தேமதுரத் தமிழோசைத் திருவிழா!

தினமணி _ 5 .1. 2024
பக்கம் எண் : 8

தேமதுரத் தமிழோசைத் திருவிழா!

– ஔவை அருள்

மகாகவி பாரதியார் பாடிய, ‘
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ என்ற நெறிக்கிணங்க

பிறந்த நாள் முதல் தாயின் வழியாக சொல்லப்பட்ட கதைகளும்,கருத்துகளும், அறநெறிப் பாடல்களும் தான் என்றென்றும் பல இளந்தமிழர்களின் நெஞ்சில் ஆழமாகப் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளன.

பள்ளிப்பருவம் முடித்து வருங்காலச் சிந்தனையாளர்களாக, செயல்வீரர்களாக இளைஞர்கள் கல்லூரியில் கால் பதிக்கத் தொடங்குகிறார்கள்.

இளமைக்காலத்தில் தாங்கள் கண்டவற்றை இடைவிடாமல் பேசியும் எழுதியும் வந்தால் அவர்களது எண்ணத்தை மற்றவர்கள் எளிதில் அறிய முடியும்.

வயலிலே வேலை செய்யும் உழவன் தன் உழைப்பின் பயனைக் காணும்போது மிக்க மகிழ்ச்சியடைகிறான்.

அதைப்போலத்தான் மாணவர்கள், தாங்கள் வரையும் கவிதை, புனையும் கட்டுரை,
முழங்கும் பேச்சு ஆகியவை நண்பர்கள் பலர் மத்தியில் அரங்கேறும்போது மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

பல நேரங்களில் பள்ளியில் பயின்ற பிறகு கல்லூரியில் தங்கள் எதிர்கால வாழ்க்கையின் பாதைச் சுவடுகளைத் தேடிக்கொண்டு பல மணி நேரம் படிப்பிலும், ஆய்விலும், குடும்பச் சூழலிலும் தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட எழுச்சி வாய்ந்த பருவத்தினைப் பக்குவப்படுத்த தமிழ்நாடு அரசு பல முனைகளில் பல அறிவுக்களங்களை அமைத்துத்தருவதை இன்று நாடே பெருமிதமாகக் கண்டு வருகிறது.

அவ்வண்ணம் கடந்த மாதம்
தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப்பட்டறை, பீடுடன் ஞாலமெலாம் உலாவரும் நற்றமிழுக்குச் செம்மொழி வளர்த்த செழுந்தமிழ் மண்ணிலே, மாணிக்கவாசகரின் மணிமொழிக்கு ஏற்றமளிக்கும் பொய்யாக்குலக்கொடியாம் வையை புரண்டோடும் மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் தெளிதேனின் தீஞ்சோலையாக செம்மாந்த கலைக் கோவை விழாவாக நடத்தப்பெற்றது.

இளைஞர்கள் நன்கு பக்குவப்படுத்தி ஆற்றுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நடத்தப்பெற்றது.

மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இளமைப்பருவம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கு அவர்களைப் பக்குவப்படுத்தும் பருவம்.

கனவுகள், கற்பனைகள், காற்றெனப்பறக்கும் சிந்தனைகள், எதிர்காலத்தில் சாதிக்கப்போவதைப் பற்றிய நம்பிக்கைகள் எனப் பாதையில் பளிச்சிடும் ஒளிக்கீற்றுகள் ஒரு புறம்; மறுபுறத்தில் சுமைகள், கல்வி, குடும்பம், உறவுகள் நட்பு – என இந்தப் பருவத்திலேயே தோளில் சுமந்து கடந்து செல்ல வேண்டிய சூழலும், கட்டாயமும் சில இளைஞர்களுக்கு அமைந்து விடும்.

எப்படியாயினும், இளைஞர்கள் இந்தப்பருவத்தில் பெறுகின்ற ஒளிபடைத்த கண்களும், உறுதிகொண்ட நெஞ்சமும் தான் அவர்களின் எதிர்கால வாழ்வைத் தீர்மானிக்க வல்லவை.

அதற்குரிய பல்திறன் பயிற்சியைப் பன்முகப்பாங்கில் இளைஞர்களுக்கு வழங்குவதே இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறையின் தலையாய நோக்கமாகும்.

இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டியவை கணக்கிலடங்காமல் பெருகிக் கிடக்கின்றன.

அவர்கள் எதிர் காலத்தில் தங்கள் வாழ்க்கையைத் தேடிச் செல்வதற்கு வாயில்களும் பற்பலவாய் திறந்து கிடக்கின்றன.

இளைஞர்கள் திறமையும், நம்பிக்கையும் பெற்றவர்களாகத் திகழ்வார்களானால், அவர்கள் கைக்குள் உலகம் வந்து ஏவல் கேட்டு நிற்கும்.

வரலாறுகளைப் படிக்கும் காலத்தைக் கடந்து அவர்களே வரலாறு படைப்பவர்களாகப் பொலிந்து நிற்பார்கள்.

‘பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது!’
சிறுத்தையே வெளியில் வா!
எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலி எனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்

என்று இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார் பாவேந்தர் பாரதிதாசன்.

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறையில் – கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் பட்டைத் தீட்டக்கூடிய வைரங்களாக ஒளிர்வர் என்பது உறுதி.

‘இது ஒரு கல்லூரி நிகழ்வு அல்ல; ஒரு மாநிலத்தின் மொழி வளர்ச்சிக்கு ஆக்கம் ஊட்டும் நிகழ்வு என்று அந்நிகழ்வில் கலந்து கொண்ட அறிஞர்கள் பாராட்டியது தனிச்சிறப்பாகும்.

இப்பயிற்சிப் பட்டறையில், வெள்ளித்திரை வளர்த்த தமிழ்’ எனும் தலைப்பில் வெள்ளித்திரையின் தோற்றத்தைத் தொடங்கி அதன் பெயர்க்காரணம் உள்ளிட்ட நுணுக்கங்களையும், பேசாப்படம், தமிழின் முதல் பேசும் படம், இந்திய திரைப்பட உத்திகள், ஆலிவுட் முதல் தற்போதுள்ள தமிழ்த் திரைப்படங்களின் வளர்ச்சிகள் விரிவாக விளக்கப்பட்டன.

தமிழ் ஓர் இயற்கை மொழியாகப் பரிணமித்ததையும், மொழி என்பது பிறமொழி பேசும் மக்களுக்கு ஒரு கருவியாக இருப்பதுபோலன்றி, தமிழ் மக்களுக்கு தமிழ்மொழி உயிராகத் திகழ்வதைப் பற்றி கருத்துரைக்கப்பட்டது.

‘தடம் பதித்த தமிழ்ச் சான்றோர்கள்’ எனும் தலைப்பில் பல பரிமாண சொல்லாட்சி, பன்முக ஆளுமை, புதுமைப்புரட்சி செய்த அறிஞர்களைக் குறித்து விவாதிக்கப்பட்டது.

சங்க இலக்கியத்தில் கவித்துவம், தொன்மைத் தமிழும் தொல்லியலும்,
சங்க இலக்கிய நயம்,
சங்கத்தமிழ் சுட்டும் விழுமியங்கள், சங்ககால வணிக வரலாறு, புறநானூறு சொல்லும் செய்தி, இனிக்கும் இலக்கணம், நா மணக்கும் நாலாயிரம், தொல்காப்பியம் எனும் தொன்மைத் தேன்,
கூடித் தொழில்செய், எண்ணுவது உயர்வு, பூமி இழந்திடேல், குன்றென நிமிர்ந்து நில் ஆகிய ஏற்றமிகு தலைப்புகளில் மாபெரும் தமிழறிஞர்கள் ஆற்றிய உரைகள் மாணவர்களைச் சிலிர்க்க வைத்தன.

தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களிலும்
தேசியத் தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், பண்டித நேரு, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிறந்த நாளன்றும், மாநிலத் தலைவர்களான ஈவெரா பெரியார், முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, மு.கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்றும் நடத்திய பேச்சுப் போட்டிகளில் வென்றவர்கள், சூலை 18 தமிழ்நாடு நாள் விழாவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்கள் என இருநூறு மாணவமணிகளுக்கு ஏழு நாள் உணவு, உறைவிடம், பயணப்படி வழங்கி பெருமிதமாக நடத்தப்பெற்ற இன்பத்தமிழ் விழாவாக அமைந்தது இம்மாமதுரை விழா.

மனத்தை உறுதி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு பத்து வகைகளில் இளைஞர்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால் அவர்கள் வாழ்க்கை மேம்பாடு அடையும் என்று முதுமுனைவர் வெ. இறையன்பு தன் உரையில் தெரிவித்தார்.

அவையாவன,
முதலாவதாக சத்தான உணவாகச் சாப்பிட வேண்டும்.
இரண்டாவதாக உயர்ந்த மனநிலையோடு இருக்க வேண்டும்.
மூன்றாவதாக அழகிய எண்ணங்களோடு இருக்க வேண்டும்.
நான்காவது அறிவார்ந்த தேடலுடன்திகழ வேண்டும். ஐந்தாவது எதையும் குறித்த நேரத்தில் செய்ய வேண்டும்.
ஆறாவது நாம் செய்ய வேண்டியது குறித்த தெளிவான அட்டவணையை வைத்திருக்கவேண்டும்.
ஏழாவது நல்ல நண்பர்களைப் பெற்றிருக்க வேண்டும்.
எட்டாவது எப்போதும் நம்பிக்கை மனத்தோடு திகழ வேண்டும். ஒன்பதாவது உயர்ந்த இலட்சியங்களை கைக்கொள்ள வேண்டும்.
பத்தாவது வாழ்க்கையில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் –
இவையே அந்த பத்து கட்டளைகள்.

எந்த ஒரு பழக்கத்தையும் நாம் 21 நாள்கள் தொடர்ந்து செய்தால் அது நம் வாழ்வில் ஒரு பழக்கமாக மட்டுமல்ல நம் இயல்பாகவும் மாறிவிடும்.

நீங்கள் எந்த புதுப்பழக்கத்தைத் தொடங்க விரும்பினாலும், இன்றிலிருந்து 21 நாள்கள் அதை இடைவிடாமல் செய்வது என்று முயற்சி செய்யுங்கள்.
அந்த 21-ஆவது நாளுக்குப் பிறகு அது உங்கள் உயிரியல் கடிகாரத்தின் ஒரு பகுதியாக ஆகிவிடும்.
அதற்குப் பிறகு நீங்களே நினைத்தாலும் அதை மறக்கமுடியாது என்று மாணவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டினார் வெ. இறையன்பு.

இன்றைய அறிவியல் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில், இணையம், இணையத்தைப் பயன்படுத்தும் முறை, இணையதளப் பயன்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

வாழ்வாங்கு வாழ்தல், இக்கால இலக்கியப் படைப்புகள் ஒரு பார்வை, கதை, கவிதை எழுதுதல், ஊடகங்களில் தமிழின் ஆளுமை போன்றவற்றுக்குத் தனித் தனி வகுப்புகளும் நடைபெற்றன.

ஆகச்சிறந்த மாணவர்களாக பல்வேறு பரிணாமங்களில் பளிச்சிடுகின்ற வகையில் இப்பயிற்சிப் பட்டறை வாயிலாக மாணவச் செல்வங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதை ஒரு பெரும் பேறாக மாணவர்கள் கருதினர்.
காரணம் இதுகாறும் கல்லூரி, பல்கலைக்கழகம் வாயிலாக மட்டுமே ஒரு நாள் நடத்தப்பட்டுவந்த இப்பயிற்சிப் பட்டறை தமிழ்நாடு அரசின் முன்முயற்சியால் ஏழு நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பை எத்துணை பாராட்டினாலும் தகும்.

வெல்லும் சொற்கொண்டு வெளிச்ச விரிவுரைகளாகவும் வித்தகர்களை உருவாக்கும் வெற்றிப் பாசறையாகவும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை மிளிர்கிறது.

மாத்தமிழ் வளர்த்த மல்லிகைத் தலை நகரில் நாவுக்கரசர்களின் நறுமணக் கூடலாகவும், சொல் புதிது, பொருள் புதிது சுவைக்கத் தரும் சொல்லேர் உழவர்களின் சுடர்மிகு சந்திப்பாகவும்
‘ங’-போல் உடலை வளைத்து நலவாழ்வைக் கற்பிக்கும் அற்புத வகுப்புகளின் அணிவகுப்பாகவும் கண்மலரச் செய்து கருத்தைப் புதுப்பிக்கும் காந்தப் புலமிக்க கலை நிகழ்ச்சிகளும் வாகை சூடிய வண்ணமிகு மாணவர்கள் பங்கேற்ற வானவில் திரு விழாவாகவும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை அமைந்தது.

உலகளாவிய நிலையில் எந்தவொரு நாட்டிலும்,
இந்திய அளவில் எந்தவொரு மாநிலத்திலும் நடந்திராத வகையில் ஏழு நாள் விழாவாக மாணவச் செல்வங்களுக்கு
அரசே பொறுப்பேற்று,
அரசு அலுவலர்களே முன்னின்று நடத்திய மாபெரும் பெருவிழா இது.

இளைஞர்களின் மனங்களில் தமிழைத் தழைத்து ஓங்கச்செய்த தன்னேரிலாத் தமிழ் விழா.

கட்டுரையாளர்:
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை,
தமிழக அரசு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *