தினமணி –
14.01.2024
பக்கம் 2
நேசித்து வாசித்தது…
ஔவை அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை
நடைப்பயிற்சியின் மூலம் உடல் நலத்தைப் பாதுகாப்பதைப் போல, வாசிப்பு மூலம் மனதுக்கும், அறிவுக்கும் பயிற்சியளிப்பது முக்கியமாகும்.
நேரங்கிடைக்கும் போதெல்லாம் நூல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
தினமணியில் ஞாயிறு தோறும் தமிழ்மணியில் கலாரசிகன் எழுதிய இந்த வாரம் தொகுப்பை படித்து ரசித்தேன்.
தமிழ் இலக்கிய வரவாற்றில் தனித்திறம் மிக்கதாக, தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய சொற்களஞ்சியமாக அத்தொகுப்பு விளங்கி, வாசகர்களுக்கான வரமாக இருப்பதாக உணர்ந்தேன்.
தமிழில் புதிய இலக்கியக் கூறு என்பதாக அத்தொகுப்பு உள்ளது.
முதுமுனைவர் இறையன்பு எழுதிய
‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என்ற நூல் மாணவர்களுக்கான தனித்திறனை
மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கூறுவதாக உள்ளது.
மேடைப் பேச்சாளர்களாக விரும்புகிற அனைவருக்குமான கையேடாகவே இந்நூவை இறையன்பு எழுதியுள்ளார்.
அதை மாணவர்கள் அவசியம் வாசிக்கவேண்டும் என செல்லுமிடமெல்லாம் கூறிவருகிறேன்.
அறிஞர் அசோக் கோபால் எழுதிய ஆங்கில நூலான ‘ஏ பார்ட் அபார்ட்’ என்னும் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையையும், சிந்தனையையும் ஒருங்கே கூறுவதாக உள்ளதால் அதை ரசித்துப் படித்தேன்.
இந்திய கணக்கு மற்றும் தணிக்கைப் பணியில் உள்ள இரா.திருப்பதி வெங்கடசாமி எழுதிய தணிக்கை தெளிவாக்கமும் – செயல்முறைகளும் எனும் புத்தகம் எளிய தமிழ் நடையில் தணிக்கைத் துறை குறித்த தகவல் களஞ்சியமாகவே விளங்குகிறது.
தமிழறிஞர் சோ நா.கந்தசாமி எழுதிய ‘தொல்காப்பியமும் சங்க இலக்கியமும்’ எனும் நூலை சமீபத்தில் படித்தேன்.
அதில் தொல்காப்பிய கோட்பாடுகள் சங்க இலக்கியத்தில் எவ்வாறெல்லாம் கையாளப்பட்டுள்ளன என்பதை பல்வேறு பாடல்களை ஆதாரங்களாக்கி விளக்கியுள்ளார்.
ஆகவே, அந்த நூவைத் தமிழாயும் மாணவர்களுக்கான வழிகாட்டியாகக் கொள்ளலாம்.
வைரமுத்துவின் ‘மகாகவிதை’ நூலை ஓரிரு நாட்களுக்கு முன்பாகப் படித்தேன்.
அது நமது பஞ்சபூதங்கள் குறித்து மிக நேர்த்தியான படைப்பாக இருந்தது.

Add a Comment