அறிவியல் தமிழ் உலகின்
அரிய சொத்து ! நெல்லை முத்து!
(10.5.1951 – 16.6 2025 )
என் பெற்றோரின் மனம் கவர்ந்தவர்.
அண்ணா நகர் இல்லத்திற்கு அடிக்கடி வருபவர்.
அம்மாவையும் என்னையும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைத்துச் செல்லுகிறேன் என்றார்
ஆனால் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிட்டாமலேயே போய்விட்டது…
தான் படித்துத் திரட்டிய 115 நூல்களோடு
ஒரு இரும்புப் பேழையினையும் மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் நூலகத்தில் அணி செய்யட்டும் என்று என்னிடம் தொலைபேசியில் தெரிவித்து 9.8.24 அன்று நேரில் வழங்கியது நூலாற்றுப்படை நிகழ்வாகும்.
அவரின் நினைவு என்றும் உலகத் தமிழ்ச்சங்க நூலகத்தில் நீடித்து நிலைத்திருக்கும்.
அவ்வண்ணமே உலகத்தமிழ்ச்சங்கத்தில்
22.8.24 அன்று நடைபெற்ற
தமிழ்க்கூடல் நிகழ்வில் பங்கேற்றுத்
தமிழில் அறிவியல் என்ற தலைப்பில் உரையாற்றி மகிழ்ந்தார்.
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் வாயிலாக நடைபெறும் சொல்லாக்கக் குழுவிலும் உறுப்பினராய் பங்கு கொண்டு பணியாற்றிய சிறப்பும் அளப்பரியது.
ஒருமுறை Helicopter என்பதை தமிழில் உலங்கூர்தி என்று சொல்வதைவிட திறுகூர்தி என்று சொல்லலாம் என்றார்.
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று பாரத ரத்னா
அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்.
“விண்வெளி 2057”,
“அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு”,
“ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்”,
“அறிவியல் வரலாறு
( மூன்று பாகங்கள் )”
ஆகிய நான்கு நூல்களுக்கு பல்வேறு வகைப்பாட்டில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றவர்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதினைப் பெற்றவர்.
ஒருமுறை அப்பா அவரிடம் சொன்னார்
தமிழ் வளர்ச்சியில் நெல்லைச் சீமையின் பங்களிப்பு பெரியது
ஆனால் அனைத்தும் எங்கள் சென்னை எல்லைக்குள் வந்தால் தான் காவியப் புகழுடையது என்பார்கள்.
அதற்கு அவரும் நீங்கள் சொல்வதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.
தமிழ் மொழிக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பு எண்ணிலடங்கா..
விண்வெளி நாயகன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Add a Comment