POST: 2022-06-16T09:04:50+05:30

பேசும் புதிய சக்தி – மே மாத இதழ் – 2022

நிசப்த ரீங்காரம்
சொற்களின் பகடையாட்டம்
– ஞான வள்ளல்

அந்தக் காலங்களில் தான் தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் திரு. ஔவை நடராசனாரின் நட்புக் கிடைத்தது.

( வணக்கம் ஐயா ) மனிதர் சொல்வேந்தர்.

எந்தச் சூழலையும் ஆதரித்தும் புறக்கணித்தும் பேச வல்லவர்.

அவரோடு பல கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன்.

அந்நாட்களில், என் இளமை நாட்களில், அவருக்குச் சர்க்கரை நோயின் தாக்கம் இருந்த புதிது. ‘

தலைமைச் செயலகம் ‘ என்னை வரச் சொல்லி விடுவார்.

எனது காலைப்பணி ( ஷிஃப்ட் ) முடித்து நான் அங்கே போய்விட்டால் சிறு அரட்டை முடித்து மாலை அலுவலகம் விட நடந்தே நாங்கள் அவர்வீடு, அண்ணாநகர் வரை பேசியபடி வருவோம்.

கூகுள் வரைபடம் இந்தத் தூரம் 10.6 கிமீ என்று காட்டுகிறது.

கால்வலி கூடிய பொற்காலங்கள் அவை.

அவர் வாசித்த ஏராளமான புத்தகங்கள் பற்றி அளவளாவுவோம்.

அவர் பேசுவார்.

மிகுந்த அக்கறையுடன் எனது எழுத்து பற்றி அவர் விசாரிப்பார்.

என் வீட்டிலேயே அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளாத நாட்கள் அல்லவா அவை….

நான் எழுதிய நுட்பமான வரிகளை, அப்படியாய் நான் கருதிக் கொண்ட வரிகளைப் பற்றி அவரிடம் சற்றுக் கழுத்து விரைக்கச் சொன்னால், அவர் இன்னொரு உச்சத்தை எடுத்துக் காட்டுவார்.

பொற்காலம்… கால் வலியை மறக்கவும்.

ஐயா, இன்றைக்கு என் கதையில் விதி பற்றி ஒரு வரி எழுதினேன்.

அவர் தலையாட்டுவார்.

” காலம், அது மனிதனைப் பறக்கவிட்டு இறக்கைகளைக் கத்தரிக்கிறது.”

பட்டினத்தார் எப்படிச் சொல்கிறார் பார், என்பார் அவர். ”

சாகப்போகிற பிணங்கள் செத்த பிணத்தைத் தூக்கிச் செல்கின்றன ”

பல நூறு புத்தகங்களின் பிழிவு அவர்.

அவரது பேச்சு பாணியைப் பற்றியே கூட நான் அவரிடம் சரளமாகக் கிண்டல் பண்ணியிருக்கிறேன்.

அதான் சொல்கிறேனே. வயசு அப்படி.

சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.

அதை அவர் எளிய புன்னகையுடன் எதிர்கொண்டது அவரது பெருந்தன்மை.

ஐயா, எனக்கும் மேடையில் பேசக் கற்றுத் தாருங்கள் என்று அவரிடம் கேட்டிருக்கிறேன்.

“ உனக்கெல்லாம் மேடை வேண்டாம். எழுத்தில் நீ கவனம் செலுத்துகிறாய் அல்லவா. அது போதும்…’ என்று என்னை அவர் அடக்கி விட்டதாகவே தோன்றுகிறது.

இது நல்லதா கெட்டதா தெரியாது. அது நான் மேடையேறியிருந்தால் ஒழியக் கண்டுகொள்ள முடியாத விஷயம் அல்லவா.

என்றாலும் பேச்சுத் துணை என்று அவர் தனது காரில் பல்வேறு இடங்களுக்கு, ஊர்களுக்கே கூட அழைத்துச் சென்றிருக்கிறார்.

எத்தனையோ அனுபவங்கள்.

இந்தத் தலைப்பில் அவை வேண்டாம். என்றாலும் ஒரு நிகழ்வைச் சொல்லியாக வேண்டும்.

மிக அருமையான மனிதர்.

ஒரு மேடையில் டாக்டர் ஒளவை இருக்கும்போது, கிருபானந்தவாரியார் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று ஒரு சின்னப் பெண், பதின்ம வயது இருக்கும், சட்டென எழுந்து வாரியாரிடம் “ நீங்கள் முன்னுக்குப் பின் முரணாக அல்லவா பேசுகிறீர்கள் ? ” என்று கேள்வி கேட்டாள்.

மொத்தக் கூட்டமே திகைத்துப் போயிற்று.

அத்தனை கூட்டத்தில் ஒரு போலிஸ் அதிகாரி, உட்கார்ந்திருந்த மனிதர்களைத் தாண்டி, அந்தச் சின்னப் பெண்ணிடம் போய் அவளை அப்புறப்படுத்த முனைந்தார்.

உடனே பரிதவித்துப் போய், ஔவை நடராசனார் மேடையில் ஓரமாக நின்றிருந்த ஒரு காவல்
உயரதிகாரியை அழைத்து அவரது காதோடு, அந்தப் பெண்ணைத் துன்புறுத்தாதபடி பார்த்துக்
கொள்ளுங்கள் ” என அவரையும் அனுப்பி வைத்தது நினைவு வருகிறது .

மாற்றுக் கருத்தை அவர் எதிர் கொள்ளும் அழகு என உணர்ந்த கணம் அது.

ம் …மேடைப்பேச்சு எனக்குக் கொடுப்பினை இல்லாமல் போயிற்று.

மேடைப்பேச்சுச் சாமர்த்தியம் இந்தக் காலக்கட்டத்தில் தேவையாய்த் தான் இருக்கிறது.

செட்டியார் முறுக்கா சரக்கு முறுக்கா, என்றால் செட்டியார் முறுக்குத்தான் இன்றைய தேவை.

ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் வகையறா பேச்சால் தங்களை முட்டுக் கொடுத்துக் கொள்ள வசதி வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன அல்லவா…

டாக்டர் ஔவை அவர்களுடன் பழகிக் கொண்டிருந்த காலத்தில் என் இளமைத் தினவுடன் நான் சொன்ன எத்தனையோ பகடிகளை அவர் நெளிசல் எடுத்திருக்கிறார்.

ஒருமுறை நான் அவரிடம் இப்படிச் சொன்னேன். “

அன்று கோபியரிடம் வஸ்திரங்களைப் பறித்துக் கொண்ட அதே கண்ணன், இன்று திரௌபதி மானங் காக்க ஆடைகளை வழங்கினான் ”

உடனே அவர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னார். “

இங்க எடுத்து அங்க கொடுத்ததாகச் சொல்லணும்ப்பா ” என்றார் .

எத்தனை வேகமாகச் சிந்திக்கிறார் இவர் .” என்றிருந்தது .

சில பிரபல பாடகர்கள் தங்கள் கச்சேரி சோபிக்காமல் போகிற சந்தர்ப்பங்களில் தங்களுக்குப் பிடித்த கீர்த்தனைகளை எடுத்துப் பாட ஆரம்பித்து முட்டுக் கொடுத்து விடுவார்கள்.

அது ஒரு உத்திதான்.

பிரபல பேச்சாளர் என்றால் கைவசம் கட்டாயம் சில நகைச்சுவைத் துணுக்குகள், அல்லது மேற்கோள்கள் வைத்திருப்பார்கள்.

டாக்டர் ஔவை புத்தக வெளியீடு என்றால் ” மை பென் இஸ் மை வெப்பன் ” என்று
பேசுவார். (My pen is my weapon)

இளையவர் எடுத்த விழா என்றால், ” பொதுவா இளைஞர்கள் ஒன்றுகூடி ஒத்துமையா விழா எடுத்தால் ஆச்சர்யம் தான்.

ஒருமுறை ஒற்றுமை சங்கம்னு ஆரம்பித்தார்கள்.

அதற்குப் பேசப் போய் வந்தேன்.

ஆறே மாதத்தில் அதில் நாலு பேர் தனியாப் போயி அதிதீவிர ஒற்றுமை சங்கம் ‘னு துவங்கி அதுக்கும் என்னைப் பேசக் கூப்பிட்டார்கள்.”

அவரது ஸ்டாக் நகைச்சுவையில் உடனே என் நினைவுக்கு வருவது.

பொதுவா நாம இந்தியர்கள் உயரமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு தாழ்வான இடத்தில் சாப்பிடுவோம்.

உயரமா பலகை போட்டு அமர்வோம்.

தரையில் இலை போட்டுச் சாப்பிடுவோம்.

வெள்ளைக்காரன் எல்லாரும் தாழ்வான இடத்தில் அமர்வார்கள்.

உயரமான இடத்தில் சாப்பிடுவார்கள்.

அதாவது நாற்காலியில் அமர்ந்து மேசையில் சாப்பிடுவார்கள். ”

எங்க வீட்டுக்கு ஒரு வெள்ளைக்காரன் வந்தான்.

அவனுக்குப் பலகை போட்டு இலை போட்டோம்.

இலைல உட்கார்ந்து விட்டான்.”.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *