POST: 2025-04-13T11:15:30+05:30

காட்சியும்-மாட்சியும்

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமியாண்டு (1986-87) பயிலும் போது அதே கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கியம் முதலாம் ஆண்டு பயில்வதற்க்கு இலயோலோ கல்லூரி மாணவரான
டென்சன் எக்டர் இணைந்தார்.

அதே வகுப்பில் திரைப்பட இயக்குநர் ஜெயப்பிரகாஷ் மாணவத் திலகமாக அணி சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனமும் எண்ணமும் நிறைய மாணவ மாணவியர் முதுகலைத் தமிழ் வகுப்பில் சேர்ந்த பொழுது மாநிலக் கல்லூரியே களை கட்டியது.

அந்தப் பெருங்கூட்டத்தில் தனி நிழலாக அன்பின் பெருக்காகப் பண்பின் உறைவிடமாக அண்ணல் டென்சன் எக்டர் என்னிடம் நாள்தோறும் இயல்பான தனித்தமிழில் தான் அளவளாவுவார். அன்பினைப் பொழிவார்.

அப்பொழுதே முதுகலை முடித்த பிறகு, இறையியல் கல்லூரியில் தான் இணையப் போவதாகவும்; இயேசு கிறித்து புகழ் பரப்புநராகவும் திகழப் போகிறேன் என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆண்டுகள் பல கடந்தன… மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் தன்னுடைய மாணவச் செல்வங்களுடன் அவரை நான் 29.3.25 சனிக்கிழமை அன்று நேரில் கண்டு மகிழ்ந்து நெகிழ்ந்தேன்.

எண்ணமெல்லாம் கல்லூரிக் காலம் எழுந்து நின்று நினைவுகளைப் புரட்டிப் போடக் கண்டேன்.

37 ஆண்டுகள் கழித்துப் பார்த்த போது சொல்லிலும் செயலிலும் ஏன் உருவத்திலும் எவ்வித மாற்றமின்றி, அருள் மழை பொழியும் முனைவராக; இறையியல் கல்லூரியின் தகைமைப் பேராசிரியராக;
இயேசு கிறித்து புகழ் வழித் தோன்றலாக மிளிர்ந்த காட்சியைக் கண்டவுடன்.

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு

என்ற அருங்குறள் தான் நினைவில் படர்ந்தது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *