலையில, உலகம் தழுவியதைக் காட்டுவதுதான் மக்களாட்சி என்று அனைவரும் போற்றுகின்றனர். பட்டத்து யானை ஓடி வந்து மாலையிட்டால் போதும் மன்னனாகிவிடலாம் என்று நம்பினர். மன்னனோடு உடன் இருக்க வாய்ப்புக் கிடைத்ததால் மன்னனுக்குப் பிறகு ஒழித்து விடலாம் என்கிற மமதை மனம் கொண்டவர்களும் தம் கையில் ஆதிக்க ஆட்சியை நடத்தி முடித்ததையும் உலக வரலாற்று ஏடுகளில் காண முடியும்.
ஆனால், எளிய மக்களால், எல்லோரும் திரண்டு நின்று, தங்கள் நெஞ்சில் நின்றவனைத் தலைவராகத் தெரிவு செய்தனர். மக்கள் எந்த மனநிலையில் தேர்வு செய்தார்கள் என்பதை இன்றுவரை எவராலும் தெளிவான முடிவு சொல்ல முடியவில்லை. மக்களாட்சி அமைந்த பிறகும், மன்னவர் ஆட்சியில் இருந்து வந்த மரபுரிமைக் கறையும், ஆதிக்கப் போக்குக் கொண்ட மமதையாளர்களின் சிலந்தி மனம் என்ற குறையும் சேர்ந்தே பின்னி வந்தன.
மைய அரசு, மாநில அரசு என்று எவையும் இந்தக் குறைகளைப் போக்கிக்கொள்ள முடியவில்லை. மரபு வாய்ப்பில்லாதவர்கள், உடனிருந்த நண்பர்களையும் பழகி வந்த சுற்றத்தாரையும் குற்றத்தாரையும் பல்லக்கு சுமந்தவர்களையும் பங்காளிகளாகச் சேர்த்தனர். இந்தக் கதையோ, அனைத்து நாடுகளிலும் அமைந்ததுதான்.
புரட்சித்தலைவரின், உடல் திடுமென நலிவடையத் தொடங்கியதும் சுற்றிச் சூழ்ந்தவர்கள் அவரைப் பல நிலைகளில் பற்றிக் கொண்டு வழிநடத்தினார்கள். காட்டிய இடத்தில் கையெழுத்திட்டால், பாலும் தேனும் நாட்டில் ஓடும் என்றும் குறிப்பிட்டார்கள். இந்த நிலையில், உயரிய அலுவலர்கள் இருந்தபோதிலும்கூட, தங்களால் தடுக்க முடியவில்லையே என்று தவித்தார்கள்.
மன்னாதி மன்னனுக்கும்கூட, மனமாறுபாடும் மறதியும் அடிக்கடி வாட்டி வதைத்தன. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழாவில், திடுமென அழைத்து மாவீரருக்குக் கோடி ரூபாய் மக்கள் முன்னால் வழங்கினால் என்ன என்று கேட்டார். அப்படி ஊரறியச் செய்ய முடியாது என்று அவர் மனத்துக்கு மாற்றத்தைத் தருவதற்குச் சில மணி நேரம் பிடித்தன.
இந்தச் சூழ்நிலையில்தான், திடுமென எனக்கு ஒரு பதவி மாற்றம் வந்தது. வேடிக்கை என்னவென்றால், தமிழ் வளர்ச்சிச் செயலாளரை மாற்றம் செய்ய வேறு எங்கும் வாய்ப்புக் கிடையாது. ஏன் மாற்றினார்கள்? எப்படி மாற்றினார்கள்? பிறகு என்னைத் தொடர்ந்து வந்த பெருந்தகையாளர்கூட இந்த மாற்றம் ஏன், எப்படி நடந்தது என்றுதான் என்னைக் கேட்டார்கள். எவருக்கும் தெரியவில்லை. மர்ம யோகி கதையாக முடிந்தது.
நோயும், நலிவும் நம்மைப் பற்றிப் படரும் என்று புரட்சித் தலைவர் நினைத்ததேயில்லை. ஒருமுறை என்னைப் பார்த்து, சர்க்கரை ஒரு நோயா? என்று வாதுமை அல்வாவை உருட்டி என் வாயில் இட்டார். இதோ பாருங்கள் நான் இரண்டு உருண்டைகளை உண்ணுகிறேன் என்று என் அருகில் உட்கார்ந்து உண்டார். நான் மறுநாள் என் மருத்துவரிடத்தில், இதனைக் கூறினேன். முதலமைச்சர் மாபெரும் மக்கள் தொண்டர். பொன்மனச்செம்மல், மருத்துவரில்லை என்று கூறி நகைத்தார். மூன்றாவது மாதம் சர்க்கரை நோய் மிகுந்து நான் மருத்துவமனையில் உடன்சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டேன். புரட்சித் தலைவர் மனம் துடித்து வினவினார்.
எனவே, வாழ்க்கையில் ஒரே நிலையில் இருப்பது என்பது, எளிதானது இல்லை. இருபத்தேழு ஆண்டுகள், சிறையில் இருந்து திரும்பிய தென்னாப்பிரிக்க அதிபர், நெல்சன் மண்டேலா, ஐந்தாண்டுகளுக்கு மேல் தமக்கு இந்தப் பதவி தேவையில்லை. எனக்கு நலிவு வரலாம். வயது முதிர்வால் மறதி வரலாம். இவையிரண்டும் மக்களாட்சியைக் குலைக்கும் என்று கூறினார் என்பர். தள்ளாடித் தடுமாறி மக்களாட்சி தவித்தபடியே எங்கும் வடிவெடுத்தன.
இந்த நிலையில், ஒரு மருத்துவர் மாநாட்டில், அவர் பேசியதைத் தொடர்ந்து படிக்கலாம்.
‘‘அனைத்திந்திய அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் கழகம் 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது விரிவாக்கம் அடையப்போகிறது என்றார்கள். எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். அன்று நான் கொடுத்தது ரூ.50 ஆயிரம். இன்று ரூபாய் இலட்சத்துக்கு சமம் என்று கூறினார். அன்று நான் மட்டும் கொடுக்கவில்லை. டாக்டர் ராமமூர்த்தியும் கொடுத்து இருக்கிறார். அப்போது அவர் மருத்துவர். நான் கலைஞன். சாதாரண நடிகராக இருந்த நான் கொடுத்தாலும் அதைக்கொடுக்கச் செய்வதில் பங்கு கொண்டவர் டாக்டர் நடராஜன்.
ஆண்டுகள் பல கடந்தாலும் இன்று மீண்டும் இந்த கட்டடக் கால்கோள் விழாவில் கலந்து கொள்கிறேன். நல்லதை எண்ணினால் அது விரிவடையும்போது அதில் பங்குகொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்பது தெரிகிறது.
இங்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கட்டடத்துக்காக ஒரு பிரிவை ஏற்படுத்தும்போது அந்தப்பிரிவுக்கு ஆகும் செலவான ரூ.3 இலட்சத்தை சென்னை செரீப் திரு சிவந்தி ஆதித்தன் அவர்கள் அளிக்கிறார். அந்தப்பிரிவுக்கு அவரது தந்தை பெயரை வைக்க வேண்டும் என்று நானும் அவரும் விரும்புகிறோம்.
நான் அதிகமாகக் கவலைப்படுவது புறநகர்ப் பகுதியைப் பற்றியும் கிராமம்புறப் பகுதியைப் பற்றியும்தான். அந்தப் பிற்பட்ட பகுதிகள் கிராமப்புற பகுதிகள் எப்படி இருக்கிறது என்பதை அங்கு வாழும் மக்களை நன்கு கவனித்தால் தெரியும் மருத்துவர்கள் படித்து பட்டம் பெறுகிறார்கள் நிபுணர்கள் தகுதி வாய்ந்தவர்களுக்குப் பட்டம் அளிக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்கு மருத்துவம் அளிக்க வேண்டுமோ, அங்குப் போக மறுக்கிறார்கள். இது வேதனைக்குரியது. தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.
பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய் இல்லாமல் இருந்தால்தான், நோய் பரவாமல் இருக்கும். கிராம மக்கள் வேலைக்கும் பொருளுக்கும் ஏங்கிக் கிடந்து நகரத்துக்கு வருகிறார்கள். இதைத் தடுக்க வேண்டாமா? தடுக்க என்ன செய்கிறோம் வேலைவாய்ப்பைக் கொடுக்கிறோம். வேலை வாய்ப்பைக் கொடுத்தால் போதாது நோயைத் தடுக்க வேண்டும். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்.
என் வாழ்க்கையில் நடந்ததைச் சொல்ல வேண்டும். என் வாழ்க்கைத் துணைவிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு காச நோய் வந்தது. அவர் இப்போது உயிரோடு இல்லை. அப்போது பி.ஏ.எஸ் பவுடர் என்பதுதான் கண்கண்ட மருந்து. வேறு நல்ல மருந்துகள் கிடையாது. ஆணி ஊசி ஏற்றிக் காற்று ஏற்றுவார்கள். தமிழகத்தில் யார் பெரிய மருத்துவராக இருந்தாரோ அவர்தான் என் மனைவிக்குச் சிகிச்சை அளித்தார். கேவிட்டி இருந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுபடியும் வந்தது. இனி ஆபரேஷன் செய்ய முடியாது என்று கூறிய அந்த மருத்துவர், உங்கள் மனைவி இன்னும் 3 மாதம்தான் உயிரோடு இருப்பார். அதற்குள் என்ன விரும்புகிறாரோ அதை வாங்கிக் கொடுங்கள் என்றார். அதன் பிறகு ஒரு அறுவைச் சிகிச்சை டாக்டர் வந்தார். அவர் விசேஷ நிபுணர் அல்ல. இந்தப் பெண் சாகப்போகிறது நான் சிகிச்சை அளிக்கிறேன் என்று அவர் கூறினார்.
நிபுணர் கொடுத்த தவணை 3 மாதம்தான். எனவே, சரி சிகிச்சை செய்துவிட்டுப்போகட்டும் என்று நான் விட்டுவிட்டேன். அந்த சர்ஜன் சிகிச்சை அளித்த பிறகு ஓர் ஆண்டு உயிரோடு இருந்தார். என் மனைவியை மறுபடியும் அந்த நிபுணரிடம் அழைத்துச் சென்று இனி என்ன செய்வது? என்று கேட்டேன். நன்றாக இருக்கிறார். என்ன மருந்து கொடுக்கிறீர்களோ அதையே தொடர்ந்து கொடுங்கள் என்றார்.
என் மனைவி 18 ஆண்டுக் காலம் அதன் பிறகு உயிரோடு இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த நோய் தீர்ந்தது. பின்பு வேறு நோயினால் மரணம் அடைந்தார். நான் அந்த நிபுணரைக் குற்றம் சொல்லவில்லை. சட்டப்படி அவர் படித்த திறமைக்கேற்ப இதைச் செய்தால், இந்த ஆபத்து வரும். உயிர் போய்விடும் என்ற ஆய்வைச் சொல்லி இருக்கிறாரே தவிர, அவர் தவறு செய்தார் என்று சொல்ல உரிமை இல்லை. இதுபோல அனுபவத்தில் பலவற்றைத் தெரிந்து கொள்கிறோம்.
நான் துப்பாக்கியால் சுடப்பட்டபோது, உயிரோடு திரும்பி வருவேனா என்பதே சந்தேகமாக இருந்தது. அப்போது எனக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் வேணுகோபால், நான் படத்தில் திரும்ப நடிக்க வேண்டும். காயத் தழும்புகள் இருக்கக்கூடாது என்று கருதி, கழுத்தில் சுருக்கம் விழும் இடத்தில் தழும்பு தெரியாதபடி ஆபரேஷன் செய்தார். இப்படிப்பட்ட மருத்துவர்கள் வேண்டும்.
அமைச்சர் ஹண்டே மருத்துவ அனுபவம் உள்ளவராக இருப்பதால் எனக்கு மிக உதவியாக இருக்கிறார். இவ்வளவு மாநிலங்களில் இருந்து வந்து இருக்கிறீர்கள். உங்கள் எல்லோரையும் பார்க்கும்போது இந்தியாவைப் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. உங்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். குழந்தைகள் நோயைத் தீர்ப்பதற்கு நோய் வராமல் தடுப்பதற்கு இத்தனை ஆண்டுகளில் வகை செய்வோம் என்ற திட்டத்தைத் தர வேண்டும்.
இந்தக் கட்டடத்துக்கு நானும் ஒரு கடமையைச் செய்யலாம் என்று கருதுகிறேன். என் சொந்தப் பொறுப்பில் ரூ.1இலட்சமும், அரசின் சார்பில் ரூ.5 இலட்சமும் அண்ணா பெயரால் அந்தப் பிரிவை உருவாக்கத் தருகிறேன். நாட்டைக் காப்பாற்றுங்கள். நோயை விரட்டுங்கள், மனத்தைப் பண்படுத்த உதவுங்கள்..!”
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment