நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்-
மனங்கவரும் மணிமேகலை
தினமணி -20.2.24
பக்கம் 4
சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு
ஔவை அருள் வரவேற்பு
சென்னை, பிப். 19:
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களை மொழி பெயர்க்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந. அருள் தெரிவித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற உ.வே.சாமிநாதையர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் பேசியது:
தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு தமிழக அரசு துறைகளில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.
தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பாளர் பணிக்கு தமிழ் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அதேபோல் தமிழ் வளர்ச்சி துறையில் அதிகாரிகள், உதவியாளர்கள் என 40-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன.
போதுமான
விழிப்புணர்வு இல்லாததால், இந்தப் பணி இடங்களுக்கு தமிழ் இலக்கியம் படித்தவர்கள் பெரும்பாலும் விண்ணப்பிப்பதில்லை.
தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களிடையே இதுபோன்ற வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
தமிழுக்கு அரசு செய்யும் கடமை: தொடர்ந்து அவர்
செய்தியாளர்களிடம் கூறியது:
2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்மொழியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், நூலகங்களி லும் இடம்பெறச் செய்யவும்,
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களை 25 உலக மொழிகளில் மொழிபெயர்க்கவும் தலா ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் தமிழுக்கு அரசு செய்யும் கடமை ஆகும்.
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர் பிறந்த நாளன்று, இதுபோன்ற திட்டங்களை அறிவித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.
இந்த நிகழ்வில், மாநிலக் கல்லூரி முதல்வர் இரா.ராமன், கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மெய் ரூஸ்வெல்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Add a Comment