dc9d0852-a662-43e2-943f-af6e7dfc13c7

அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா (31.12.24) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர்..

பக்கம் 221

திருவள்ளுவ மாலையிலுள்ள சில மலர்களின் மணங்கள்..!

ஔவை அருள்,
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

திருவள்ளுவரையும் திருக்குறளையும் சிறப்பிக்கும் நூலாக விளங்குவது, ‘திருவள்ளுவமாலை’.

அதில், ஈரடி வெண்பாக்களாக குறள் வெண்பாக்களாக அமைந்தவை இரண்டு;

நாலடி வெண்பாக்களாக அவற்றிலும் பெரும்பான்மையாக நேரிசை வெண்பாக்களாக அமைந்தவை ஐம்பத்து மூன்று.

ஆக மொத்தம் ஐம்பத்தைந்து.

அறிவுமூதாட்டியார் ஔவையார்,
‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்றார்.

இடைக்காடனாரோ,
‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்றார்.

ஆண்பாற் புலவரினும், பெண்பாற் புலவர் அறிவிற் சிறந்திருந்தனர் என்பதற்கு இவையே சான்றுகள்.

திருவள்ளுவ மாலையிலுள்ள சில மலர்களின் மணங்களை நுகரலாமே!

உக்கிரப் பெருவழுதியார், நான்முகனே வள்ளுவனாய்த் தோன்றி, நான்மறைகளின் மெய்ப்பொருள்களை, அறம், பொருள், இன்பமெனும் முப்பால்களாகத் தந்ததாகவும், அந்த முப்பாலைத் தலைவணங்க வேண்டுமெனவும், வாய் வாழ்த்த வேண்டுமெனவும், நன்னெஞ்சம் சிந்திக்க வேண்டுமெனவும், செவிமடுக்க வேண்டுமெனவும் கூறுகின்றார்.

மதுரைக் கூலவாணிகர் சீத்தலைச் சாத்தனாரோ, வள்ளுவரின் முப்பால் எத்தகையது என்பதை, மிகச் சிறப்பாகப் புலப்படுத்தியுள்ளார்.

‘திருக்குறள், கொல்லிமலை, நேரிமலை, பொதியமலை என்னும் மூன்று மலைகளையும்,

குடநாடு, புன்னாடு, தென்னாடென்னும் மூன்று நாடுகளையும்,

பொருநைநதி, காவிரிநதி, வையை நதியென்னும் மூன்று நதிகளையும்,

கருவூர், உறையூர், மதுரையென்னும் மூன்று பகுதிகளையும்,

மங்கலமுரசு, வெற்றிமுரசு, கொடை முரசென்னும் மூன்று முரசுகளையும்,

இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழென்னும் மூன்று தமிழ்களையும்,

விற்கொடி, புலிக்கொடி, கயற்கொடியென்னும் மூன்று கொடிகளையும்,

கனவட்டம், பாடலம், கோரமென்னும் மூன்று குதிரைகளையும்

தாம் முறையே பெற்றுள்ள சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தர்தம் முடிகளின் மீதுள்ள ‘மாலைகள்’.

மாமூலனார், ‘
அறம், பொருள், இன்பம், வீடாகிய நான்கு உறுதிப் பொருள் களின் தன்மைகளை அறிந்து கூறிய தெய்வமாந்தன் வள்ளுவன்’ என்கின்றார்.

அரிசில் கிழாரோ,
‘சுருங்கிய சொற்களால் விளக்கமாகச் சொல்ல வல்லவர் திருவள்ளுவரைத் தவிர, வேறொருவர் யார்?’ என, வினா தொடுக்கின்றார்.

அதற்கு, ‘ஒருவருமில்லை’ எனும் எதிர்மறை விடைதான்.

முகையலூர்ச் சிறு கருந்தும்பியாரும், ஆசிரியர் நல்லந்துவனாரும் ‘எப்பா வலரினு மில்’ எனும் ஈற்றடியை வைத்தே பாடியுள்ளனர்.

முதலாமவர், ‘முப்பாலின் மிக்க மொழியுண்டெனப் பகர்வாரில்லை’ என்கின்றார்;

இரண்டாமவர், ‘முப்பால் மொழிந்த முதற்பாவலரொப்பாரில்லை’ என்கின்றார்.

முன்னடி திருக்குறளைக் குறிப்பதும், பின்னடி திருவள்ளுவரைக் குறிப்பதுமே வேறுபாடு.
திருவள்ளுவமாலையில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு மலராக உள்ள மாங்குடி மருதனாரின் வெண்பா மலரின் நறுமணத்தை முழுமையாக நுகர்வது சிறப்புடைத்து.

‘ஒதற் கெளிதா யுணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிக விளங்கி – தீதற்றோ ருள்ளுதொ றுள்ளுதொ றள்ள முருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு!

‘மலர்களுக்குள்ளே தாமரை; பொன்களுக்குள்ளே சாம்புநதம்; பசுக்களுக்குள்ளே காமதேனு; யானைகளுக்குள்ளே ஐராவதம்; தேவர்களுக்குள்ளே திருமால்; நூல்களுக்குள்ளே திருவள்ளுவரின் திருக்குறளைச் சிறந்ததெனக் கூறுவர்’ என்கின்றார் மதுரை பெருமருதனார்.

முன்னர்க் குறிப்பிட்ட முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், ஆசிரியர் நல்லந்துவனார் போலவே, நப்பாலத்தனாரும், மதுரை பாலாசிரியனாரும் ஒன்றுபடுவதைக் காணலாம்.

முன்னவர்,
‘வள்ளுவனா ரேற்றினார் வையத்து வாழ்வார்க்களுள்ளிரு ணீக்கும் விளக்கு என்கின்றார்;

பின்னவரோ,
‘வள்ளுவ ரின்குறள் வெண்பா வகிலத்தோருள்ளிரு ணீக்கு மொளி’
என்கின்றார்.

முன்னதன் ஈறு ‘விளக்கு’;
பின்னதன் ஈறு ‘ஒளி’ விளக்கின்றி ஒளியில்லை; ஒளியின்றி விளக்கில்லை.

திருக்குறளுக்குப் பதின்மர் பழைய உரைகாரரெனப் பழம்பாடல் ஒன்றுண்டு. அது வருமாறு:

‘தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிமே லழகர் பரிதி – திருமலையாள் மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற் கெல்லையுரை கண்டா ரிவர்’
இப்பதின்மருள்,

நமக்குக் கிடைத்துள்ள உரைகள், மணக்குடவர், காளிங்கர், பரிதியார், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய ஐவர் உரைகள்தாம்.

இவருள்ளும்
முந்தையோர் மணக்குடவரெனவும், பிந்தையோர் பரிமேலழகரெனவுங் கூறுவர்.

முந்தையோருரை சிறந்ததென்பது, சிலரின் கருத்து; பிந்தையோருரையே சிறந்ததென்பது, பலரின் கருத்து.

முந்தையோர் பலரிருக்கப் பிந்தையோராகிய பரிமேலழகர் சிறப்பாக உரைவகுத்தமைக்கு காலம் கை கொடுத்ததாக இருக்கலாம்.

‘தொண்டை நன்னாடு சான்றோருடைத்து’ என்பதற்கேற்ப, அவர் காஞ்சி மண்ணில் வாழ்ந்தவர் தவர் என்பதும், உலகளந்த பெருமாள் உயர்கோயிலில், அர்ச்சகராகப் பணிபுரிந்தார் என்பதும் எண்ணி மகிழ்தற்குரியன.

‘வள்ளுவர்தாம் அறம், பொருள், காமமென்னும் முப்பால்களையும் அமைத்தாரென்பதில் ஐயமில்லை.

அதிகாரத் தலைப்புகளையும் அவரே கொடுத்தார் என்பதிலும் ஐயமில்லை

ஒவ்வோரதிகாரத்திலும், குறட்பாக்கள் முறைவைப்பை, யார் செய்தார் என்பது தெரியவில்லை’ என்பார் மூதறிஞர் செம்மல் ச.வே.சுப்பிரமணியனார்.

மேலும், ‘பரிமேலழகருரையே சிறப்பானது’ என்பதற்குச் சான்றோர் சிலரின் வாய்மொழிகளை ஈங்கெண்ணிப் பார்த்தல் நலமே.

திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, அவர்தம் மாணாக்கர் தியாகராசச் செட்டியார், தெய்வ நாயகப்பிள்ளை, சுப்பராயச் செட்டியார் ஆகிய பெருமக்கள் நால்வரின் பாக்கள், விருத்தங்களாக அகவல்களாக இடம் பெற்றுள்ளன.

பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதமென்பர்.

நால்வரின் பாச்சோற்றுப் பானைகளினின்றும் பாச்சோறுகளின் பதங்களைப் பார்ப்போம்.

…பலருரையும் வியாப்பிய மாயிருக்க நாளு முன்னவாம் வியாபகமே யாகநூற் கருத்துணர்ந்தே மொழிந்தாரென்ன நன்னர்வான் புகழ்ப்பரிமேலழகருரை…

-மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்னை,

‘ஒருவா புலமைத் தருமர்முன் னாய பாடல்சால் சிறப்பிற் பதின்மர் செய்த நாடுறு முரைகளுட் பீடமைந்த தோங்கும் பரிமே லழகர் பண்ணிய வுரை”

தியாகராசச் செட்டியார்.

‘தெய்வத் திருக்குறள் மெய்ம்மலி நூலைப் பொற்பமர் தருக்களுட் கற்பக மென்னப் பலருரை யுள்ளு நிலவுற விளங்கும் பரிமே லழகர் புரியுரை..!

-தெய்வநாயகப்பிள்ளை

‘தருமர் முதலிய சால்பினர் வகுத்த திருகில்பே ருரைகளுட் சிறந்து நிலைஇய வரிமே லியல்புகழ்ப் பரிமே லழக ருளங்கனிந் தியற்றிய வளங்கனி யுரை…!

-சுப்பராயச் செட்டியார்.

தமிழ்ப் பல்கலைக்கழக முன்னைத் துணை வேந்தர் நாவரசர் ஔவை நடராசனார்,

‘திருக்குறள் உரை, பலவாகப் பெருகி வருகின்றது.
நாடெங்கும் திருக்குறள் ஆர்வம், தழைத்துச் செழிப்பது, நமக்குப் பெருமிதம் தருகின்றது.
செவ்விய புலமைக்கும், சிந்தனைச் செறிவுக்கும் ஏற்ப, நினைவார்க்கு நினையும் வகையில் புதிய விளக்கங்கள், நாளும் மலர்கின்றன’ என்கின்றார்.

மூதறிஞர் செம்மல் முனைவர் வ.சுப.மாணிக்கம் ஐயா,

‘சுருங்கிய ஈரடியால் செறிவான முறையில் நுணுகிய பொருள்களை, யாப்பு வேலியுள் அடக்க முயன்றவராகலின், பல்வேறு எழுத்து உத்திகளை வகுத்துக் கொண்டு, குறள் நூல் படைத்தார் வள்ளுவர்.

தமக்கெனச் சில உத்திகளைப் படைத்துக்கொண்டு, நூல் யாத்தார்.

1330 குறள்களையும் சில உத்திகளுக்குள் அடக்க முடியும்;

அவ்வுத்திகளைப் பயன்படுத்தினால், மயக்கமற்ற பொருள் தோன்றும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகின்றார்.

‘பௌத்தத் தமிழ்க் காப்பியச் சாத்தனார், தம்நூலுள் திருக்குறள் கருத்துகளையும் தொடர்களையும் நிரம்ப ஆளுவர்.

திருக்குறளை யாப்பாங்கு எடுத்தாண்டதோடு, தமிழிலக்கியவுலகில் முதன் முதலாகத் திருவள்ளுவரை ‘பொய்யில் புலவன்” என்ற சிறப்பு பெயராற் பாராட்டினார்.

திருக்குறளில் அதிகாரத் தலைப்புகள் கூடக் கல்வி – கல்லாமை, செங்கோன்மை-கொடுங்கோன்மை, ஊக்கமுடைமை-மடியின்மை, பெரியாரைத் துணைக்கோடல்-சிற்றினஞ்சேராமை, இரவு – இரவச்சமென, இருமை வகைபட வருதலுமுண்டு.

நட்பினை ஐந்து அதிகாரங்கள் விதிமுகத்தானும், பன்னிரண்டதிகாரங்கள் எதிர்மறை முகத்தானும் கூறுவர் திருவள்ளுவரென்பதைப் பரிமேலழகருங் குறிப்பிட்டுள்ளார்.

இன்ன அறத்தைச் செய்தால் வரும் தன்மைகளிவையென ஒரு பாங்காகவும்,
செய்யாமையால் வரும் குற்றங்களிவையென மறுபாங்காகவும் திருக்குறள் தொகுத்துக் கூறுகின்றது.

திருக்குறளின் வாழ்வுக்கோட்பாடு, இல்லறமும் துறவறமும் இணைந்தது.

பாலின்பத்தை உரிய பருவங்களிற் போற்றுவது.

ஐம்புலவின்பம் நன்கு முறையாகத் துய்க்க வேண்டும் என்பதற்காகவே, ‘காமத்துப்பால்’ பாடினார் திருவள்ளுவர்.

‘தம்பொருள் என்பதம் மக்கள்’ எனவும், ‘பெறுமவற்றுள் நன்மக்கட்பேறே சிறந்தது’ எனவும் குழந்தைச்செல்வத்தை மதித்து, ஓரதிகாரம் கண்டவர்.

ஒழுக்கத்தால்
மேன்மை எய்தலாம், அரியன செய்வார் பெரியர், முயற்சி திருவினைத் தரும்,

நாடென்ப நாடா வளத்தன.
உள்ளம் உடைமை, கண்ணோட்டத்துள்ளது உலகியல், சிற்றினமஞ்சும் பெருமை, அறிவுடையார் ஆவதறிவார், அறிவுடையார் எல்லாருடையார், கண்ணுடையரென்பவர் கற்றோர், தலைப்பட்டார்
தீரத்துறந்தார், தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்,
தோன்றிற் புகழொடு தோன்றுக, அடக்கம் அமரளுய்க்கும்,
அறத்தான் வருவதே இன்பம்
எனப் பல குறள்களில் முதற்கண் விதிமுகம் நடைப்படுத்துவதை அறிகின்றோம்.

மணிவாசகர் பதிப்பக நிறுவுநரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியரும், பதிப்புச் செம்மலுமாகிய முனைவர் ச.மெய்ப்பனார்,

“நீதி நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களெனத் தொகுக்கப் பெற்றுள்ளன.

அவற்றுள் திருக்குறளும் நாலடியாரும் பெரிதும் பயிலப் பெறும் நூல்கள்” என்பார்.

அறிவு மூதாட்டியார் ஔவையாரும், ‘ஆலும் வேலும் பல்லுக் குறுதி; நாலு மிரண்டுஞ் சொல்லுக் குறுதி’ என்றார்.

எதுகை நோக்கி நாலடியாரை முதற்கண் குறிப்பிட்டாலும், முதன்மை கருதத் திருக்குறளே சாலப் பொருந்தும்.

‘பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ ல்’ என்பதும் தனிப்பாடலடி.

மேலும், சமண முனிவர் பலரால் இயற்றப்பட்டது ‘நாலடியார்’;

திருவள்ளுவர் ஒருவராலே இயற்றப்பட்டது ‘திருக்குறள்’.

திருக்குறளைப் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவ்வளவுதாம் என்றில்லாமல், எவ்வளவும் சொல்லலாம்.

0715bb0a-5d95-46df-aba3-69a8d1e84db8

நட்பிற் உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்

முதுகலை வகுப்புத் தோழர்
பேராசிரியர் சற்குருநாதனுடன் இன்று 14.2.25 வெள்ளிக்கிழமை அண்ணல் அம்பேத்கர் கல்லூரி வளாகத்தில்

c2e96e04-efda-4530-80fd-d19b6acedbca

தொண்டு துலங்குக!

பட்டு வணிகத் திலகமாகவும்,
கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மஸ்ரீ நல்லி செட்டியார் அவர்களின் மகுடத்திற்கு மற்றொரு சிறகாக பத்மபூஷன் விருது பெறவிருக்கும் 86 அகவை நிறைந்த
நல்லிதய செம்மலை
குடியரசு திருநாளன்று (26.1.25) காலை நேரில் அவரின் கடையில் சந்தித்துப் பட்டாடை சூட்டி வாழ்த்து தெரிவித்துவிட்டு

உடனே அடுத்த நிகழ்வாக

நாட்டு மக்கள்
நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை எய்தவும்-வேண்டிப் பாடல்கள் புனைந்த பாரதியின் அனைத்து ஆக்கங்களையும் எழுத்தெண்ணி ஆண்டாண்டுக் காலமாக ஒரே பணியாக ஒப்பற்ற பணியாக செம்மையற செய்துவரும் பேரறிஞருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும்
எந்தையாரின் இனிய நண்பர் மாபெரும் தொகுப்பாளர்
பாரதியாரின் பெறாத மகன்
தனிநிலை பல்கலைக்கழகமாக மிளிரும் 91 அகவை நிறைந்த
அண்ணல் சீனி விசுவநாதன் அவர்களை குடியரசு நாளன்று (26.1.25) காலை மேற்கு மாம்பல இல்லத்தில் நேரில் சந்தித்து வணங்கிப் பட்டாடை சூட்டி வாழ்த்திய போது பெரியவரிடம் சொன்னேன் கவியரசு கண்ணதாசன் உங்களைக் குறித்து சொன்ன வரிகளை இப்போது மாற்றிச் சொல்லுகிறேன்

பாரதியே
இன்றிருந்து இந்த பத்மஸ்ரீ விருது செய்தியினை அறிந்திருந்தால் சபாஷ் பாண்டியா!
என்று தட்டிக் கொடுத்து ஒரு மாலையும் போடுவார் என்றேன்

அதற்கு பாரதிய பேரறிஞர் உடனே நாற்காலியிலிருந்து எழுந்து திரும்பி மேலே உள்ள பாரதியின்
இளைய சகோதரர்
சி விசுவநாத ஐயர் ஒளிப்படத்தை சுட்டிக்காட்டி வணங்கி
அவரால் பெற்ற பெருமை இன்று நான் பெறவிருக்கும் இவ்விருது என்று நெகிழ்ந்து சொன்னார்.

உடன் வந்த அப்பாவின் உதவியாளர் பொன்னேரி பிரதாப்புடன் சொன்னேன் நன்னாளாம் குடியரசு திருநாளில் இரு பேரறிஞர்களையும் இன்று சந்தித்த பொழுது நினைவில் வந்த வரி என்ன தெரியுமா என்றேன்

என்ன வரி என்றார் ?

உடன் சொன்னேன்

வாழ்க வாழ்க பாரத சமுதாயம் !

81955869-4ee3-4388-bf73-a2f404d8855a

கற்க நிற்க அதற்குத் தக

கன்னியாகுமரியில் 30.12.24 அன்று அய்யன் திருவள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி இழைப் பாலம் தொடக்க விழாவிற்கு பிறகு நடந்து நின்ற அற்புத தருணம்

007556f9-0dcc-4ad1-9442-c2459c5dfe5e

நின்ற சிலையும் ! வென்ற கலையும் !

முரசொலி

புதன் கிழமை

1.1.2025

பக்கம் 10

நின்ற சிலையும் ! வென்ற கலையும் !

தமிழகத்துச் சிற்பிகளின் கலைத்திறம் உலகமே கண்டு வியப்பதாகும் .

கல்லிலும், மண்ணிலும் ,மரத்திலும், சுதையிலும், சுவரிலும், பொன்னிலும் அவர்கள் செய்த அருங்கலைகள் எல்லாம் படிப்படியாக வளர்ந்து உன்னத நிலையைத் தொட்டு வெற்றிப் பெற்றதோடு, பிற நாட்டுச் சிற்பிகளின் கலைத்திறத்தையும் அந்நாளிலேயே அறிந்து தமிழகம் போற்றி ஊக்கமளித்தது.

மகதம், அவந்தி, மராட்டியம் ஆகிய பல நாட்டுக் கலைஞர்கள் தமிழகத்தில் பணிபுரிந்தனர்.

சிற்பங்களுக்குச் சிந்தை பறிகொடுத்து மகிழும் செந்தமிழ்ப்பெருமிதம் முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் எப்போதும் ஒளிர்ந்தது .

சிற்பக் கலைஞரான கணபதி ஸ்தபதி, கலைஞரின் வெவ்வேறு தமிழ் உணர்வு சார்ந்த அடையாளங்களுக்கு நெருக்கமானவர்.

பூம்புகார் மன்றங்கள் – மாடங்கள் – மண்டபங்கள் வாயிலாகக் கண்ணகி கோட்டம், சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் கடல் அலைகளுக்கு இடையே நிற்கிற ஒற்றை விரலைப் போல நிமிர்ந்து இருக்கும் ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு வடிவம் அமைக்கப்பட்டது.

திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் குமரிமுனையில் சிலை அமைப்பதாக முடிவெடுக்கப்பட்டு, அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்கள் மனத்தில் கொண்டு 38 அடி உயரத்தில் சிலையின் பீடம் அமைக்கப்பட்டு, அது அறப்பீடம் என்று அழைக்கப்பட்டது ,மீதி 95 அடி சிலையின் உயரம்.

சிலையின் முகம் மட்டும்
20 அடியாகும்.

ஒரு மாடிக் கட்டிட உயரமும் 150 டன் எடையும் கொண்டது இச்சிலையின் தலைப்பகுதியாகும்.

சிலையின் கட்டுமானத்திற்கு மொத்தம் 3,681 துண்டுக் கற்கள் பயன்படுத்தப்பட்டன.

அவைகளின் மொத்த எடை 7 ஆயிரம் டன் ஆகும்.

ஒவ்வொன்றும் 3 முதல் 8 டன் எடை கொண்ட கற்களைக் கடல் வழியாகப் படகின் மூலம் சிலை அமையவிருக்கும் பாறைக்கு எடுத்துச் சென்று, இரவு பகல் பாராது 500 சிற்பிகளைக் கொண்டு இடைவிடாது 372 நாள்களில் ஒன்பது கோடி செலவில் திரு. கணபதி ஸ்தபதி அவர்கள் இந்த
கற்காப்பிய சிற்பத்தைக் கட்டி முடித்தார்.

சிலையை வடிவமைக்கும் பணி நடைபெறும்போது, “சிலை நிற்குமோ நிற்காதோ” என்று சந்தேகமாகக் கேட்பவரிடம் எல்லாம் கணபதி ஸ்தபதி அவர்கள், “அலையும் மலையும் இருக்கும் வரை சிலை அசையாது இருக்கும், கவலைப்படாதீர்கள்” என்று கூறுவதுண்டு.

தஞ்சையில் பெருவுடையார் கோயிலின் 216 அடி உயரம் கொண்ட விமானக் கட்டுமானப் பணியின் போது, அதனைப் பார்வையிட்ட பலர், ‘விமானம் விழுந்து விடுமோ’ என்று அச்சப்பட்டதாகக் கூறுவதுண்டு.

அப்போது அதை நிர்மாணித்த குஞ்சரமல்லன் மாமன்னன் இராஜராஜப் பெருந்தச்சன் பெருமையாக, “விமானத்தின் நிழல் கூட விழாது” என்று கூறினாராம் .
அத்தகைய பெருமை வாய்ந்த குஞ்சரமல்லன் இராஜராஜப் பெருந்தச்சன் பரம்பரையில் வந்த திரு.கணபதி ஸ்தபதியும் அவ்வாறு கூறியதில் வியப்பேதும் இல்லையே !

தமிழகத்தையே உலுக்கிய ‘சுனாமி’ என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையின் போதும் எவ்விதப் பாதிப்புமின்றி, கம்பீரமாக நிற்கிறார் திருவள்ளுவர்.

“பூம்புகார் எழில் மாடத்தை என் கருத்திற்கேற்ப அமைத்துத் தந்தவரும், பாஞ்சாலங்குறிச்சியில் இடிந்த கோட்டையை எழுப்பித் தருவதற்கு உடனிருந்து உதவியவரும், வள்ளுவர் கோட்டம் வையகம் புகழ்ந்திட, உருவாகிட, சிற்பி திரு ஆச்சார் அவர்களுடன் இணைந்து, கையில் உளி எடுத்தவரும், அண்ணா அறிவாலயம் முகப்பினையும் அழகுற அமைத்துத் தந்தவரும், சிற்பச் சித்தருமான கணபதி ஸ்தபதியார் அவர்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, நமது அய்யன் வள்ளுவனுக்குக் காலத்தால் அழியாத நினைவுச் சின்னத்தை என் இதயம் இறக்கைகள் பெற்றுப் பறந்து மகிழ்கிற அளவுக்கு, என் இரத்த நாளங்களில் இன்ப அருவி பாய்ந்து பரவுகின்ற அளவுக்கு, என் சுவாசக் கோசம் ஆனந்தப் பெருமூச்சால் நிரம்பிப் பிதுங்குகின்ற அளவுக்கு, வடித்தெடுத்து நிலைநாட்டிவிட்டார். வங்கமும், இந்துவும், அரபியும் என முக்கூடல் சங்கமிக்கும் குமரி முனைப் பாறை முற்றத்தில் அவருக்கும், அவருடன் சேர்ந்து, அற்புதச் சிலையைப் பொறுப்புடன் உருவாக்கியுள்ள சிற்பிகள் ,அலுவலர்கள், பணியாளர்கள், பொறியாளர்கள் அனைவருக்கும் தமிழகத்தின் பாராட்டுக்கள் .

இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

                      திருக்குறளை நினைவூட்டி, அதன்படி என் ஆய்வுக்கேற்ப முடித்தமைக்காக ஆயிரம், பதினாயிரம், லட்சோபலட்சம் நன்றி மலர்களைத் தூவுகின்றேன் " என்று வைர வரிகளால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதினார்கள்.

133 அடி உயரங்கொண்ட திருவள்ளுவர் சிலைபோல கருத்தாழமுள்ள – முற்றிலும் கல்லால் ஆன கட்டுமான நுட்பங்கள் செறிந்த சிலையாக – எங்கணும் எவரும் கண்டதில்லை, கேட்டதுமில்லை, நினைத்துப் பார்த்ததுமில்லை.

வெற்றி கண்ட இப்பணி, சிற்பக்கலை மரபுக்கு மேலுமொரு அணியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

செவ்வனே முடிவுற்ற திருவள்ளுவர் சிலைப் பணி 01.01.2000 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் நாட்டுக்கும் – தமிழினத்துக்கும் வழங்கப்பட்டது .

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதைத் தொடர்ந்து 30.12.2024 முதல் 1.1.2025 வரை மூன்று நாள்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்துகிறார்கள்.
மாபெரும் வரலாற்றுப் பொன்னேடு மலர்ந்த புனித நன்னாள் 25 ஆண்டுகளுக்குப்பின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று மீண்டும் எழுச்சிக் கோலம் கொண்டு வெள்ளி விழா என்னும் முத்திரையோடு கன்னியாகுமரி மட்டும் அல்ல: தமிழ்நாடு முழுவதுமே விழாவின் வீச்சினை பரப்பி நிற்கிறது.

பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டிகள்.
கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் – ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டிருக்கின்ற இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு, எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி (3D Laser) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ் இணையக் கழக மையங்கள். தமிழ்ச் சங்கங்கள். பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்கள். புது டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றில் யூடியூப் மூலம் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழ் இணையக் கழக மையங்கள் மூலமாகத் திருக்குறளின் பெருமைகள் குறித்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட நூலகங்களிலும், இன்றைய விழா நாளில் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு திருக்குறளின் பெருமைகளை உணர்த்துகின்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுத் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

திருக்குறள் விளக்க உரைகள் மற்றும் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் முதலியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

37 கோடி ரூபாய் செலவில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலம் கட்டப்பட்டு அதனை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திருக்குறள் நெறிபரப்பும் 25 தகைமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்குவதும்

கலைமாமணி சொல்வேந்தர் திரு.சுகி.சிவம் அவர்கள் தலைமையில் “திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே சமுதாயத்திற்கே எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றமும்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டி; திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலர் வெளியிடுவதோடு திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவியர்க்குப் பரிசுகள் வழங்கப்படவிருக்கிறது.

சமகாலத்தில் வள்ளுவர். திருக்குறளும் சங்க இலக்கியமும். வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம்.
திருக்குறள் போற்றும் மகளிர் மாண்பு.
வள்ளுவம் காட்டும் அறம். திருக்குறளில் இசை நுணுக்கம் என்கிற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெறவள்ளது.

தமிழகத்துக்கு நிலையான நெடும் புகழ் காட்டும் வரலாறு நின்ற சிலையாகவும் வென்ற கலையாகவும் என்றும் விளங்கி வருவது தமிழினத்தின் நற்பேறாகும்.

aa3e7696-cbc5-4048-bbd1-f79d5ab783a5

ஆய்வுக்கூட்டம்

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 24.12.24 செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்,
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் (பொறுப்பு), பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மொழியாக்க விண்மீன்

மொழியாக்க வானின் விண்மீன் மறைந்ததே!

திரு. பொன் சின்னதம்பி முருகேசன்
(2.7.1949 – 02.10.2024)

அரிய ஆங்கில நூல்களை அருந்தமிழுக்கு ஆக்கி உரிய தமிழ்த் தொண்டால் உயர்ந்த பெருந்தகை முருகேசனை இழந்து விட்டோமே!

உறங்கா விழிகள்
ஒழியா உழைப்பு

மிகுதுயர் எந்தன்
உள்ளம் மேவிடச்
செய்தாய் நண்ப
ஆழ்கடல் அமிழ்ந்ததே!

தமிழ்நாடு அரசுப் பணியில் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு தான் கற்ற ஆங்கிலத்தையும் தான் பெற்ற அருந்தமிழையும் இணைத்து அறிவியல், மெய்யியல் பொருளியல் துறைகளிலுள்ள ஆங்கில நூல்களை தமிழாக்கங்களை தனிநிலையில் செய்தவரை திசையெட்டும் இதழாசிரியர் மொழிபெயர்ப்பு உலகின் கலங்கரை விளக்கமாக ஒளிரும் திரு குறிஞ்சி வேலன் அவர்களால் அடையாளம் கண்டவர் தான் திண்டுக்கல் திரு. சின்னதம்பி முருகேசன் ஆவார்.

2013-2014 ஆம் ஆண்டுகளில் தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவில் உதவிப் பிரிவு அலுவலர்கள் ஒருவரும் இல்லாமல் 16 பணியிடங்களும் வெற்றிடமாக நிலவிய சூழலில் அரசு நிலையில் ஓராண்டுக்கு தற்காலிகமாக ஓய்வு பெற்ற மொழிபெயர்ப்பாளர்களை தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அவ்வகையில் பணியில் சேர்ந்த ஐவருள் ஒருவராக வந்தவர் தான்
திரு. பொன் சின்னதம்பி முருகேசன்.

பத்தாண்டுகளுக்கு முன் அவர் தலைமைச் செயலகத்தில் சார்பு செயலாளர் நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணியில் சேர்ந்த முதல் நாளே கணினியில் தான் தட்டச்சு செய்யும் இயல்புடையவன் என்றவுடன் யான் மகிழ்ச்சியில் துள்ளினேன்.

அவருக்கு இட்ட பணிகள் அனைத்தையும் விரைந்து செய்து முடிக்கும் ஆற்றல் திலகமாக மிளிர்ந்ததோடு தமிழில் இருந்து ஆங்கிலத்திலேயும் மொழிபெயர்ப்பு செய்வதில் இணையற்றவராக திகழ்ந்தார்.

ஓராண்டில் நிலுவையாக இருந்த ஈராண்டுப் பணிகளையும் வெல்லும் விரலாலும் சொல்லாலும் நிறைவேற்றி மீள திண்டுக்கல் சென்றார்.

திரு. சின்னதம்பி முருகேசன் அவர்கள் தமிழ்நாடு அரசின் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதினைப் பெற்றவர்.

சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய இலக்கிய தாகத்தில் நான் கேட்கும் போதெல்லாம் மரபுக் கவிதைகளாக எழுதிக் குவித்தார்..

எந்தையாரும் அவரைப் பெரிதும் பாராட்டினார்.

அப்பாவை குறித்து பிள்ளைத்தமிழ் எழுதச் சொன்னேன் உடன் மறுத்தார்.

எனக்கு அந்த புலமை இல்லை என்று வருந்தினார்.

பிறகு நான் ஔவை பிள்ளைத்தமிழை ஆங்கிலத்திலேயே குடந்தைப் பேராசிரியர் சங்கரநாராயணன் எழுதியதை அனுப்பி தமிழாக்கம் செய்து தாருங்கள் என்று கேட்ட பொழுது படித்துவிட்டு வைரத்தால் புனைந்த ஆங்கில வரிகளை மொழியாக்கம் செய்வது எளிதல்ல என்று சொல்லி வருந்தினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வாயிலாக கிரேக்க காப்பியமான ஓமரின் ஒடிசியின் 24 படலங்களையும் மரபுக் கவிதை வடிவில் முதன்முதலாக தமிழ் உலகில் படைத்துக்காட்டிய பெருமைக்குரியவர் ஆவார்.

அவர் எந்த வரியைத் தொட்டாலும் பொன்னாக்கும் சொற்செல்வர் எனலாம்.

சென்ற வாரம் வரை கிரேக்க ஏனிட் காப்பியத்தை தமிழாக்கம் செய்து மின்னஞ்சல் அனுப்பிய பிறகு தொலைபேசியில் என்னிடம் நீண்ட நேரம் பேசும் பொழுதே இனி கணினிக்கு அருகில் என்னால் செல்ல முடியாது..
பல்வகை நோயால் தாக்கப்பட்டுள்ளதால் இல்லம். மருத்துவமனை என்று தான் இருக்கப் போகிறேன்

நிறைவாக நீங்கள் சொன்ன பணியினை தான் செய்தேன் என்று துயரத்தோடு விம்மியவாறு சொன்ன பொழுது நான் நம்பவில்லை அவர் நேற்று மாலை மியாட் மருத்துவமனையில் மறைந்தார் என்று அவர் மகன் சிவகுமார் மகள் கண்மணி கதறிய பொழுது விண்மீன் மறைந்ததே என்று உருகினேன்.

நினைவுகளும் உணர்வுகளும் என்றென்றும் நிலைத்திருக்கும்.