தமிழ்நாடு எனும் தனிப்பெருமை

தினமணி – 18 7 2022

பக்கம் எண் : 6

நடுப்பக்கக் கட்டுரை

தமிழ்நாடு எனும் தனிப்பெருமை

ஒளவை அருள்

இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை

தமிழக வரலாற்றில் 1967-ஆம் ஆண்டு, ஜூலை 18 எனும் நன்னாள் ஒரு பொன்னாள் ஆகும்.

அன்று தான், தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர், பேரறிஞர் அண்ணா , நம் மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தார்.

அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதலுடன், அண்ணா ‘தமிழ்நாடு எனும் பெயர் சூட்டும் தீர்மானத்தை முன்மொழிய, பேரவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன், அத்தீர்மானம் அன்று சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.

‘தமிழ்நாடு வாழ்க’ என்ற அண்ணாவின் முழக்கத்தைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் ஒரே குரலில், ‘தமிழ்நாடு வாழ்க’, ‘தமிழ்நாடு வாழ்க’, ‘ தமிழ் நாடு வாழ்க’ என்று மும்முறை முழங்கிய உணர்ச்சிமயமான நிகழ்வு அப்போது நடந்தது.

பின்பு, தீர்மானத்தின் மீது பேசிய பேரறிஞர் அண்ணா , இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழர்களுக்கு, தமிழ் வரலாற்றுக்கு, தமிழ்நாட்டுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக உண்ணா நோன்பிருந்து, தனது இன்னுயிரை நீத்த, தியாகி சங்கரலிங்கனாருடைய எண்ணம் இன்று ஈடேறிவிட்டது.

அன்னாருக்கு அவர் பிறந்த விருதுநகரில், ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்படும்’ என்று அறிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், ‘நான் இந்தப் பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்டால், எனது உயிருக்கு ஊறு நேரிடும் என்று மருத்துவர்களும், நண்பர்களும் சொன்னார்கள்.

அவர்களிடம், ஆட்சிஎன்பது ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பது;ஆனால், இந்தப் பொன்னான வாய்ப்பு என்பது, ஒருவரது வாழ்வில் ஒருமுறைதான் வரும்..

தலைமுறைகள் பல தாண்டித் தழைத்து வரும் தமிழ் வழங்கும் இம்மண்ணுக்கு, தமிழ்நாடு என்ற பெயர் சூட்டும் இன்னாளில், நான் பேசுவதால் என் உயிர் பிரியும் என்றஞ்சிப் பேசாமல் இருந்தால், இந்த உடலில் உயிர் இருந்தே பயனில்லை என்று நான் சொன்னேன்’ என்று கூறிய போது, அண்ணாவின் ஆழ்ந்த தமிழ்ப் பற்றை எண்ணி,அனைவரின் கண்களும் கசிந்தன.

‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று ஓங்கி உரைத்த தறுகண்மைக்கு உரிமை உடையவர் அல்லவா அண்ணா !

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண் டும் என்று வலியுறுத்தி, தியாகி சங்கரலிங்கனார் எழுபத்தெட்டு நாட்கள் (27.7.1956 முதல் 13.10.1956 வரை) உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தது, தமிழக மக்களின் உள்ளத்தை உருக்கும் வரலாற்று நிகழ்வாயிற்று .

‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, தியாகி சங்கரலிங்கனாரின் நினைவாக, தமிழக அரசின் சார்பில், விருதுநகர் கல்லூரி சாலையில், ‘சங்கரலிங் கனார் மணிமண்டபம்’ அமைக்கப்பட்டுள்ளது.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன், தமிழக எல்லைப் போராட்டத்திலும் கலந்து கொண்டு போராடிய பெருமைக்குரியவர் ஆவார் தியாகி சங்கரலிங்கனார்.

நாடாளுமன்றத்தில் ஒருமுறை, ஒரு மாநிலத்தின் பெயர் அதன் தலைநகரின் பெயரிலேயே அமைய வேண்டும் என்று சிலர் வலியுறுத்திய போது, அறிஞர் அண்ணா , ‘குஜராத்தின் தலைநகர் அகம்தாபாத் என்பதையும், வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தலைநகர் பெயரில்தான் மாநிலத்தின் பெயர் இருக்க வேண்டும் என்றால் கேரள மாநிலம் திருவனந்தபுரம் எனவும், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் எனவும் பெயர் மாற்ற வேண்டிய தேவை ஏற்படுமே’ என்று சுட்டிக் காட்டினார்.

மேலும், தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் அது உங்களுக்குச் சோறு போடுமா, துணி கொடுக்குமா’ என்றெல்லாம் வடஇந்திய எம்.பி.க்கள் சிலர் ஏளனம் பேசிய போது, சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது

என்ற திருக்குறள் நெறிக்கேற்ப, ‘மத்ய பிரதேஷ்’, ‘உத்தர பிரதேஷ்’ என்ற பெயர்கள் உங்களுக்கு என்னென்ன கொடுக்குமோ, அவற்றையெல்லாம் தமிழ்நாடு என்ற பெயர் எங்களுக்கும் கொடுக்கும்’ எனக் கூறி, அவர்களுக்குச் செம்மையாக பதில் கொடுத்தார் அறிவுச்செம்மல் அண்ணா ! ‘

பெயரை மாற்றுவதாலேயே நிலைமை மாறி விடுமா’ என்று கேட்டவர்களுக்கு, அண்ணா , “திடீரென்று ஒருவர் தன் பெயரை மகாராஜா என்று மாற்றிக் கொள்வதாலேயே அவர் மகாராஜா ஆகி விடமாட்டார்; ஆனால், நம்முடைய மாநிலத்திற்கு தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுவதன் மூலம், நாம் தமிழரின் தொன்மைச் சிறப்புகளுக்கு ஏற்றவர்களாக, தமிழ்ப் பண்புகளுக்கு உரியவர்களாக நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு, நமக்கு மட்டுமின்றி, நம் வருங்காலத் தலைமுறையினருக்கும் ஏற்படும்”
என்று அண்ணா விளக்கம் அளித்தார்.

– இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ‘தமிழகம்’ என்றும், ‘தமிழ்நாடு’ என்றும் பதிற்றுப்பத்து, மணி மேகலை போன்ற இலக்கியங்களும், “நான் ஏகும் தேயம் தமிழ்நாடு என்று
சொல்லும், ஆங்கு இடைபயில் மனித்தரெலாம் கல்வி, கேள்வி உடையவர் என்ப
என்று திருவிளையாடற் புராணமும் குறிப்பிடுகின்றன.

மேலும், ‘தண்தமிழ் வேலி தமிழ்நாட்டு அகமெலாம்’ என்று சங்க இலக்கியமான பரிபாடலிலும், ‘இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய’ என்று ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்ட நம் மாபெரும் நிலப்பரப்பு, 1957-ஆம் ஆண்டில், இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபோதிருந்து, 1966-ஆம் ஆண்டு வரை, ‘மதராஸ் மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது.

அதனால் தான், தென்னக மக்கள் அனைவரையும், ‘மதராசி’ என்று வட இந்தியர்கள் அப்போது அழைத்து வந்தனர்.

பின்னாளில், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசிய மக்கள் வாழ்ந்த பகுதிகள் முறையே கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என்ற பெயர்களில் தனி மாநிலங்கள் ஆயின. நாடு, மொழி, இனம் போன்றவற்றுக்கு அந்தந்த வரம்பில் வாழும் மக்கள் விரும்பிய வகையில் பெயர் சூட்டுவதே மரபாகும்.

அவ்வகையில், திருப்பதி, நெல்லூர், கொள்ளேகால், திருவனந்தபுரம், பாலக்காடு போன்ற பெயர்கள் எல்லாம், மொழி வழி மாநிலங்கள் உருவாகும் முன்பே வழக்கில் இருந்த பெயர்களாகும்.

தமிழ்நாடு என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது இறுதியில் உள்ள ‘யு’ என்ற ஆங்கில எழுத்து வேண்டாமே என்று குறுகிய நோக்கத்தோடு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு அண்ணா , ‘தமிழ்நாடு
என்பது வெறும் பெயர்ச்சொல் மட்டுமன்று; அது தமிழ் மாநிலம், மக்கள், இனம், இலக்கியம், பண்பாடு போன்ற அனைத்தையும் குறிக்கும், ஆழ்ந்த பொருளுடைய அருஞ் சொல்லாகும்’ என்று எடுத்துரைத்தார்.

மேலும், ‘நாம் பெற வேண்டும் என்று நினைத்ததைப் பெற்றிருக்கிறோம்; அடைய வேண்டியதை
அடைந்திருக்கிறோம்.

இதற்குத் துணை நின்றவர்களுக்கு நாம் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம்.

சில நிகழ்ச்சிகள் சிலரால்தான் ஏற்படுகின்றன.

மாமல்லபுரம் தோன்றிய காலத்திற்கு முன்பு,அங்குச் சிற்பக்கலை இல்லை என்றோ, சிற்பக்கலையில் நாட்டமுடைய மன்னர்கள் இல்லை என்றோ பொருள் அல்ல ! ஆனால், மாமல்லன் காலத்தில்தான் அவை அங்கு ஏற்பட வேண்டும் என்பது வரலாற்றுப்பொருண்மை ஆகும்.

அதுபோலத்தான் ‘தமிழ்நாடு’ எனும் பெயர் மாற்றமும் ! நானும், ம.பொ.சி.யும், ஆதித்தனாரும் ஒரு சேர இருந்து நடத்துகின்ற இந்த ஆட்சி வந்த பிறகுதான் இந்தக் கூட்டுறவு நடைபெற வேண்டும் என்ற வரலாற்றுப் புதுமை தோற்றம் என்று நான் கருதுகிறேன்’ என்று அண்ணா குறிப்பிட்டார்.

பேரறிஞர் அண்ணா , நம் தாய்த்திரு நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய, ஜூலை 18-ஆம் நாளினையே இனி ஆண்டு தோறும் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் கொண்டாட வேண்டுமென மாண்புமிகு நம் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளது பெருமகிழ்ச்சிக்குரியது .

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நெறியிலேயே இன்றைய முதலமைச்சரின் கோட்பாடு அமைந்தது என்றும் பாராட்டத்தக்கது.

இந்தப் பொன்விழாவைப் பொலிவாகக் கொண்டாடும் நம் தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக, மாநிலம் முழுவதும், பள்ளி மாணவ, மாணவியருக்குக் கட்டுரைப் போட்டிகளும், பேச்சுப் போட்டிகளும் நடத்தும் பாங்கு, தமிழ்மக்கள் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

இந்தப் பொன்னான தருணத்தில், செந்தமிழ் நாடெனும் போதினிலே
– இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே
என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை நாம் சிறிது மாற்றிச் சொல்லி மகிழலாம் !

தமிழ் நாடு எனும் பேச்சினிலே
தனிப்பெருமை மணக்குது நம் மூச்சினிலே !

இன்று (ஜூலை 18) தமிழ்நாடு நாள்.

கட்டுரையாளர்:
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *