செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 53
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
உண்பது நாழி: உடுப்பவை இரண்டோ !
மதுரைக் கணக்காயனாருடைய இயற்பெயர் தெரிந்திலது.
மதுரையில் அக்காலத்தில் சிறந்த ஆசிரியராக இருந்து பலர்க்கு அரிய நூல்களை ஓதுவித்த சிறப்பால் இவர் கனக்காயனாரென்றே வழங்கப்பட்டார்.
இவருடைய மகனார் நக்கீரனாராவர்.
இவர் காலத்துப் புலவர்களுள் இவர் தலைமைப் புலவராய்
விளங்கியது கொண்டே ” தந்தைய ரொப்பர் மக்களென் பதனால் ” (தொல். கற்பு:6) இவரின் தந்தையாரின் சிறப்பு இனிதுணரப்படும்.
நக்கீரனார்க்குக் கீரங்கொற்றனாரென்பவர் மகனாராவர்.
இந்நக்கீரனார், பொதுவாகத் தமிழ் மூவேந்தரையும் வேண்டுமிடங்களிற் சிறப்பித்துப் பாடியிருப்பினும் சிறப்பாகப் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் பாடிப் பெரும்பரிசில் பெற்றவர்;
திருமுருகாற்றுப்படை பாடி திருவருள் சிறக்கப் பெற்றவர்.
தமிழகம் முழுதையும் நன்கறிந்தவர்.
இத்துணைச் சிறப்புடைய புலமைசிறந்த நக்கீரனார் மலையும், காடும், நாடும், கடலுமாகிய எப்பகுதியிலும் வாழும் மக்கள் பலருடைய முயற்சிகளைத் தம் புலமைக்கண்ணால் நோக்கினார்.
எல்லாருடைய உள்ளமும் பொருளீட்டற்கண் பேரார்வமுற்று இயங்குவது தெரிந்தது.
நாடுகட்குத் தலைமை தாங்கிய வேந்தர் பொதுச்சொற் பொறாது அரசு புரிவதும், காடுகளில் வாழும் விலங்குகளைப் வேட்டையாடித் திரியும் வேட்டுவர் இரவும், பகலும், தமக்குரிய விலங்குகளைக் கொல்வது எண்ணியே முயல்வதும் நக்கீரர் கருத்தை யீர்த்தன.
இவரது உழைப்பின் முடிவென்னை யென்று ஆராய்ந்தார்.
இவரனைவர்க்கும் வேண்டுவன உண்டியும் உடையுமே யென்றும், அவற்றுள் உண்பது நாழியும் உடுப்பவை இரண்டுமாமென்றும், பிற வகையில் ஒரு வேற்றுமையுமில்லை யென்றும் துணிந்தார்.
இவற்றை நோக்கின், வேண்டுவன சிறிதும், ஈட்டுவன பெரிது மாதலின், மிக்கு நிற்கும் செல்வத்தால் செய்ய வேண்டுவது ஈதலாகிய அறமே என்றும், செய்யாது தாமே துய்க்கக் கருதின் அறமும், பொருளும், இன்பங்களும், பெறப்படாவாம் என்றும் கண்டார்.
இக்கருத்துக்களை இப்பாட்டின்கண் வைத்துப் பாடியுள்ளார்.
அரசனும் – ஆண்டியும் என்பது போல வேந்தனும் – வேடுவனும் என்றொரு சொற்புனைவு உண்டு .
வேந்தன் உயிரைக் காப்பவன் .
வேடுவன் உயிரை நீக்குபவன் .
ஆக்கல் – அழித்தல் என்ற நிலையில் மக்கள் தொழில் வேறுபட்டிருந்தாலும் உயிர் வாழ்க்கையில் எவர்க்கும் வேறுபாடில்லை .
இக்கருத்தை இன்றைய வாழ்க்கையில் அரசு வற்புறுத்துகின்ற பொதுமை உணர்வை எல்லோர்க்கும் எல்லாம் என்ற சமதர்மக் கருத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் தம் அழகு நடையில் உலகம் பொதுமை காணவேண்டும் என்று வரைந்த பாங்கு என்றும் நினைக்கத்தக்கது .
அந்தச் சங்க ஓவியத்தை இனிக் காணலாம் ….
மந்த மாருகத் தாலாட்டில் உறங்கு கற்கு
மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர் !
பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே
வெம் சினம் குளியல் நடத்திய குவிக்கின்றீர் செல்வத்தைப்
பிணம் தின்னும் கழுகு போல நீவிர்
பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை
இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளத் தள்ளிவிட்டு
பொருள் தேடி அலைகின்றீர் போதுமென்ற மனமின்றி
வாழ்வில் வளம் பெருக்கல் ஒன்றையே குறிக்கோளாய்க
கொண்டோரே
வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்! ‘
மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா இ’லயிலிட்டு
உண்கின்றீர் ? ‘
வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன்
‘முத்துப் பவளமெனும் மணிகளிலை செய்திட்ட அரிசியையா
குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர் ?
என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்
குன்றமெனச் செல்வம் குவிக்கின்ற மனிதரிடம்
மன்றமேறி அறிஞர் அண்ண கேட்டார் – அதனை
மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம் !
‘பொதுமை மணம் கமழவேண்டும் என்று
புவியில் நாம் முழங்குகின்றோம் இன்று !
புதுமையல்ல இம் முழக்கம், புலவர் பிரான் நக்கீரர்
புறப்பாடலொன்றில் பொதுமை முரசம் ஆர்க்கின்றார், கேளிர்
‘தெண் கடல் கம் தரணி முழுவதுமே – தன்
வெண்கொற்றக் குடையின் கீழ் வரவேண்டுமெனத்
தனியுரிமை நிலைநாட்டத் துடிக்கின்ற வேந்தனுக்கும்,
‘கனி சுவைக்கக் கல் எறிந்து வீழ்த்துதல் போல்
‘கானகத்தில் விலங்குகளை வேட்டையாட
கண்ணுறக்கமின்றிப் பகலிரவு பாராமல் அலைகின்ற
கல்வியறிவற்ற முரட்டு மனிதனுக்கும்,
மானம் காத்திட அவர்தம் உடலுக்குக்
கீழும் மேலும் இரு உடைதான் வேண்டும் ! – அவரை
மயக்கத்தில் ஆழ்த்தாமல் பசி நீக்கக்
கூழோ பொங்கலோ உண்டு களிக்க
ஆழிசூழ் இவ்வுலகில் அவரவர்க்கும் ஒரு
நாழித் தானியம் மட்டும் போதுமன்றோ ?
இப்படி
உண்பது நாழி; உடுப்பவை இரண்டேயெனும்
உண்மைதனை உணர்ந்த பின்னும்,
வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப்
பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ ?
உலகிற் பிறந்தோர் அனைவருக்கும்;
உடல், உள்ளத் தேவையெல்லாம்
ஒன்றாக இருக்கும்போது – இதனை
நன்றாகச் சிந்திக்காமல்
‘வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல்
வேண்டும் ?
பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்
‘தனக்கே எலாம் எனும் தனியுடைமை தகர்த்துத்
தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை
‘வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பதுதான் வாழ்வெடுத்த
பயனாகும் !
தொகுத்தளித்தார் இக்கருத்தை நக்கீரர்; அதனைத்
‘ தொடர்ந்தளித்து வருகின்றார் தொல்புவியில் நல்லோரெல்லாம் !
“தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
செல்வத்துப் பயனோதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.”
( புறநானூறு பாடல் 149 பாடியவர் நகரேனார் )
பொருள் விளக்கம் :
தெண்கடல் வளாகம் = தெளிந்த கடல் நீர் சூழ்ந்த உலகம். ‘
ஒருமையோர் = தனியுரிமை வேண்டுபவர் துஞ்சான் – தூங்காதவன்.
கடுமா – விரைந்தோடக்கூடிய விலங்கினம். துய்ப்பேமெனின் யாமே அனுபவிப்போம் எனின். தப்புந பலவே பல தவறுகளுக்கிடமாகும்.
நாழி = தானிய அளவை.
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Add a Comment