அளியது தானே!
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்.
தங்கள் துணைவியாரின் மறைவை அறிந்த அமெரிக்கத் தமிழர்கள். யாவரும் பெரிதும் வருந்துகின்றோம். உங்கள் துயரத்தையும் நாங்கள் உணருகின்றோம்.
அவர்கள் மிகவும் அன்பான பெண்மணி என்று கு.வெ.பா ஐயாவும் கூறினார்கள்.
உங்கள் துணைவியாரை நீங்கள் இழந்தது உங்களுக்குப் பேரிழப்பு. நீங்கள் நிறையச் சைவ தத்துவங்களைக் கற்றவர்.
பேரறிஞரின் மகனானப் பேரறிஞர். நம் இனிய தமிழ் மூலம் உங்கள் துயரத்தை நீங்கள் சிறிதளவு குறைக்கக்கூடும் என எண்ணியே உங்களிடம் அன்போடு ஒன்றை நான் வேண்டுகின்றேன்.
கு.வெ.பா ஐயா வாரம் ஒரு முறை தொலைபேசி மூலம் தொல்காப்பிய வகுப்பு நடத்துகின்றார்.
அதுபோல் தாங்களும் எங்களுக்குப் புறநானூற்று வகுப்புகள் நடத்த வேண்டும் என உங்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நாங்கள் உங்கள் வகுப்பில் கேட்பது மட்டுமன்றி, உங்கள் சொற்பொழிவுகளைப் பதிவு செய்து இணையத்தில் வைப்போம்.
காலா காலத்திற்கும் உங்கள் புறநானூற்று உரைகளை உலகில் உள்ள தமிழர்கள் யாவரும் கேட்டு, பாடல்களைக் கற்க முடியும்.
2 அல்லது 3 பாடல்களை மட்டுமே ஒவ்வொரு வகுப்பிலும் நீங்கள் கற்றுக்கொடுத்தால் நாங்கள் பெரும்பெறு அடைந்ததாகக் கருதுவோம்.
தங்களிடம் இருக்கும் இனிய தமிழ்ச் செல்வத்தை தாங்கள் உலகுடனும் பகிர்ந்தால் சிறப்பாக இருக்கும்.
தயவு செய்து உங்கள் விருப்பத்தை எங்களுக்குத் தெரிவியுங்கள்.
அன்புடன்,
வைதேகி
அமெரிக்கா

Add a Comment