POST: 2021-10-01T09:21:35+05:30

சென்னை ஒய் எம் சி ஏ 58 ஆம் ஆண்டு விழா பட்டிமன்றத்தில். 27 .9 .2003 அன்று
உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை பற்றி அறிவியல் மேதை நெல்லை. சு முத்து அவர்களால்
வாசித்து அளிக்கப்பட்ட கவிதை

உரைவிஞ்ஞானி துரைசாமிப் பிள்ளை

பண்டைய நம்தமிழ் நாட்டிலே பாவலர்
பாடிடும் புலவர் ஏத்தும்
தொன்டை வள நாட்டிலே திண்டிவனத் (து)உள்ளதாம்
தூயபுகழ் ஒளவைக் குப்பம்
பந்தனாம் வேந்தன் மேல் பந்தனந் தாதியும்
பாடிய ஒளவைக் கீந்த
பந்தமந்த லந்தருளு சிற்றூரே இன்றைய
பைந்தமிழ் ஊற்றுக் கண்ணாம் !

சீர்கரு ணீக்குல சுந்தரம் பிள்ளையாம்
திருமகன் ஒளவைக் குப்பட்(து )
ஊர்கணக் காற்றியே வாழ்ந்திட்ட உத்தமன் !
ஒப்பிலா சைவ மேலோன் !
சார்புறத் தேவியாம் சந்திர மதியாளை
தன்மனை ஆக்கி னானே !
தேர்ந்தவர் இல்லற வாழ்வில் துரைசாமி
செம்மலும் தோன்றி னானே !

தன (து ) ஐந்தாம் வயதில் தந்தையை இழத்திடத்
தமையனே தந்தை யானான் !
இனிதவன் ஆலக் கிராமந் தனில்கல்வி
ஏற்றனன் தமிழ் சிறக்க !
வினையுயர் திண்டிவனத் (து) அமெரிக்கன் ஆர்க்காடு
மேனிலைப் பள்ளி தன்னில்
புனிதரும் இடைநிலைக்கல்வி பயின்றவன்
பொறாத புகழ் மிகுந்தான் !

ஊரிசுக் கல்லூரி வேலூரில் கற்றனன்
உயர்நிலைக் கல்வி மிக்கான் !
பாரீசில் லண்டனில் பார்கலி போர்னியாப்
பட்டணப் படிப்பு மில்லை
பேராசை இல்லைதான் என்றாலும் வாழ்வினில்
பெயருக்கும் பொருளும் தேவை !
வேறாசை இல்லையவன் நலத்துறை கண்காணி
வேலையும் செய்தான் பாவம் !

கரந்தையூர் என்பதாம் கருந்திட்டைக்கு குடியிலோர்
கனவோடு பணிபு ருந்தான் !
சிறந்ததாம் தஞ்சையில் நண்பனாய்ச் சிவபக்தன்
சிவகுப்பு சாமிப் பிள்ளை
செறிந்தநல் பண்டித வேங்கட சாமிநாடார்
செழுங்கவி யரசு நல்லோன்
அரங்க வெங்கடா சலப்பிள்ளை சார்ந்து
அமைவரைக் கேட்டான் பாடம் !

ஆர்க்காடு வாலாஜா வட்டத்தே ராணிப்பேட்டை
அருகிலே கலவை ,காரை
ஊர்தொறும் தொடக்கப் பள்ளிதனில் ஆசிரிய
உயர்தொழில் ஆற்றி வந்தான் !
சீர்தமிழ் வித்துவான் தேர்விலும் வென்றனன்
சென்னைப் பல்க லையில் !
நீர்வளர் காவேரிப் பாக்கத்தும் பணியேற்றான்
நிகரிலா பெரும்பே ராசான் !

திருப்பதி கீழ்த்திசைக் கல்லூரி தன்னிலும்
திறம்படப் பயிற்று வித்தான் !
விருப்புடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தும்
வேர்விடும் ஆய்வு நெஞ்சம் !
பொறுப்புடன் வரலாறு , கல்வெட்டு ஆராய்ச்சி
புரிந்தனன் ஆர்வத் தோடே !
கருத்துடன் மதுரையில் தியாக ராயர்பேர்
கல்லூரி பணி புரிந்தான் !

சிந்தாமணி ,சூளாமணி ,மணிமேகலை யாவும்
நந்தாவிளக் காம்போசிலம் போடேதிரு வருட்பா
பொன்றாப்புகழ் ஞானாமிர்தம் ,ஒளவைத்தமிழ்ப் பரணர்
தந்தான் தமிழ் ஒளவை துரை சாமிப்பெரு மகனார் 1

திருவள்ளுவர் ,தமிழ்த்தாமரை ,தமிழ்நாவலர் சரிதை
மருள் நீக்கியார் உயர்நாடகம் எனப்பற்பல பனுவல் !
புறநானூறு ,அகநற்றினை ,பதிற்றுப்பத்து உரை ,ஐங்
குறுநூறுடன் இவர் தீட்டிய தமிழேஅறி வியலாம் !

பார்வேந்தர் சொன்னாலும் பணியாத நெஞ்சங்கள்
பாவேந்தர் சொல்லுக்(கு) அஞ்சும் !
ஓர்வேந்தர் என்றாலும் மூவேந்தர் என்றாலும்
உரைவேந்தர் ஆய்வி லூறும் !
ஆராய்ந்தும் சீராய்ந்தும் அணியேந்தும் உரையாவும்
அறிவியல் பார்வை ஓங்கும் !
நேராய்ந்தால் நிகழ்காலத்து எதிர்காலம் வகுத்திட்ட
நிகரிலா ஒளவை வாழி !

நெல்லை. சு .முத்து

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *