எல்லோர்க்கும் இனியவர்
ஏ வி எஸ் இராஜா !
ஸ்ரீராம் நிறுவனத்தில் பங்காளராகப் பணியிலிருந்த நாளிலிருந்தே பெருந்தகை இராஜாவை நான் நன்கறிவேன் .
எனக்கு இனிய நண்பர் ,
கலை இலக்கியப் பண்பாட்டு அமைப்புக்களின் தலைவர் .
கார்த்திக் கலைக்கழகத்தை அண்ணா நகரில் நிறுவியவர் .
எப்போதும் – ஏதேனும் புதியவற்றைத் தொடங்க வேண்டுமென்று ஓயாதுழைத்தவர் !
வாரந்தவறாமல் என்னை வந்து கண்டு செல்வதில் இருவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி .
நாள்தோறும் அவர் துணைவியாரும் அவரும் அண்ணாநகர் சாலையில் நடைபழகிச் செல்வர் .
கலைமாமணி விக்கிரமனை விட்டுத் திருப்பூர் கிருஷ்ணனை ஆசிரியராகப் பரிவு செய்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன் .
அத்தகைய தகுதி கொண்டவர் திருப்பூர் கிருஷ்ணன் .
ஏ வி எஸ் செய்த அறங்கள் ஆயிரம் .
என் மனத்துயரம் கேட்டு அந்த இடுக்கண் நிலையிலும் ஒரு பொழுது முழுவதும் உடனிருந்து அவர் பரிவு காட்டினார் .
அவருக்குத் தெரியாத தொழிலில்லை .
பழகாத நண்பர்களில்லை .
அமுதசுரபியை ஏந்திய கலைமேகலையாக வாழ்ந்தார் .
திருப்பூராரின் உழைப்பு ஒவ்வொரு அமுதசுரபி இதழுக்கும் அழகூட்டுகிறது என்பதை எடுத்து வியந்து காட்டி மகிழ்ந்தவர் .
எங்கள் இல்லத்தின் எதிரிலேயே வாழ்ந்தார் .
எப்படி இந்த முடிவு நேர்ந்தது என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை !
அழுத கண்களோடு
ஒளவை நடராசன்

Add a Comment