ஓங்கிய சிறப்பும் – உலகியல் தெளிவும்
கூ. வ. எழிலரசு, எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்,
உரைவேந்தரின் திருமகனார் முனைவர் ஔவை நடராசனாரின் புகழோ அளப்பரிது.
ஔவை நடராசன் உற்ற புகழும் பெற்ற புகழும் பெரியன.
கல்லூரியில் தொடங்கித் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் என்று ஓங்கிய வகையில் தமிழால், தமிழ்த் திறத்தால் அரசறிய வீற்றிருக்கும் வாழ்வைப் பெற்றவர்.
கேட்டார்ப் பிணிக்குந் தகைய வாய்க் கேளாரும் வேட்பமொழியும் சொல் வலை வேட்டுவர்; சொல்லின் செல்வர்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக இடைவிடாது வீசிவரும் மேடைத்தென்றல்.
இவர் தம் வார்த்தைகள் வயிரங்கள். இவருடைய பேச்சருவியில் கருத்து முத்துக் குளித்தவர் பலர்.
இவரைப் பழைமைக்குப் பழைமையாய், புதுமைக்கும் பெற்றியராய் நடமாடும் தமிழ்க் கருவூலம் எனில் மிகையன்று.
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் முதலாக இன்றைய புதுக்கவிதைகள் வரையில் இவருடைய இதயத்தில் இருப்பிடம் தேடிக் கொண்டன.
நயம்பட உரைப்பதில் நாவுக்கரசர்.
இயற்றிய கவிஞர்களே மறந்து போன மணிக்கவிதைகளை நொடிப்பொழுதில் அவர்களிடமே நுவல்கின்ற மணிவாசகர்.
என்றென்றும் வாசிப்பை நேசிப்பவர்.

Add a Comment