வித்துவான்
ஒளவை. துரைசாமி பிள்ளை,
தமிழ்ப்பேராசிரியர்.
தியாகராசர் கல்லூரி, மதுரை.
இவர், தென்னார்க்காடு சீர்மையிலுள்ள ஒளவையார் குப்பம் என்னும் ஊரினர்; சீர்கருணீகர் மரபினர்.
த.வே. உமாமகேசுவரன் பிள்ளை, ஆர். வேங்கடாசலம் பிள்ளை, நாட்டார், பண்டிதமணி முதலிய பெரும் புலவர்களுடன் இளமைதொட்டே நெருங்கிய தொடர்புடையவர்.
சங்க இலக்கியங்களிலும், ஐம்பெருங் காப்பியங்களிலும், சிறு காப்பியங்களிலும், இணையற்ற பயிற்சியும்,
புலமையுமுடையவர்.
அத்துடன் இடைக்காலப் பிற்காலத் தமிழ்நூற்கடல்களைக் கடந்தவர்.
உரையாசிரியர் உரைகளை எல்லாம் ஆழ்ந்து கற்றவர்.
சிவநெறியின் சாத்திர தோத்திர நூல் களில் சிறந்த புலமை படைத்தவர்.
சங்கநூல்களாகிய எட்டுத்தொகையில் புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறு நூறு என்பவற்றிற்கு உரைக் குறிப்புகள், விளக்க உரைகள் வரைந்தவர்.
பன்னூலாசிரியர்.
கலையாராய்ச்சி முயற்சிகளில் தலையாயவர்.
சொல்லாற்றல் மிக்க நாவலர்.
ஆங்கிலக்கலை நூல்களையும், மெய்ந்நூல்களையும் விளக்க வல்லவர்:
விஞ்ஞான நூல்களையும் கற்றவர்.
வரலாற்றாராய்ச்சி, கல்வெட்டாராய்ச்சிகளுங் கண்டவர்.
இன்றைய தமிழகத்தின் சிவநெறி செந்தமிழ் விழாக்களில் இவர் பேச்சில்லாத நிகழ்ச்சிகளைக் காண்டலருமை.
அடிகளால், “தமக்குப்பின் தனிப்பெரும்புலவர்” என்று சிறப்பித்துக் கூறப்பட்டவர்.
மற்றைய பெரும் புலவர்களைப் போலவே இவரும் அடிகள்பால் கொண்ட பேரன்பிற்கும், பெருமதிப்புக்கும் எல்லையில்லை.
அடிகள் தலைமை பூண்ட விழாக்கள் பலவற்றில் பொருள் பொதிந்த ஆய்வுரைகள் பலவற்றை நிகழ்த்தி அவர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றவர்.
இவர் ஒருபோது வடார்க்காடு சீர்மையிலுள்ள திருவத்திபுரத்தில் தம் மாணவர்- அன்பர்கள் – நண்பர்கள் குழாத்துடன் மறைமலை யடிகளைப் பெருஞ்சிறப்போடு வருவித்து அவர்கள் தலைமையில் பெருவிழா ஒன்றை குழாத்துடன் நடத்தியவர்.

Add a Comment