தந்தையின் கனவும் – மகனின் நனவும் இரண்டுமே வென்றன!
நான் நேற்றுப்படித்த இந்தக்குறிப்பு பெருமிதம் தந்தது .
புகழ்வாய்ந்த ஆட்சியாளரும் திரைக்கலைத் திலகமுமான
அறிஞர் ஞான இராஜசேகரன் எழுதிய குறிப்பு :
எனக்குச் சிறு வயதிலிருந்தே சினிமா மீது தீராத காதல்.
அது என்னை விடாது துரத்திக் கொண்டிருந்தது.
பள்ளிப் பருவத்தில் தமிழில் வெளியாகிற ஒரு படத்தையும் விடாமல் நான் பார்த்துவிடுவேன்.
கல்லூரியிலும்கூடச் சினிமா தான் ஈர்த்தது.
இயல், இசை, நாடகம், தொழில் நுட்பத்துடன் சமூகம், அரசியல், பண்பாடு என்று அனைத்தும் சங்கமிக்கும் ஒரு கலையாகச் சினிமா இருந்ததால் சினிமாவில் அப்படி மோகம்.
சினிமாவில் இயக்குநர் ஆவதே
என் கனவாயிருந்தது.
அப்பாவின் கனவு என்பதால்தான் ஐ.ஏ.எஸ். முடித்தேன்.
உயரதிகாரியானேன்.
நல்ல மதிப்பான வேலை கிடைத்து விட்டது.
அதைக் காண அப்பா இல்லாவிட்டாலும், அவர் கனவு நிறைவேறிவிட்டது.
என் இலட்சியத்தைப் பார்க்கலாம் என்று தோன்றியது.
வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் படங்கள் பார்த்தும் புத்தகங்கள் படித்தும் எனக்குள் எரிந்துகொண்டிருந்த ‘சினிமா நெருப்பை அணையாமல் பொத்தி வைத்திருந்தேன்.
தமிழில் சினிமா இயக்க வேண்டும் என்ற எண்ணம் என்னில் வலுப் பெற்றது.
1980 களின் ஆரம்பத்தில்தான். ஆனால், எப்படிப்பட்டப்படமாக அது இருக்க வேண்டும் என்பதில் எனக்குக் குழப்பம் .
தமிழில் வருகிற மசாலா அல்லது பார்முலா படங்களைப் போல படம் இருக்கக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன் .
பார்த்த பிற மொழிப் படங்கள் என்னை எவ்வளவோ மாற்றின .
கலைகள் அனைத்தும் சங்கமிக்கும் சினிமா, தமிழில் மக்களின் ரசனை வளர்க்கும் காரியத்தைக் குறைவாகச் செய்திருப்பதாகவே எனக்குப்பட்டது .
அப்படியானால், என் படம் எப்படி இருக்க வேண்டும் ?
மலையாள வங்காளத்தில் வெளிவருகிற கலைப் படங்கள்போல் இருக்க வேண்டும் அல்லது பரீட்சார்த்த முயற்சியாக இருக்கலாமா ?
என்று எண்ணி எண்ணி ஏங்கச் செய்த என்னை என் படங்கள் வெற்றியுலாக் கண்டன .
கனவும் வென்றது – என் நினைவும் வென்றது .

Add a Comment