பொதிகை தொலைக்காட்சி, சபாஷ் தமிழ் நாடு(6.10.2020) நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ ஒளவை நடராசன் வாழ்த்துரை….
மருந்தில்லா மருத்துவம் என்று சொன்னால் நாமெல்லாம் வியப்படைவோம்.
மருந்தில்லா மருத்துவம் என்ற பெயரிலேயே பல்வேறு மாநாடுகளில் பங்குகொண்டு பெரும்புகழ் பெற்றவர் தான் டாக்டர் கிருஷ்ணன்.
இயன் மருத்துவத்துறைக்கு ஒர் இலக்கணம் வகுப்பது போல அவர் தன்னுடைய எழுத்து முறைகளாலும் பயிற்சி முறைகளாலும் உலக நாடுகள் பலவற்றிலும் சென்று பெரும் புகழ் பெற்றிருக்கிறார்கள்.
முதுமை வருகிறது என்றாலே நாள் என்ற நாண் பிடித்து இழுக்கிற போது வில் வளைவது போல முதுகு வலியும், மூட்டுவலியும், மூச்சிறைப்பும், இளைப்பும், களைப்பும் இயல்பாகவே ஏற்படும்.
முதுமை என்றாலேயே நோய்க்கிடங்கு என்று சொன்னால் குற்றமில்லை.
இப்போதெல்லாம் எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்னால் எலும்பு அலர்ச்சி, எலும்புச் சிதைவு, எலும்பு இருக்கம் என்ற நோய்களெல்லாம் வருகிற போது மருத்துவர்களே இயன்முறை மருத்துவத்தைத்தான் பெரிதும் நம்புகிறார்கள்.
அந்த வகையிலேயே தான் இயன்முறை மருத்துவராகத் திகழும் டாக்டர் கிருஷ்ணன் அவர்கள் பல்வேறு பயிற்சிகளை எனக்கே வழங்கியிருக்கிறார்கள்.
எனக்கே வழங்கி இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு காரணம் 85 வயதையைத் தாண்டிய நிலையிலும்கூட காலை நீட்டவும், மடக்கவும், நடக்கவும், ஏன் கொஞ்சம் விரைந்து நடக்கவும் பயிற்சிகளினாலே முயற்சிகளினாலே நான் வெற்றிபெறச் செய்து காட்டுவேன் என்று அவர் விளக்குவதை பாராட்டுகிறேன்.
கபாலம் முதல் கால் வரை என்ற நூல் எழுதியிருக்கிறார்.
அந்த நூலில் இனிய குறட்பாக்களைப் போல உடற்பயிற்சிக்கு உறுதி தருவது நடைப்பயிற்சிதான்;
உடற்பயிற்சியும், நடைபயிற்சியும் ஒன்று சேருமானால் உலகத்தில் நோய்களை விரட்டலாம்;
அதில் இருப்பது நம் முயற்சி என்று எழுதி இருக்கிறார்.
அவர் எழுதுகிற தொடர்கள் மட்டுமில்லை அவர் பேசுகிறபோதே பிடிப்பும் வலிப்பை நீக்குகிற வழியும் நீவுகிற திறமையையும் தான் நிறுவிக் காட்டியது மட்டுமல்லாமல் முடமாகிப்போன, மனம் நொடிந்து போன மாற்றுத்திறனாளிகளுக்கு அவர் ஒரு கண்கண்ட பெருந்தகையாக இருந்து
பல்வேறு குழுக்களில் இடம்பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கையில் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்றமும் ஏற்படுத்தியதை நான் எப்போதும் போற்றி மகிழ்பவன்.

Add a Comment